உதயநிதி சனாதன ஒழிப்பு பேச்சு: 'ஜெகத் கஸ்பர்' அதிரடி சர்வே முடிவு- இப்படியா சொல்றாங்க? அதிரும் திமுக!
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசிய சர்ச்சை குறித்து தமிழ் மையத்தின் நிறுவனரும் சமூக செயற்பாட்டாளருமான ஜெகத் கஸ்பர் தமது நிறுவனம் நடத்திய சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு பேச்சுதான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வரை இந்தியா தழுவிய அரசியல் விவாதப் பொருளாக இருந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், லோக்சபா தேர்தலுக்கான பிரசார ஆயுதமாகவும் 5 மாநில தேர்தல் பிரசார ஆயுதமாகவும் இதனை கையில் எடுத்தனர்.

இதனிடையே டிவி நிகழ்ச்சி ஒன்றில் சமூக செயற்பாட்டாளர் ஜெகத் கஸ்பர் பங்கேற்று பேசுகையில் அமைச்சர் உதயநிதியின் சனாதன தர்மம் ஒழிப்பு பேச்சு குறித்து தமது நிறுவனம் நடத்திய சர்வே முடிவுகளை வெளியிட்டு பேசினார். இது தொடர்பாக ஜெகத் கஸ்பர் பேசியதாவது:
57% பேர் உதயநிதிக்கு ஆதரவு- அதிமுக உட்பட: சனாதனத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி பேசியது சரி என 57% பேர் சொல்லி இருக்கின்றனர். இப்படி ஆதரவு தெரிவித்தவர்கள் யார் எனவும் ஆய்வு செய்தோம். இவர்களில் அண்ணா திமுகவினரும் இருக்கின்றனர். ஏனென்றால் அவர்களும் திராவிடர் இயக்க பாரம்பரியத்தில் வருகிறவர்கள். 21% பேர் சனாதனம் என்றால் என்ன என்றே தெரியாது என தெரிவித்துள்ளனர். அரசியல் அறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் குறைந்து கொண்டே வருவதையே இது வெளிப்படுத்துகிறது. இது கவலையான ஒன்று.

15% பேர் தவிர்த்திருக்கலாம்: 15% உதயநிதி, சனாதன தர்மம் ஒழிப்பு பேச்சை தவிர்த்திருக்கலாம் என கூறியுள்ளனர். இப்படி தெரிவித்திருப்பது யாரென்று ஆய்வு செய்து பார்த்தால் 'காங்கிரஸ்' கட்சியினரே அதிகம் பேர்.
7% உதயநிதிக்கு எதிர்ப்பு: 7% பேர்தான் அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை ஒழிப்போம் என பேசியது தவறு என கூறியுள்ளனர். இப்படியான பேச்சு கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளனர்.

இப்படி பேசியிருந்தால் திமுக அவுட்: இதே உதயநிதி ஸ்டாலின், சைவ நெறியை ஒழிக்க வேண்டும் என பேசியிருந்தால் அடுத்த தேர்தலில் திமுக அவுட். இதில் சந்தேகமே இல்லை. வைணவத்தை, ஆழ்வார்களை, திவ்யபிரபந்த மரபை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தால் திமுக அவுட் அல்லது பாதிப்பை எதிர்கொண்டிருக்கும். ஒருவேளை கருப்பண்ணாசாமியை ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கட்டும். கொங்கு நிலத்தில் திமுகவால் ஒரு ஓட்டு வாங்க முடியாது. தென்னகத்தில் அய்யா வைகுண்டர் வழியை ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தால் தென்னகம் (தென்மாவட்டம்) முழுவதும் திமுக கடுமையான பின்னடைவை சந்தித்திருக்கும். ஆனால் 57% பேர் இன்றும் உதயநிதி ஸ்டாலின் பேசியது சரிதான் என்கின்றனர். தேர்தலில் இந்த பேச்சு பாதிப்பை ஏற்படுத்தாது என்கின்றனர்.
தென்னிந்திய ஆளுமை உதயநிதி: கூகுள் அனாலிட்டிக்ஸில் சனாதனம் குறித்து எந்த மாநிலம் அதிகமாக தேடியிருக்கிறது எனில் கடந்த ஒரு மாதத்தில் தெலுங்கானா மாநிலம்தான் அதிகமாக தேடி உள்ளது. ஆந்திரா தேடி உள்ளது. கர்நாடகா மாநிலம் தேடி இருக்கிறது. அதாவது தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தென்னிந்தியாவின் ஒரு ஆளுமையாக சனாதன சர்ச்சை மாற்றி இருக்கிறது என்பது இணைய வழி தேடுதல்கள் தெரிவிக்கும் புள்ளி விவரம். இவ்வாறு ஜெகத் கஸ்பர் பேசினார்.












Click it and Unblock the Notifications