"எதுவும் சரியில்லை".. எச்.ராஜா மீது குவிந்த புகார்.. மேலிடம் கறார்.. விசாரணையில் குதித்த எல்.முருகன்
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்தே தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுக்கு இடையில் கடுமையான கருத்து மோதல்கள் நிலவி வருகின்றன. இதன் காரணமாக, டெல்லி தேசிய தலைமை தமிழ்நாடு பாஜகவில் நடக்கும் மோதல்களை மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்த பாஜக 4 இடங்களில் வென்றது. பாஜகவின் முக்கியமான உறுப்பினர்களில் ஒருவரான பாஜகவின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் எச். ராஜா காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால் காரைக்குடியில் இவர் படுதோல்வி அடைந்தார். இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்களின் தோல்விக்கான காரணம் குறித்து விசாரணை சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

விசாரணை
வேட்பாளர்களின் தேர்தல் தோல்விக்கான காரணத்தை பாஜக தேசிய மேலிடம் ஒரு பக்கம் தமிழ்நாடு தலைமையிடம் விசாரிக்கும்படி சொல்லி இருந்தது. இன்னொரு பக்கம் தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சிடி ரவியிடமும் இது தொடர்பாக விசாரித்து ரிப்போர்ட் அளிக்கும்படி கூறி இருந்தது. இதையடுத்தே பாஜக வேட்பாளர்களின் தோல்விக்கான காரணம் குறித்து விசாரணை சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

சிக்கல்
இந்த விசாரணை நடந்து கொண்டு இருந்த போதுதான் சரியாக காரைக்குடி பாஜக நிர்வாகிகளுக்கும், எச். ராஜாவிற்கு இடையில் மோதல் வந்தது. எச். ராஜா தனது தோல்விக்கு நிர்வாகிகள் வேலை பார்க்காததே காரணம் என்று பகிரங்க புகார் வைத்தார். கோபத்தின் உச்சிக்கு சென்ற பாஜக நிர்வாகிகள் பலர் மொத்தமாக கூண்டோடு எச். ராஜாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து வெளியேறினார்கள்.

தலைமை
இந்த சம்பவம் தமிழ்நாடு பாஜக மட்டுமின்றி டெல்லி பாஜக தலைமைக்கும் சென்றுள்ளது. இந்த நிலையில்தான் தேர்தல் தோல்வி குறித்து பாஜக விசாரணை நடத்தும் நிலையில், எச். ராஜா தேர்தல் நிதி எதையும் செலவு செய்யவில்லை என்று பாஜக காரைக்குடி நிர்வாகிகள் குண்டை தூக்கி போட்டனர். பாஜக தேசிய தலைமை தேர்தல் செலவிற்காக கொடுத்த பணத்தில் 4 கோடி ரூபாயை எச். ராஜா செலவு செய்யவில்லை என்று நிர்வாகிகள் புகார் வைத்தனர்.

ஆதாரம்
அதோடு இதில் அவர் புதிய வீடு கட்டுவதாகவும் புகார் வைத்தனர். 4 கோடியை எச். ராஜா செலவு செய்யவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை என்றாலும் கூட, இந்த புகார் டெல்லி தலைமையின் கவனத்திற்கு சென்றுள்ளது. காரைக்குடி பாஜக நிர்வாகிகளுக்கும் எச். ராஜாவிற்கும் தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுதான் இப்போது மோதல் வெடிக்க காரணம் என்கிறார்கள். தேர்தல் பணிகளை செய்வதில் சில மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

தேசிய தலைமை
இதுவே எச். ராஜா இப்போது சிக்க காரணம் என்கிறார்கள். எச். ராஜா குறித்து மட்டுமின்றி, தமிழ்நாட்டு பாஜகவில் பல்வேறு கருத்து வேறுபாடுகள், மோதல்கள் உள்ளன, நிர்வாகிகள் ஒற்றுமையாக இல்லை என்றும் டெல்லி தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளது. இதையடுத்து உடனே இதை விசாரித்து பிரச்சனையை தீர்க்கும்படி தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனுக்கு உத்தரவு பறந்துள்ளது. அதோடு தேர்தல் செலவினங்கள் குறித்தும் கணக்கு காட்ட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாம்.

2 ரிப்போர்ட்
தமிழ்நாடு பாஜக 4 இடங்களில் வென்ற காரணத்தால் ஒரு பக்கம் தேசிய தலைமை குஷியில் இருந்தாலும், இன்னொரு பக்கம் இது போன்ற முறைகேடு புகார்களால் கொஞ்சம் அதிருப்தியிலும் இருக்கிறதாம். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜகவிடம் கறாராக உத்தரவுகளை தேசிய தலைமை பிறப்பித்துள்ளது. இதனால்தான் எல். முருகன் உடனே இதை விசாரித்து தவறு நடந்தது எங்கே என்று ரிப்போர்ட் அளிக்கும்படி கூறியுள்ளார். இது போக இன்னொரு பக்கம் சிடி ரவியும் இது குறித்து ரிப்போர்ட் அளிக்க வேண்டும்.

காரணம்
எச். ராஜா மீது தொடர் புகார்கள் வைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக கண்டிப்பாக விசாரிப்போம் என்று எல். முருகன் வெளிப்படையாக கூறியுள்ளார். எச். ராஜா தரப்பு விளக்கத்தையும் அவர் விரைவில் கேட்க உள்ளார். அதேபோல் காரைக்குடி பாஜக நிர்வாகிகள் கொடுக்கும் விளக்கத்தையும் கேட்பார். அதன்பின் தேர்தல் செலவினங்களை கணக்கிட்டு டெல்லிக்கு எல். முருகன் கணக்கு காட்ட உள்ளார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications