சீனே மாறுதே.. பாமக உள்ளே வருதா? வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு பற்றி ஸ்டாலின் திடீர் ஆலோசனை!
சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு குறித்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளதற்குப் பின்னணியில் பாமக உடனான கூட்டணி கணக்குகள் இருக்குமோ என்ற விவாதங்கள் கிளம்பியுள்ளன.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது சட்டம் இயற்றப்பட்டது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பாக, பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி அந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக சட்டசபையில் அந்த மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

வன்னியர் உள் ஒதுக்கீடு: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதோடு, 25-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவை அனைத்தும் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதிகள், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து தமிழக அரசு சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அண்மையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின் மீட்டிங்: இந்த நிலையில், இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் விரிவான ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான வில்சன், சட்டத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனையின்போது, தமிழக ஆளுநர் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் நிலுவையில் வைத்திருப்பதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் நேற்று தமிழக அரசு வழக்கு தொடுத்திருந்த நிலையில், மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டிய வாதங்கள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தேர்தல் அறிவிக்கும் நாளில்: 2021ல் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவிருந்த நாளில் அவசர அவசரமாக வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதிமுக கூட்டணியில் இடம்பெற என்றால், இந்த சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பாமக நிர்ப்பந்தம் செய்ததாலும், வட மாவட்டங்களில் வன்னியர் சமூக வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்பதாலும் அதிமுக அரசு அப்போது இந்தச் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வந்தது என பலராலும் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருப்பது விவாதங்களைக் கிளப்பியுள்ளது. வரும் தேர்தலில், பாமகவை கூட்டணியில் சேர்த்து, வன்னியர் சமூக வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்வதற்கான திட்டமாக இருக்கலாம் என்ற பேச்சுகள் விமர்சகர்களிடையே எழுந்துள்ளன.

திமுக கூட்டணியில் பாமக?: அதேசமயம், இந்த இட ஒதுக்கீடு சட்டம் விவகாரம் திமுக கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் விசிகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். வன்னிய மக்களின் வாக்குகளை வாரிக் கொள்வதற்கான சூழ்ச்சி என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், திமுக அரசு, இந்த சட்டம் குறித்து தற்போது ஆலோசித்து வருவது கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தக் கூடும் எனத் தெரிகிறது. முதல்வர் ஸ்டாலின், பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக இந்த முடிவை எடுக்கிறாரா, அல்லது பாமகவை வெளியில் வைத்து வன்னியர் சமூக மக்களின் ஆதரவை திமுகவுக்கு திருப்ப முயற்சிக்கிறாரா என்ற விவாதங்கள் கிளம்பியுள்ளன. போகப்போக, இதன் திசை புரியத் தொடங்கலாம்.
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்?












Click it and Unblock the Notifications