லஞ்ச ஒழிப்பு ரெய்டு நடைமுறை என்ன? கைது உண்டா?
சென்னை ;லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடைமுறை பெரும்பாலும் மிக ரகசியமாக வைக்கப்படும். கைது நடவடிக்கைகள் எப்போது நடக்கும் என்பதற்கும் சில நடைமுறைகள் உண்டு. இன்று முன்னாள் அமைச்சர் சம்பந்தப்பட்ட இடங்களில் நடக்கும் லஞ்ச ஒழிப்பு சோதனையில் கைது இருக்குமா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
தமிழகத்தில் இன்று காலை முதல் அதிமுகவின் கொறடா, முன்னாள் அமைச்சர் கொங்கு நாட்டின் முக்கிய அரசியல் தலைவரான எஸ்.பி.வேலுமணி இல்லம், அவரது சகோதரர், உறவினர்கள், அவருடன் சம்பந்தப்ப நண்பர்கள், அலுவலர்கள் என அவர்கள் சம்பந்தபட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தியதுதான் இன்றைய ஹாட் நியூஸ்.

லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடக்கும்போதே மறுபுறம் அதிமுகவினர் தங்கள் எதிர்ப்பை காண்பிக்க குவிந்துவிட்டனர். ஆனாலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவர்கள் பணியை திட்டமிட்டப்படி கச்சிதமாக முடித்தனர். ஆர்.ஏ.புரம் அபார்ட் மெண்ட் உட்பட எங்குமே தங்காமல் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கியிருந்த எஸ்.பி.வேலுமணியை சரியாக மோப்பம் பிடித்து நெருங்கியது டிஎஸ்பி ராமதாஸ் தலைமையிலான தனிப்படை.
இந்த நிமிடம் வரை அவரை அங்கே வைத்து விசாரித்து வருகிறார்கள். பொதுவாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடைமுறை எப்படி இருக்கும் சற்றே பார்ப்போம். லஞ்ச ஒழிப்பு போலீஸார் தனி பிரிவுடன் செயல்படுபவர்கள் ஆவர். அவர்களுக்கு தனியாக டிஜிபி அந்தஸ்து அதிகாரி அதற்கு கீழ் ஏடிஜிபி, ஐஜி, டிஐஜி என வரிசையாக அதிகாரிகள் உள்ளனர்.
பொதுவாக இரண்டுவிதமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இயங்குவார்கள். ஒன்று புகார்களை வைத்து புகார்தாரர்கள் அளிக்கும் தகவல்களை வைத்து லஞ்சம் வாங்கும் நபர்களை திட்டம் போட்டு ஷேடோ அமைத்து ரெட் ஹாண்டடாக பிடிப்பார்கள். இதை ட்ராப் வைப்பது என்று அவர்கள் பாஷையில் சொல்வார்கள். பணம் நகைகளை லஞ்சமாக பெறுபவர்களிடம் லஞ்சம் கொடுக்கும் நபரை பேசவைத்து இடம் நேரம் உள்ளிட்டவற்றை முடிவு செய்வார்கள்.
பின்னர் ரசாயனம் தடவிய பணம், அல்லது பொருளை கொடுத்தனுப்புவார்கள். அதை வாங்கும்போது கையுங்களவுமாக பிடிப்பார்கள். இப்படி பிடிபடுபவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைப்பார்கள். அதிலும் கூட சில நேரம் சொந்த ஜாமீனில் விடுவிக்கும் நிகழ்வும் நடப்பது உண்டு.
அடுத்த முறைதான் இன்று நடக்கும் ரெய்டு போன்ற முறை. வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை எல்லாம் ரெய்டு ஒரே மாதிரி தான் செய்வார்கள். யார் மீது ரெய்டு நடக்கப்போகிறதோ, அவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் மாதக்கணக்கில் திரட்டப்படும். அவர்கள் யார் யாருடன் தொடர்பில் உள்ளார்கள் என்பதெல்லாவற்றையும் சேகரிப்பார்கள்.
இவைகள் அனைத்தும் சம்பந்தப்ப்ட்ட மேலதிகாரிக்கு மட்டும் தெரியும். மற்றும் அவருக்கு கீழுள்ள அதிகாரிகளுக்கு யார் அது சம்பந்தப்பட்ட அதிகாரியோ அவருக்கு மட்டுமே தெரியும். மற்றப்பணிகள் எல்லாம் பிரித்து பிரித்து அளிக்கப்படுவதால் யாருக்கும் முழு விவரம் தெரியாது. இவைகள் அனைத்துக்கும் காரணம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விஷயம் லீக் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
பின்னர் குறிப்பிட்ட நாளை ரெய்டுக்கு தேர்வு செய்வார்கள், இது மேலதிகாரி மற்றும் ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். பின்னர் ரெய்டு செல்வதற்காக வாடகைக்கு வாகனங்கள் பிடிக்கப்படும். திடீரென அதிகாரிகள், போலீஸாரை அலுவலகம் வரச்சொல்வார்கள். அனைவரும் ஒரே நேரத்தில் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு சென்று ரெய்டு நடத்துவார்கள்.
ரெய்டுக்கு போகும் ஆய்வாளர் அந்தஸ்து அதிகாரிக்கேக்கூட அது தெரியாமல் இருக்கும். பின்னர் பாதுகாப்புக்கு சட்டம் ஒழுங்கு போலீஸாரை அழைத்துக்கொள்வார்கள். ரெய்டு நடப்பது 160 சிஆர்பிசி அடிப்படையில் சம்மன் கொடுத்து ரெய்டு நடத்தி விசாரணை செய்வார்கள். விசாரணைக்குப்பின் ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள், ஹார்டிஸ்குகள் என எது தேவையோ அவைகளை பட்டியலிட்டு கையெழுத்து வாங்கி பெற்றுச் செல்வார்கள்.
இதுபோன்ற நேரங்களில் கைது நடவடிக்கை 98% இருக்காது. 160 சிஆர்பிசியின் கீழ் சம்மன் கொடுத்து விசாரணைக்கு வரச்சொல்லிவிட்டே செல்வார்கள். அரசியல் அல்லது வேறு சில முக்கிய சந்தர்ப்பத்தில் மட்டுமே கைது நடவடிக்கை இருக்கும்.
இன்றும் எஸ்.பி.வேலுமணி கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு அதிகாரிகளின் பதில் 98% இல்லை என்பதே. அவரிடம் சிஆர்பிசி 160 விதியின் கீழ் சம்மன் அளித்து விசாரணைக்கு வரச் சொல்வார்கள் மற்றவர்களுக்கும் அவ்வாறே அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
அதே அடிப்படையில் இந்த எஸ்.பி.வேலுமணிக்கும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications