அதிமுகவில் செயல்பட்ட மனோபாலா.. என்ன பொறுப்பு தெரியுமா? நினைவலைகள் இதுதான்.. பகிர்ந்த ஜெயக்குமார்
சென்னை: திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா இன்று காலமானார். அவருக்கு உடலுக்கு திரையுலக கலைஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் மனோபாலா அதிமுகவில் செயல்பட்டது பற்றிய பல விஷயங்களை முக்கிய தகவல்களாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் பகிர்ந்துள்ளார்.
திரைப்பட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் மனோபாலா. இவர் 500க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

மேலும் இவர் 40 திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியிருந்தார். தற்போதும் யூடியூப் சேனல் தொடங்கி அதில் பல்வேறு பிரபலங்களை பேட்டியெடுத்து வந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தான் அவருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்த மனோபாலா இன்று காலமானார்.
நடிகர் மனோபாலாவின் உடல் சென்னை சாலிகிராமம் எல்.வி.சாலையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.. அங்கே மனோபாலா உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை 10 மணிக்கு மேல் வளரசவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் தான் மனோபாலாவின் உடலுக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து மனோபாலா பற்றிய விஷயங்களையும், அவருக்கும் அதிமுகவுக்கும் இடையேயான தொடர்பு குறித்தும் பல விஷயங்களை நினைவு கூர்ந்து பேசினார். இதுபற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக பல்லாண்டு காலம் மனோபாலா இருந்தார். தமிழ்நாட்டில் அனைத்து மூலை முடுக்குகளுக்கும், பட்டித்தொட்டிக்கும் கழகத்தின் கொள்கைகள், லட்சியங்களை பரப்பினார். ஜெயலலிதாவின் திட்டங்களை தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்து சென்று அதிமுகவுக்கு உழைத்தவர் தான் பாசத்துக்குரிய மனோபாலா.
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களை இவர் கொண்டிருந்தார். நகைச்சுவை நடிகர்களாக பலர் இருந்தாலும் நகைச்சுவை காட்சிகளில் தனி முத்திரை பதித்தவர் மனோபாலா. இவரது இழப்பு என்பது திரையுலகுக்கு மட்டும் இன்றி தமிழ்நாட்டில் உள்ள அவரது ரசிகர்களுக்கும் தான். கலைத்துறையில் பல்லாண்டு காலம் பணியாற்றி நகைச்சுவை தென்றல் இப்போது மறைந்துள்ளது. மனோபாலாவுக்கு அதிமுக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கெள்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் மனோபாலா பிறந்தார். ஏறக்குறைய 40 படங்களை அவர் இயக்கி உள்ளார். 2 படங்களை தயாரித்துள்ளார். அதுமட்டுமின்றி 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். கால் நூற்றாண்டில் திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் அவர் இல்லை என்றாலும் கூட அவரது நினைவுகள், கலைத்துறைக்கு ஆற்றிய சிறப்புகள் திரைப்படங்கள் வாயிலாக என்றென்றும் நிலைத்து இருக்கும். திரையில் மனோபாலா வந்தாலே மகிழ்ச்சி இருக்கும். மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய மனோபாலா இன்று நம்மிடையே இல்லை. இது பெரிய மனக்குறை. கலைத்துறையின் பங்கு என்பது உலகம் இருக்கும் வரை நீடித்து இருக்கும்'' என்றார்.
முன்னதாக மனோபாலாவுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தார். அதில், ‛‛மனோபாலாவின் மரணம் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றேன். கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவரும்,தலைமை கழக பேச்சாளரும் ஆன மனோ பாலாவைபிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்'' என குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications