அது எப்படி சாத்தியமாகும்? உதயநிதி போட்ட கண்டிஷன்.. உடனே ஸ்டாலினுக்கு வந்த சந்தேகம்.. ட்விஸ்ட்
சென்னை: துணை முதல்வர் அறிவிப்பு தள்ளிப்போவதற்கு உதயநிதிதான் காரணம் என புதிய தகவல்கள் கிடைக்கின்றன. உதயநிதியை துணை முதல்வராக அறிவிப்பதற்கு சீனியர் அமைச்சர்கள் எல்லோரும் ஒப்புக் கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. அதனை ஸ்டாலினிடமே வெளிப்படையாக தெரிவித்து விட்டனர்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் மகன் என்பதை தாண்டி துணை முதல்வர் ஆவதற்கான எந்த சீனியாரிட்டியும் உதயநிதிக்கு இல்லை என்பது திமுகவின் ஆணி வேர்கள் என சொல்லப்படும் தொண்டர்கள் முதல் சீனியர் உடன்புறப்புகள் வரை எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். அப்படியிருந்தும் உதயநிதிக்கான பதவி உயர்வை சீனியர்கள் ஏற்கவே செய்கின்றனர்.

அப்படியானால், விவகாரம் எங்கே வெடிக்கிறது ? என்று விசாரித்தபோது, 4 விசயங்கள் திமுக தரப்பில் சொல்லப்படுகிறது. அதாவது, துணை முதல்வர் பொறுப்பை ஏற்கும் போது துரைமுருகன் உட்பட சீனியர் அமைச்சர்கள் 4 பேரை கேபினெட்டில் இருந்து நீக்க வேண்டும் ; ஒருவேளை இது முடியாது என்றால், கேபினெட்டில் முதல்வருக்கு அடுத்த இரண்டாவது ஸ்தானம் தனக்கு வேண்டும் ; மூன்றாவது இடத்திற்கு துரைமுருகன் தள்ளப்பட வேண்டும்.
திமுக அமைப்பில் மாற்றம் கொண்டு வரும் வகையில், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்கிற அளவுகோலில் சீனியர்களிடம் 2-க்கும் மேற்பட்டுள்ள மாவட்டங்கள் பறிக்கப்பட வேண்டும் என்கிற நிபந்தனைகளை முதல்வரிடம் சொல்லியிருக்கிறார் உதயநிதி. அதைக் கேட்டு முதல்வருக்கு அதிர்ச்சி.
உடனே அது எப்படி சாத்தியமாகும்? சீனியர்களை முழுமையாக எடுத்துவிட்டு கட்சியையும் ஆட்சியையும் நடத்துவதும் அரசியல் செய்வதும் கடினம். தேவையற்ற சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும் என உதயநிதிக்கு அட்வைஸ் செய்திருக்கிறார். இதனை உதயநிதியால் ஏற்கமுடியவில்லை. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தான் துணை முதல்வர் அறிவிப்பு தள்ளிப்போகிறது.
அனேகமாக, பவள விழா பொதுக்கூட்டம் 28-ந்தேதி காஞ்சிபுரத்தில் நடப்பதால் அதற்குள் அறிவிக்கப் பட வேண்டும் என்று உதயநிதியின் நலன் விரும்பிகள் காய்களை நகர்த்தி வருகின்றனர்'' என்று திமுகவில் பரவி வருகிறது.
அதிகாரி யார்?: உதயநிதி துணை முதல்வாராக பதவி உயர்வு அளிக்கப்பட்டதும் அவருக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்த செயலாளர் பதவியை பிடிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர்கள் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் லாபி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
குறிப்பாக, முதல்வர் ஸ்டாலினுக்கு அட்வைஸராக இருக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் சிபாரிசை கேட்டு நெருங்கி வருகின்றனர். ஆனால், உதயநிதியோ வேறு சிலரின் ஆலோசனையைக் கேட்டு தனக்கான செயலாளர்களை முடிவு செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளாராம். முக்கியமான ஐஏஎஸ் ஒருவரின் பெயரும் இதில் உள்ளதாம். அதேபோல, அவருக்கான தனி உதவியாளர்கள் பதவியை கைப்பற்ற, ஐ.ஏ.எஸ். அல்லாத அதிகாரிகளும் கிச்சன் கேபினெட்டை அணுகி வருகிறார்கள்.
இந்த நிலையில், அரசியல் பி.ஏ. ஒருவரை உதயநிதி நியமித்துக்கொள்ள முடியும். அவர் அரசு அதிகாரியாக இருக்க மாட்டார். அந்த பதவியை பிடிக்க முன்னாள் பத்திரிகையாளர்கள் சிலரும் முயற்சித்து வருகின்றனர். முதல்வரிடம் ஆதிக்கம் செலுத்தும் முக்கியஸ்தரின் உதவியைக் கேட்டுள்ளார்கள். உதயநிதியின் துணைமுதல்வர் பதவியை வைத்து பலரும் பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலினிடமும் ஆட்சியிலும் பவர் ஃபுல்லாக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், உதயநிதியை சுற்றியிருக்கும் பதவிகளுக்கான அதிகாரிகளை முடிவு செய்யும் திட்டத்தில் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications