"அய்யய்யோ ஆள விடுங்க.." சசிகலா புஷ்பா பற்றி வந்து விழுந்த கேள்வி! உடனே வார்த்தையை விட்ட கீதா ஜீவன்
சென்னை: பாஜகவின் சசிகலா புஷ்பா மற்றும் கீதா ஜீவன் இடையே மோதல் முற்றி வரும் நிலையில், சசிகலா புஷ்பா குறித்து செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் கீதா ஜீவன் அளித்த பதில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் பாஜக தலைவர்களுக்கு இடையேயான வார்த்தை மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் பேசுபொருளானது.
இது தொடர்பாக திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார். அதற்கு அண்ணாமலை பாத யாத்திரை செல்லும் போது, கடந்த 10 வருடச் செலவுகளை வெளியிட உள்ளதாக அறிவித்தார்.
தேர்வு கிடையாது.. ரூ.36,000 முதல் ரூ.1.80 லட்சம் வரை சம்பளம்.. அழைக்கும் இந்திய விமான ஆணையம்!
மோதல்
இது ஒரு பக்கம் இருக்கச் சமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர் கீதா ஜீவனை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். சத்துணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவுகள் உடைந்தும் அழுகியும் இருப்பதாக அவர் விமர்சித்தார். இதற்குக் கடுமையாகப் பதிலடி கொடுத்த கீதா ஜீவன், "ஒவ்வொரு அமைச்சர் குறித்தும் பேசுவதை நிறுத்திக் கொள். இல்லையேல் நீ பேசிக் கொண்டிருக்கும் போதே அதே மேடையில் ஏற வேண்டியிருக்கும்" என்று கூறியிருந்தார்.
மிரட்டல்
திமுக அமைச்சர் இப்படிப் பேசியது பரபரப்பைக் கிளப்பியது. இதற்குத் தூத்துக்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா கடுமையான பதிலடி கொடுத்திருந்தார், பாஜக கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், "நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, நாக்கு இருக்காது. திமுக மாவட்ட செயலாளர் ஆகிவிட்டதால் தலைகால் புரியாமல் இருக்கிறார். உங்கப்பா பெரிய ரவுடி. அவரையே அடக்கி ஒடுக்கி உட்காரவைத்தோம்" என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.
புகார்
இதனிடையே சசிகலா புஷ்பா வீடு மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவரது வீட்டு கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தூத்துக்குடி பிஎன்டி காலணியில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டில் முன்பு இருந்த பொருட்கள் அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டது. இதனால் அங்குச் சற்று பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே அமைச்சர் கீதா ஜீவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சசிகலா புஷ்பாவை கைது செய்ய வேண்டும் எனச் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது
திமுக அமைச்சர் கீதா ஜீவன்
இந்தச் சூழலில் நேற்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கி பேசினார்.
கர்ப்பிணிப் பெண்கள்
அப்போது அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில் கர்ப்பிணி தாய்மார்கள் சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும்.. அது குழந்தை வளர்ச்சிக்கு உதவும் என்பதால் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.. கர்ப்பிணிப் பெண்கள் டென்ஷன் இல்லாமல் இருக்க வேண்டும்.. வன்முறை காட்சி உள்ள திரைப்படங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.. நடிகர் வடிவேல் நகைச்சுவை காட்சிகளை அதிகம் பார்க்க வேண்டும்.. மெல்லிய இசை கேட்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
பரபர பதில்
பாஜகவின் சசிகலா புஷ்பா மற்றும் கீதா ஜீவன் இடையே மோதல் முற்றி வரும் நிலையில், சசிகலா புஷ்பா குறித்து செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "அய்யய்யோ விடுங்க ... நீங்க வேற ! அவ கிடக்கா" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். சசிகலா புஷ்பா மற்றும் கீதா ஜீவன் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், அமைச்சர் அவரை ஒருமையில் பேசியது பேசுபொருளாகியுள்ளது.