சென்னை மயிலாப்பூரில் 115 அடி ஆழத்தில் அன்டர்கிரவுண்டில் மெட்ரோ ஸ்டேஷன்! பணிகள் முடிவது எப்போது?
சென்னை: சென்னை மயிலாப்பூரில் தரையிலிருந்து 115 அடி ஆழத்தில் 4 நிலைகளில் மெட்ரோ ஸ்டேஷன் அமைவதுதான் சவாலான விஷயம் என்றும் இந்த மெட்ரோ பணிகள் எப்போது முடியும் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மெட்ரோ ரயில்வே திட்ட இயக்குநர் கூறியதாவது: மெட்ரோ ரயில் நிலைய 2ஆம் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இதில் பூமிக்கடியில் அமைக்கப்படும் ரயில்நிலையங்களில் மிகவும் சவாலானது என்றால் அது மயிலாப்பூர் மெட்ரோ ஸ்டேஷன்தான். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் காரிடார் 3 , 4 ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று குறுக்கிடுகின்றன.

காரிடார் 4 என்பது கலங்கரை விளக்கத்தில் தொடங்கி கச்சேரி சாலை வழியாக வந்து மயிலாப்பூருக்கு வருகிறது. அது போல் காரிடார் 3 ராயப்பேட்டையிலிருந்து ஆர்கே சாலை வழியாக மயிலாப்பூருக்கு வருகிறது.
இதில் சவாலான விஷயம் என்னவென்றால் காரிடார் 4 இல் கச்சேரி சாலையில் அதன் அகலம் குறைவாக இருக்கும். எனவே காரிடார் 4, 3யில் உள்ள தண்டவாளங்கள் இணையாக இல்லாமல் ஒன்றன் மீது ஒன்று இருக்கும். கச்சேரி சாலையை தாண்டியதும் மயிலாப்பூர் வரும் போது அந்த தண்டவாளங்களாக இணைகளாக மாறிவிடும்.
அது போல் காரிடார் 3யில் ராயப்பேட்டையில் இருந்து வரும் போது ஆர்.கே. மடம் சாலையில் (RK Mutt Road) அதன் அகலம் அதிகமாக இருக்கும். மயிலாப்பூர் பக்கம் வரும் போது சாலையின் அகலம் குறைந்துவிடும். மண் சோதனை செய்த போது 18 மீட்டர் அல்லது 20 மீட்டரிலேயே பாறைகள் இருக்கின்றன. இதனால் நாங்கள் 10 மீட்டர் வரை பாறைகளை வெட்ட வேண்டியதாக இருக்கிறது.
4 ஸ்டேஷங்களை பூமிக்கடியில் அமைத்து எஸ்கலேட்டர்கள், லிப்ட்களை எல்லாம் நிறைய இருக்கின்றன. இரண்டாம் கட்ட ரயில் பணிகளில் இதுதான் கடைசியாக இருக்கும். இந்த ரயில் நிலையத்தை கட்டி முடிக்க 2027ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திட்டமிட்டிருந்தோம். டெண்டர் பணிகள் கோர தாமதமானதால் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிக்க போகிறோம்.
அந்த 2028ஆம் ஆண்டு 2ஆம் ரயில் பணிகள் முழுவதும் முடிந்துவிடும். சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ பணிகளுக்காக போக்குவரத்தை மாற்றியமைத்துள்ளோம். இதற்காக மக்கள் பெருவாரியாக ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். சென்னை முழுக்க 76 கிலோமீட்டர் நீளத்திற்கு போக்குவரத்தை மாற்றி வைத்திருக்கிறோம்.
இன்னும் ஓராண்டுக்குள் இந்த 76 கிலோமீட்டரில் வைத்துள்ள பேரிகார்டுகளை 90 சதவீதம் முற்றிலும் எடுத்துவிடுவோம். பட் ரோடு டூ ஆலந்தூர், சோழிங்கநல்லூர், ஓஎம்ஆரிலிருந்து சிறுச்சேரி வரை உள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் பேரிகார்டுகள் நீக்கப்படும்.
பூமிக்கடியில் அமைக்கப்படும் 28 ஸ்டேஷன்களுக்கு டெண்டர் தாமதமாகத்தான் கோரினோம். ஸ்டேஷனை பொருத்தமட்டில் பூமிக்கடியில் இருப்பதை பொருத்தவரை 140 மீட்டர்தான். இதை முடிக்கவே இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். இந்த இடத்தில் மட்டும்தான் போக்குவரத்து பிரச்சினை இருக்கும். மற்ற இடங்களில் உள்ள எலிவேட்டர்களை ஓராண்டுக்குள் எடுத்து முடித்துவிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பணிகளுக்காக கடந்த ஆண்டு முதல் கச்சேரி சாலை மற்றும் அதை சுற்றியுள்ள சாலைகளில் 3 ஆண்டுகளுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications