இஸ்லாமிய நாடுகளே மாறி மாறி தாக்கிக்கொள்வது ஏன்? அதென்ன சன்னி - ஷியா வேறுபாடு.. ஒரு சிம்பிள் விளக்கம்
துபாய்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் இப்போது இடி முழக்கங்களாக மாறியுள்ளன. 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' (Operation Epic Fury) என்ற பெயரில் அமெரிக்காவும், 'ரோரிங் லயன்' (Roaring Lion) என்ற பெயரில் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ நிலைகளைத் தாக்கின. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
ஏன் துபாய் மற்றும் அண்டை நாடுகள் இலக்காகின?
துபாய், அபுதாபி அல்லது கத்தார் போன்ற நாடுகள் ஈரானுடன் நேரடியாகப் போரிடவில்லை. இருப்பினும் இந்த நாடுகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. அதிலும் புனிதமான ரமலான் மாதத்தில். இந்த நாடுகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளங்கள் உள்ளன. உதாரணமாக:

கத்தார்: அல் உதைட் விமான தளம் (Al Udeid Air Base) - அமெரிக்காவின் மத்திய கிழக்கிற்கான பிரதான தளம்.
UAE (துபாய்/அபுதாபி): அல் தஃப்ரா தளம்.
பஹ்ரைன்: அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தலைமையகம்.
தங்கள் மீதான தாக்குதலுக்கு இந்தத் தளங்களே காரணம் என ஈரான் கருதுகிறது. "எங்கள் மீது தாக்குதல் நடத்த உங்கள் மண்ணைப் பயன்படுத்த அனுமதித்தால், நீங்களும் எதிரிகளே" என்ற ஈரானின் எச்சரிக்கையே இப்போது ஏவுகணைகளாக துபாயின் பாம் ஜுமேரா (Palm Jumeirah) மற்றும் அபுதாபி துறைமுகங்கள் அருகே விழுந்துள்ளன.
முஸ்லிம் நாடுகளுக்குள் ஏன் இந்தத் தீராத பகை?
மனிதர்களிடையிலான ஒற்றுமைதான் இஸ்லாமின் அங்கங்களில் ஒன்று.. ஆனால் அப்படிப்பட்ட இஸ்லாமிய நாடுகள், தங்களுக்குள் ஏன் மோதிக்கொள்கின்றன? இதற்குப் பின்னால் ஆயிரக்கணக்கான ஆண்டுகால பிரிவினையும், தற்கால அதிகாரப் போட்டியும் உள்ளன.
1. சன்னி - ஷியா (Sunni vs Shia): 1400 ஆண்டுகாலப் பிரிவு
இஸ்லாமிய மார்க்கத்தின் இரண்டு பெரிய பிரிவுகள் இவை. நபிகள் நாயகத்தின் மறைவுக்குப் பிறகு, இஸ்லாமிய சமூகத்திற்கு யார் தலைமை தாங்குவது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்தப் பிரிவுக்கு அடிப்படை.
சன்னி (Sunni): "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரே தலைவராக வேண்டும்" என நம்பியவர்கள். இவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களைத் தலைவராக ஏற்றுக்கொண்டனர். இன்று உலகில் 85-90% முஸ்லிம்கள் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் (சவுதி அரேபியா, UAE, எகிப்து போன்றவை).
ஷியா (Shia): "நபிகளாரின் ரத்த உறவான அலி (ரலி) மற்றும் அவரது வாரிசுகளே தலைமை தாங்க வேண்டும்" என நம்பியவர்கள். ஈரான் தான் உலகின் மிகப்பெரிய ஷியா நாடு. ஈராக் மற்றும் லெபனானிலும் இவர்கள் கணிசமாக உள்ளனர்.
2. அதிகாரப் போட்டி (The Power Struggle)
இது வெறும் மதம் சார்ந்தது மட்டுமல்ல; யார் இந்தப் பிராந்தியத்தின் 'பாஸ்' (Boss) என்பதில் சவுதி அரேபியாவுக்கும் (சன்னி தலைமை) ஈரானுக்கும் (ஷியா தலைமை) இடையே நடக்கும் நிழல் யுத்தம். ஈரான் தனது செல்வாக்கை அதிகரிக்க ஹிஸ்புல்லா (லெபனான்), ஹூதிகள் (ஏமன்) போன்ற ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளிக்கிறது. இது சவுதி மற்றும் UAE போன்ற நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
3. இஸ்ரேல் உடனான உறவு
முன்பெல்லாம் அனைத்து அரபு நாடுகளும் இஸ்ரேலை எதிரியாகப் பார்த்தன. ஆனால், ஈரானின் அச்சுறுத்தல் அதிகரித்ததால், "எதிரிக்கு எதிரி நண்பன்" என்ற அடிப்படையில் UAE மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகள் 'ஆபிரகாம் உடன்படிக்கை' (Abraham Accords) மூலம் இஸ்ரேலுடன் கைகோர்த்தன. இது ஈரானுக்குப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நிலை: வளைகுடா நாடுகளின் தர்மசங்கடம்
வளைகுடா நாடுகள் இப்போது இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கின்றன. ஒருபுறம் பாதுகாப்புக்காக அமெரிக்காவை நம்பியிருக்க வேண்டிய சூழல்; மறுபுறம் அமெரிக்காவுக்கு இடம் கொடுத்தால் பக்கத்து நாடான ஈரானின் ஏவுகணைகளுக்குப் பலியாக வேண்டிய நிலை.
துபாயில் நடந்த தாக்குதல்கள் உலகப் பொருளாதாரத்தையே உலுக்கியுள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்வு முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து ரத்து வரை போர் இப்போது ஒவ்வொரு நாட்டின் கதவையும் தட்டத் தொடங்கிவிட்டது.
1400 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஒரு தலைமைப் போட்டி, இன்று நவீன ஏவுகணைகளாக உருவெடுத்து மத்திய கிழக்கின் அமைதியைப் புதைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications