தேவர் தங்க கவசம்! உரிமைகோரும் ஓபிஎஸ் & எடப்பாடி! திடீரென பொறுப்பாளரையே சந்தித்த திமுக அமைச்சர்! பரபர
சென்னை: தேவர் தங்கக் கவசம் கோரி எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் என இருவருமே கடிதம் எழுதி உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் ராஜ கண்ணப்பன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் அக். 28 முதல் 30 வரை கொண்டாடப்படும்.. இந்த ஆண்டும் இதைக் கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே இப்போது மீண்டும் தேவர் தங்கக் கவசம் விவகாரம் பேசுபொருள் ஆகியுள்ளது. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி இருவருமே தங்கக் கவசத்திற்கு உரிமை கோருகின்றனர்.

தங்கக் கவசம்
ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்குக் கடந்த 2014இல் அதிமுக சார்பில் தங்கக் கவசம் ஒன்று அணிவிக்கப்பட்டது. 13.5 கிலோ எடையுள்ள இந்த தங்கக் கவசத்தின் மதிப்பு 4.5 கோடி ரூபாய் ஆகும். இந்த தங்கக் கவசம் எப்போதும் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் வைக்கப்பட்டும். ஒவ்வொரு ஆண்டும் தேவர் குரு பூஜை சமயத்தில் மட்டுமே தங்கக் கவசம் வங்கியில் இருந்து எடுத்து வரப்படும்.

ஓபிஎஸ், எடப்பாடி
அதிமுக பொருளாளரும் தேவர் நினைவிட பொறுப்பாளரும் வங்கியில் கையெழுத்திட்டுத் தங்கக் கவசத்தைப் பெற்று வருவார்கள். இப்போது கட்சி ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என்று இரு பிரிவுகளாக உள்ள நிலையில், தங்கக் கவசத்தை யாருக்குக் கொடுக்கலாம் என்பதில் குழப்பம் நிலவுகிறது. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என இருவரமே தங்களுக்குத் தான் தங்கக் கவசத்தைக் கொடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளனர்.

அதே பிரச்சினை
முன்னதாக கடந்த 2017இல் இதேபோல பிரச்சினை ஏற்பட்டது அப்போது எடப்பாடி, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் என்று மூன்று தரப்பினர் கடிதம் எழுதி இருந்தனர். யாருக்குத் தங்கக் கவசத்தைக் கொடுத்தாலும் பிரச்சினை ஏற்படும் என்பதால் தேவர் நினைவிட பொறுப்பாளர் முன்னிலையில் மதுரை கலெக்டரிடம் தங்கக் கவசம் கொடுக்கப்பட்டது. அப்போது அதேபோல மீண்டும் இரு தரப்பினரும் தங்கக் கவசத்தைக் கோருகின்றனர்.

மீண்டும் குழப்பம்
ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அவர் தான் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்றும் திண்டுக்கல் சீனிவாசன்தான் பொருளாளர் என்றும் கூறுகின்றனர். மற்றொரு புறம், சுப்ரீம் கோர்டில் வழக்கு உள்ளதைச் சுட்டிக்காட்டும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், கட்சியின் பொருளாளர் ஓபிஎஸ்தான் என்று கூறுகின்றனர். இதனால் தேவர் தங்கக் கவச விவகாரத்தில் மீண்டும் குழப்பமான சூழல் ஏற்பட்டு உள்ளது.

அமைச்சர் ராஜ கண்ணப்பன்
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். முத்துராமலிங்க தேவரின் 60வது குருபூஜை மற்றும் 115 ஜெயந்தி விழா வரும் 28 முதல் 30 வரை நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே அங்கு நடைபெறும் விழா பணிகளை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பார்வையிட்டார்.

முக்கிய தகவல்
அப்போது அவர் தேவர் நினைவிடத்திற்குச் சென்று மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். மேலும், தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜனை சந்தித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவரிடமும் நலம் விசாரித்தார். தங்கக் கவச விவகாரத்தில் இரு தரப்பும் கடிதம் எழுதி உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் அரசு இதில் துணை நிற்கும் என்றும் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications