தாமரைக்கு 5 தொகுதிகள்! திமுக- அதிமுகவில் தலைதூக்கும் ‘சன்’ அரசியல்!
சென்னை: 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் பிரகாசமாக உள்ளதாக சர்வே ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கை நிர்ணயித்துள்ளது பாஜக. அந்த மாதிரியான எந்த இலக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

காரணம், ஒரு காலத்தில் காங்கிரஸ் செல்வாக்கை நம்பி இருந்தன மாநிலக் கட்சிகள். ஆனால், இன்றைக்கு மக்களவை தேர்தலில் மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக மக்களவை திமுக இருக்கிறது. அது ஒரு மாநிலக் கட்சி.
அதைப் போல் அனைத்து மாநிலக் கட்சிகளும் தங்களின் பலத்தை மக்களவையில் பதியவைக்க வேண்டும் என அரசியல் கணக்குப் போட்டுச் செயல்பட்டு வருகின்றன. எனவேதான் 'இந்தியா' என்ற மெகா கூட்டணி ஆரம்பித்த கொஞ்சம் காலங்களிலேயே அது பலவீனமடைய ஆரம்பித்துள்ளது.
ஏற்கெனவே செல்வாக்கை இழந்துபோன காங்கிரஸை ஏன் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்ப வேண்டும் என பல மாநிலக் கட்சிகள் தங்களுக்குள்ளாகவே கணக்குப் போட்டு வருகின்றன.

அதன் விளைவாகவே மம்தா, 'இந்தியா' கூட்டணிக்கு பை பை சொல்லி இருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஆம் ஆத்மியும் கைகழுவி விட்டது. இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க இடதுசாரிகளும் 'இந்தியா' கூட்டணியை விட்டு வெளியேறுவதற்காக வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் தேர்தல் நேர யுக்திகளை வகுக்கும் வல்லுநர்கள்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் குழப்பம் இல்லை. ஆனால், மனக்கசப்புகள் இருக்கின்றன என்கிற தகவல் கசிந்து வருகிறது. குறிப்பாக இரண்டு சீட் செல்வாக்கில் உள்ள விசிகவுக்கு இந்த முறை ஒரு சீட் தான் கிடைக்கும் என்கிறார்கள்.
அப்படி என்றால் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் மட்டும் நிறுத்தப்படலாம். அக்கட்சி திருவள்ளூர் தொகுதியையும் சேர்த்துக் கொள்ளும் ஆசையில் வலம் வருகிறது. அதற்கு திமுகவில் வாய்ப்பு மிகமிகக் குறைவாகவே உள்ளது என்கிறார்கள்.

இந்த 2024 மக்களவைத் தேர்தல் என்பது வாரிசுகளின் தேர்தலாக இருக்கும் என்கிறார்கள். குறிப்பாக திமுகவில் நேரு மகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மகன், ஏ.வ.வேலுவின் 'சன்' எனப் பல 'சன்'கள் களம் இறங்க உள்ளனர். அதைப்போல் அதிமுகவிலும் பல 'சன்'கள் நிறுத்தப்பட உள்ளனர் என்று தகவல் கசிந்து வருகிறது.
திமுகவைப் பொறுத்தளவில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே 2024 மக்களவைத் தேர்தலுக்குக் களத்தைத் தயார் செய்துவிட்டது. களப்பணியில் முந்திக் கொண்டாலும் திமுக கடந்த முறைபோல் எளிமையாக வெல்ல முடியாது. அதற்குக் காரணம், அது ஆளும் கட்சியாக இருப்பது.
மத்தியில் பாஜக ஆளும் கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் மக்களவை உறுப்பினர்களாக திமுகவினர்தான் உள்ளனர். கடந்த முறை பாஜக எதிர்ப்பு கூடவே அதிமுக எதிர்ப்பு எனக் களம் திமுகவுக்கு ஆதரவாக இருந்தது.

இந்தமுறை அப்படி இல்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 100% வேலை செய்தால் 40% விளைச்சலை எடுக்க முடியுமா? என்பது கேள்விக்குரியதாக உள்ளது. குறிப்பாகச் சொன்னால் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக திமுக எதிர்ப்பு என்பது கூடி இருக்கிறது.
மகளிருக்கு 1000 ரூபாய், மழைக்கு 6 ஆயிரம் ரூபாய், பொங்கலுக்கு 1000 ரூபாய் எனப் பணத்தைக் கொடுத்து பெண்களை தங்கள் பக்கம் தக்கவைத்துள்ளதாக திமுக தைரியமாக இருந்து வருகிறது. அந்தத் தைரியம் கள நிலவரத்தில் வேறுபடலாம் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.
ஆகவே, இந்த முறை திமுக 1000 யானைகளின் பலத்தைக் காட்ட வேண்டும். அதற்கு வாய்ப்பு உள்ளதா எனத் தெரியவில்லை. கடந்த காலங்களில் திமுக இந்தளவுக்கு மக்கள் மனங்களை மாற்ற ஸ்டாலின் பிரச்சாரம் பெரிய உதவியாக இருந்துள்ளது.

இந்த முறை அவர் அதே வேகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா? அல்லது மகனை அனுப்பி வைப்பாரா? எனக் கேள்வி எழுகிறது. மகனை மட்டுமே அவர் நம்பினால், பிரச்சார களம் யானை பலத்திலிருந்து குறைந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.
என்னதான் திமுக கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் களப்பணியைத் தொடங்கிவிட்டாலும், அதை ஒரு பலமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆளும் கட்சி சந்திக்கக் கூடிய எதிர்ப்பை திமுக இந்த முறை சந்தித்தே ஆகவேண்டும். அது அவர்கள் முன்னால் நிற்கும் சவால் என்றே சொல்ல வேண்டும்.

திமுகவின் நிலை இப்படி என்றால் அதிமுக நிலை மிகமிக மோசமாக உள்ளது. கடந்த காலங்களில் ஸ்டாலின் வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டதைப் போல் எடப்பாடி பழனிசாமி செயல்படவே இல்லை. அவர் இன்னும் ஆளும் கட்சி மனநிலையை விட்டுத் தாண்டவே இல்லை.
இதை நாம் சொல்லவில்லை. தமிழ்நாடு அரசியலில் துடிப்பான எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி இல்லை என அவரது ட்ராக் ரெக்கார்ட் சொல்கிறது. மாநில ஆளும் கட்சியையும் வலுவாக எதிர்க்காமல், மத்தியில் உள்ள ஆளும் கட்சியையும் எதிர்க்காமல் அவர் பலவீனமாக இருக்கிறார்.
தமிழக அரசியல் களத்தைப் பொறுத்தளவில் அண்ணாமலை டாக் ஆப் தி டவுன் ஆக அவர் இருக்கிறார். குறிப்பாக ஆளுநர் ரவியும், அண்ணாமலையும் தான் இன்றைக்கு எதிர்க்கட்சி போல் செயல்படுகின்றனர்.

திமுகவை எதிர்த்து இன்றைக்கு வைக்கப்படும் குற்றச்சாட்டில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? எழுப்பப்படும் புகார்கள் எந்தளவுக்குச் சரியாக இருக்கிறது என்பதை எல்லாம் தாண்டி அண்ணாமலை களத்தில் தொடர்ந்து ஆளும் கட்சியுடன் மோதிக் கொண்டிருக்கிறார்.
அத்துடன் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடிக்கு எதிரான அண்ணாமலையின் போராட்டம் இன்றைக்குச் சாதகமாக உள்ளது. எப்படியும் தேர்தல் நெருங்குவதற்குள் பொன்முடி கைது செய்யப்படலாம் என பாஜக தரப்பு தகவலைப் பரப்பி வருகிறது.
திமுகவில் தற்போது எம்.பி.ஆக உள்ள பலர் இந்த முறை மீண்டும் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு குறையும் என்கிறார்கள். அதில் முதல் இடத்தில் இருப்பவர் வேலூரில் கதிர் ஆனந்த். அவர் நின்றால் திமுக கட்டாயம் தோல்வியைத் தழுவும் என்கிறார்கள்.

இவரைப் போலவே தமிழச்சி தங்க பாண்டியன், தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, டி.ஆர்.பாலு, தருமபுரி டாக்டர் செந்தில்குமார் எனப் பலருக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை எனக் கூறுகிறது கருத்துக் கணிப்பு நடத்தி இருக்கும் லயோலா முன்னாள் மாணவர் சங்கமான ஐபிடிஎஸ்.
ஆ.ராசா, அவரது தொகுதியில் 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பார் என்கிறது இந்த சர்வே. அங்குப் பல மாதங்களாக எல்.முருகன் தேர்தல் வேலை செய்து வருகிறார்.

ஆனால், அவர் வைட்டமின் வசதி இல்லாமல் தவித்து வருகிறார். இந்தியன் படப் பாணியில் சொன்னால் முக்கியமான பேப்பர்களை அவர் எடுப்பதில்லையாம். எனவே ராசா, அங்கே ராஜாவாக வலம் வருகிறார்.
அதிமுக பெயரளவில் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்தக் குழுக்களைப் போட்டாலும், எடப்பாடி பழனிசாமி இந்த நாடாளுமன்றத் தேர்தலைப் பெரிய அளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அசட்டையாகவே இருந்து வருகிறார். ஏனெனில் அதிமுகவுடன் பலமான கட்சிகள் எதுவும் கூட்டணிக்கு வரவில்லை.
தேமுதிக, பாமக, ஐஜேகே, அமமுக என இரண்டாம் நிலையில் உள்ள கட்சிகள் கூட மோடியை நம்பி பாஜக பக்கமே உள்ளனர். அதிமுகவுடன் தமீமும் அன்னாரி, ஐடிபிஐ போன்ற கட்சிகள் உள்ளன. கூடுதல் பலம் உள்ளதாக ஒரு தோற்றத்தை உருவாக்க வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த குருவின் மகனை தன் பக்கம் இழுக்க எடப்பாடி முயன்று வருவதாகச் சொல்கிறார்கள்.

இந்தக் குதிரைகளை நம்பி நாடாள முடியாது என்பது தெரியாதவர் அல்ல எடப்பாடி பழனிசாமி. ஆகவே, அவர் இந்த முறை கட்சியில் உள்ள வாரிசுகளுக்குச் சீட்டுகளை வாரி வழங்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். தொகுதியில் யார் பலமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு 'அள்ளி' தரும் அளவைப் பொறுத்து சீட்டுகள் ஒதுக்க அவர் விரும்புவதாகப் பேச்சுகள் அடிப்படுகின்றன.
இதைப்போலவே காங்கிரஸ் எம்.பிகள் மீண்டும் நின்றால் தோல்வி நிச்சயம் என்கிறது சர்வே. கார்த்திக் சிதம்பரம் நிலையும் இதேதான்.

தென்சென்னை, வேலூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள் பாஜக ஆதரவாக உள்ளதாக சர்வே சொல்கிறது என்கிறார் ஐபிடிஎஸ் திருநாவுக்கரசு.
இவர் ஒரு யூடியூப் சானலுக்கு அளித்துள்ள பேட்டியில் அளவுக்கு அதிகமாகவே பாஜகவை ஆதரித்துப் பேசி இருக்கிறார். அவர் சொல்லும் அளவுக்குத் தமிழ்நாட்டில் பாஜக களம் பலமாக இல்லை. எனவே இவரது சர்வேவும் அதிகாரப்பூர்வமான முடிவுகள் அல்ல.












Click it and Unblock the Notifications