"ஹலோ, நான் சசிகலா பேசறேன்".. எடப்பாடியை நோக்கி பாயும் அடுத்த அஸ்திரம்.. கதிகலங்கும் கொங்கு
சசிகலாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவென்று கசிந்துள்ளது
சென்னை: சசிகலாவை கட்சிக்குள் சேர்த்து கொள்வார்களா? இல்லையா? என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், இன்னொரு ஷாக் ட்ரீட்மென்ட் அதிமுகவுக்கு காத்திருப்பதாக சொல்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி விஷயத்தில் தொடர்ந்து பொறுமை காத்து வரும் சசிகலா, அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக தன்னுடைய ஆதரவாளர்களை அனுப்பி, அதிமுகவின் சீனியர்களை சந்தித்து பேச சொல்லி உள்ளார். அவர்களும் பேச்சுவார்த்தையில் மறைமுகமாகவே ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
ஜெ.மனநிலையில் வலம் வரும் சசிகலா... சரிசமமாக அமர்ந்த ஓபிஎஸ் தம்பி - திருச்செந்தூரில் நடந்தது என்ன
வேண்டுகோள்
"நான் எனக்காக தனியான ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை.. 50 ஆண்டுகள் வரலாற்றில் இந்த இயக்கம் இப்படி தொடர் தோல்வியை கண்டதில்லை.. ஒன்றிணைந்தால் உண்டு வாழ்வு - இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு" இதை எண்ணிப் பார்த்து நாம் செயல்பட வேண்டும்.. விதைத்தவர்கள், வளர்த்தவர்களை மறுத்ததால் தான் இன்று இந்த நிலை இதை அவர்கள் உணரவேண்டும்" என்பதே சசிகலாவின் ஒரே பேச்சாக உள்ளது.
எடப்பாடி பழனிசாமி
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மிக மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், நகர்ப்புற தேர்தலில் தங்கள் பலத்தை காட்ட வேண்டிய நெருக்கடி எடப்பாடி தரப்புக்கு ஏற்பட்டது. அந்த முடிவுகள் மறுபடியும் சறுக்கலில் விடவும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சசிகலா கட்சிக்குள் நுழைவாரா? அவரது அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற அடுத்த கேள்விகளும் எழுந்துள்ளன..
சுற்றுப்பயணம்
சுற்றுப் பயணத்தை தொடங்கினால் தன் பக்கம் ஆதரவாளர்களை திரட்டலாம் என்று முடிவெடுத்த சசிகலா, தென்மாவட்டங்களை குறி வைத்து ஆன்மீக பயணம் கிளம்பினார்.. ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய தலைகளை சந்தித்து பேசினாலே, ஓபிஎஸ், எடப்பாடி, வேறு வழியில்லாமல் இறங்கி வந்தே ஆக வேண்டும் என்பதே சசிகலாவின் கணக்காக இருந்தது.. இதற்கு ஓபிஎஸ் இணங்கி வருவாரே தவிர, எடப்பாடி சசிகலாவிடம் இறங்கி வர வாய்ப்பில்லை என்று அப்போதே அரசியல் நிபுணர்கள் சொன்னார்கள்.. அதன்படியே, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் நிறைவடைந்தது..
கொங்கு மண்டலம்
சில சாதகமான சிக்னல்களும் சசிகலாவுக்கு அப்போது கிடைத்தது என்றார்கள். இப்போது, கொங்கு மண்டலத்தை குறி வைத்திருக்கிறாராம்.. அதாவது எடப்பாடியின் பலம் பொருந்திய கொங்குவில் சசிகலா கால் வைக்க போகிறாராம்.. அடுத்த சுற்றுப்பயணம் இங்கேதான் இருக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. அதற்கேற்றவாறு சசிகலா தரப்பினர் கொங்குவில் உள்ள அதிமுக முக்கியஸ்தர்களிடம் நேரடியாகவே பேசி, சசிகலாவை வந்து சந்திக்குமாறும் சொல்ல போகிறார்களாம்.
சசிகலா
இந்த விஷயம் கேள்விப்பட்டு, கொங்கு மண்டல தலைகள் எல்லாம் அதாவது மாஜி அமைச்சர்கள், மாஜி எம்எல்ஏக்கள், மாஜி எம்பிக்கள், உட்பட பல முக்கிய நிர்வாகிகள் தங்கள் செல்போன் நம்பர்களை மாற்றிவிட்டார்களாம்.. புது நம்பரை நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தந்து வருகிறார்களாம். காரணம், சசிகலா வந்து தங்களிடம் போனில் பேசிவிட்டால் அதற்கு என்ன பதில் சொல்வது? என்ற கலக்கம்தான் என்கிறார்கள்.
Recommended Video
போன் நம்பர்கள்
ஆனால், கொங்குவில் இருக்கும் அனைத்து அதிமுக புள்ளிகள் மட்டுமல்ல, அவர்களின் பி.ஏ.க்கள் நம்பர் வரை சசிகலாவிடம் சென்றுவிட்டதாம்.. அதனால் எப்படியும் சசிகலா போன் செய்வார்.. நலம் விசாரிப்பார்.. நிலைமையை விசாரிப்பார் என்கிறார்கள்.. அதிமுகவின் கோட்டை அதிலும், எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக திகழ்ந்ததுதான் கொங்கு மண்டலம்.. இப்போது திமுக வசம் சென்றாலும், எடப்பாடியை நெருங்கி வருகிறார் சசிகலா என்பதையே இந்த பயணம் எடுத்துக்காட்ட போகிறது..!