சென்னை மக்களே.. கவலை வேண்டாம்.. சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு! கடைசி ரயில் எப்போ தெரியுமா
சென்னை: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை என்பதால் பல ஆயிரம் பேர் தலைநகர் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர். இந்தச் சூழலில் பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக சென்னை மெட்ரோ சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் உள்ள தமிழர்களால் தை திங்கள் முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படும். இந்தாண்டு வரும் 15ஆம் தேதி பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு அனைவரும் தயாராகி வருகின்றனர்.
பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை என்பதால்.. பொதுமக்கள் அனைவரும் இந்த மூன்று நாட்கள் சொந்த ஊருக்கு திரும்பி, குடும்பத்துடன் பொங்கலைக் கொண்டாடுவார்கள்.

பொங்கல்
இன்று முதலே பல்வேறு தரப்பினரும் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர்.. பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளையும் அறிவித்துள்ளன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஒரே இடத்தில் மக்கள் குவிவதைத் தடுக்க சென்னையில் மட்டும் கோயம்பேடு, தாம்பரம், பிராட்வே, கே.கே.நகர், மாதவரம் என ஐந்து பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், 340 சிறப்பு இணைப்பு பேருந்துகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்
இது தவிர தென் மாவட்டங்களுக்கு மக்கள் எளிதாகச் சென்று வரச் சிறப்புப் பேருந்துகளும் கூட அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். அதேபோல பொதுமக்கள் பொங்கலைக் கொண்டாடிவிட்டுத் திரும்பும் போதும், சிறப்புப் பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் நகரில் இருந்து பல ஆயிரம் பேர் வெளியேறுவதால்.. இந்த காலகட்டத்தில் சென்னை நகரில் போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும்.

சென்னை மெட்ரோ
இதனிடையே பொதுமக்கள் பஸ் மற்றும் ரயில் நிலையங்களுக்கு எளிதாகச் செல்ல சென்னை மெட்ரோ தனது ரயில் சேவை நேரத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. எப்போதும் சென்னையில் கடைசி மெட்ரோ இரவு 11 மணிக்கு இயக்கப்படும். அதற்குப் பதிலாக ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் மட்டும் இரவு 12 மணி வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜன.13,14 தேதிகளில் மாலை 05.00 மணி முதல் இரவு 10 மணி வரை 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு
இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 மற்றும் 14ஆம் தேதிகளில் மட்டும் நெரிசல்மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேவை நீட்டிப்பு
மேலும், அனைத்து முனையங்களிலிருந்தும் செல்லும் கடைசி மெட்ரோ இரயில் சேவை இரவு 11 மணிக்கு பதிலாக 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 18-ஆம் தேதி மட்டும் அனைத்து முனையங்களிலிருந்தும் புறப்படும் முதல் மெட்ரோ இரயில் சேவை காலை 5 மணிக்கு பதிலாக காலை 4 மணி முதல் இயக்கப்படும். எனவே, 2023 ஜனவரி 13, 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

எந்த தேதிகள்
மேற்கண்ட மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் 13.01.2023 (வெள்ளிக்கிழமை) 14.01.2023 (சனிக்கிழமை) மற்றும் 18.01.2023 (புதன்கிழமை) ஆகிய தேதிகளுக்கு மட்டுமே.." என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை என்பதால் எப்போதுமே பொங்கல் சமயத்தில் அதிகப்படியான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள். இந்தச் சூழலில் அவர்கள் எளிதாகப் பயணிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications