எம்ஜிஆர் நினைவு நாளில் கருணாநிதிக்கு விழாவா? கொந்தளிக்கும் அதிமுகவின் ஜெயக்குமார்!
சென்னை: எம்ஜிஆர் நினைவு நாளில் அதாவது தமிழ்நாடே துயரத்தில் இருக்கிற நாளில், கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் திமுக சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ் திரையுலகம் சார்பில் கலைஞர் 100 என்ற பெயரில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கலைஞர் 100 எனும் மிக பிரம்மாண்டமான விழாவாக வரும் 24.12.2023 ஞாயிறு அன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் தெலுங்கு கன்னடம், பெங்காலி, மலையாளம், இந்தி, மராத்தி, ஒரியா, குஜராத்தி என பல மொழி திரைப்பட கலைஞர்களை இந்த விழாவில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது. கலைஞர் வசனம் எழுதிய படங்களில் இருந்து பல்வேறு காட்சிகள் நேரடியாக நடித்து காட்ட திரைப்பட நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர்.
டிசம்பர் 24-ல் விழா: இந்த மாபெரும் விழாவில் முதல்கட்டமாக கலைஞானி கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விழாவில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொள்வர். சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் குறைந்த பட்சம் 35 ஆயிரம் பேர் இந்த விழாவினை அமர்ந்து பார்க்கும் வண்ணம் மேடை அமைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், எம்ஜிஆர் நினைவு நாளில் அதாவது டிசம்பர் 24ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது:- பாரத ரத்னா பட்டம் நடிப்பு உலகத்தில் மட்டும் இல்லை, நிர்வாகத்திலும் கூட இருக்கிறது.
தமிழ்நாடே துயரத்தில் இருக்கும்: இன்றைக்கும் ஒரு சகாப்தம் என்று சொன்னால் அது மிகையாகாது. மறைந்தாலும் வாழும் சகாப்தம்.. அந்த வாழும் சகாப்தத்தின் நினைவு நாளில் கருணாநிதிக்கு விழா வைப்பது எப்படி?... தலைவர் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவிற்கு விழா எடுக்கவில்லை. ஆனால் கருணாநிதிக்கு விழா எடுக்கிறார்கள்.. அப்படி எடுங்க.. ஆனால் அதை ஏன் எம்.ஜி.ஆர் நினைவு நாளில் வைக்கிறீங்க... அதான் நாங்க கேக்கிறோம்.
24ம் தேதி தமிழ்நாடே ஒரு துயரத்தில் இருக்கிற சூழலில்.. தலைவனை இழந்த அந்த துயரத்தில் தமிழ்நாடே தவித்துக்கொண்டு இருக்கும் நிலையில் அந்த தேதியில் வைக்க வேண்டிய கட்டாயம் என்ன? 24-ம் தேதி வைக்க வேண்டிய அவசியம் என்ன? தயவு செய்து தயாரிப்பாளர் சங்கமோ அல்லது நடிகர் சங்கமோ அதனை மறுபரிசீலனை செய்து வேறொரு நாளில் வைக்க அறிவுறுத்துகிறேன்.
இந்த நாளில் கொண்டாட்டமா?: புரட்சி தலைவரின் ரசிகர்கள், புரட்சி தலைவரின் பக்தர்கள், கோடான கோடி அதிமுக தொண்டர்கள் அத்தனை பேரும் துயரப்படக்கூடிய, வேதனைப்படக்கூடிய ஒரு நாள்.. அந்த நாளில் ஒரு கொண்டாட்டமா?.. இது தான் புரட்சி தலைவரின் ரசிகர்கள், புரட்சி தலைவரின் பக்தர்கள், கோடான கோடி அதிமுக தொண்டர்களின் கேள்வி... இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.












Click it and Unblock the Notifications