20க்கும் அதிக வேட்பாளர்களின் வெற்றியை பறித்த நோட்டா.. 2021 தமிழக சட்டசபையில் என்ன நடந்தது?
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. இந்த நேரத்தில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் 'நோட்டா' எவ்வளவு வாக்குகளை பெற்றது? என்பது பற்றியும், எந்தெந்த தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசத்தை விட அதிகமான வாக்குகளை நோட்டா பெற்றது என்பது பற்றிய சுவாரசிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் குறித்து ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் நோட்டா பெற்ற வாக்குகள், எத்தனை தொகுதிகளில் நோட்டாவால் நூலிழையில் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தனர் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
நோட்டா பெற்ற வாக்குகள்
ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பிடிக்காவிட்டால் பொதுமக்கள் 'நோட்டா' என்ற பொத்தானில் ஓட்டளிக்க இந்திய தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கி உள்ளது. அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த நோட்டாவிற்கு (NOTA - None of the Above) ஓட்டளித்தனர்.
2016யை விட நோட்டாவிற்கு குறைவு
2021 தேர்தலில் தமிழகம் முழுவதும் நோட்டாவிற்கு விழுந்த மொத்த வாக்குகள் 3,45,487 ஆகும். இது பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 0.75% ஆகும்.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் நோட்டாவிற்கு 1.31 சதவீத ஓட்டுகள் விழுந்தது. அதனை ஒப்பிடும்போது 2021ல் நோட்டாவிற்கான ஓட்டுகள் பாதியாக குறைந்திருந்தது.
எந்த தொகுதியில் அதிகம்
மேலும் தமிழகத்திலேயே அதிகப்படியான நோட்டா வாக்குகள் தலைநகர் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகர்ப்புற தொகுதிகளிலேயே பதிவாகின.
குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் மாநிலத்திலேயே அதிகமாக நோட்டா வாக்குகள் விழுந்த தொகுதி சோழிங்கநல்லூர். இங்கு 5,813 வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்தன. இது அளவில் மிகப்பெரியது.
அதேபோல் குறைவாக நோட்டா வாக்குகள் விழுந்த தொகுதி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டசபை தொகுதியாகும். இங்கு 435 வாக்குகள் மட்டுமே நோட்டாவிற்கு விழுந்தது.
பிரபலங்களின் தொகுதி நிலவரம்
முக்கிய தொகுதிகள் என்று எடுத்து கொண்டால் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூரில் நோட்டாவிற்கு 1,529 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. அதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியி்ல 2,061 ஓட்டுகளும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 1,446 ஓட்டுகளும் நோட்டாவிற்கு பதிவாகி இருந்தது.
அதேபோல் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்ட அரவக்குறிச்சியில் 1,173 தொகுதியிலும், தற்போயைத பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் களமிறங்கிய திருநெல்வேலியில் 2,065 ஓட்டுகளும், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் களமிறங்கிய தாராபுரத்தில் 1,903 ஓட்டுகளும் நோட்டாவிற்கு பதிவாகி இருந்தது.
காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை போட்டியிட்ட ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 3,135 ஓட்டுகளும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் களமிறங்கிய கோவில்பட்டியில் நோட்டாவிற்கு 1,525 ஓட்டுகளும் பதிவாகி இருந்தது.
வேட்பாளர்களுக்கு ஆப்பு வைத்த நோட்டா
மேலும் தென்காசி, திட்டக்குடி, திருச்செங்கோடு, ராசிபுரம், திருப்பூர் (தெற்கு), திருப்பூர் (வடக்கு), தாராபுரம், நெய்வேலி, கிணத்துக்கடவு, உத்திரமேரூர், அந்தியூர், ஆரணி உள்பட 20க்கும் அதிகமான தொகுதிகளில் வென்ற வேட்பாளருக்கும், 2ம் இடம் பிடித்த வேட்பாளர்களுக்கும் இடையேயான ஓட்டுகளின் வித்தியாசத்தை விட நோட்டா அதிகமான வாக்குகளை பெற்றிருந்தது.
இந்த தொகுதிகளில் நோட்டாவிற்கு விழுந்த வாக்குகள் 2ம் இடம் பிடித்த வேட்பாளர்களுக்கு கிடைத்திருந்தால் அவர்கள் வெற்றி பெற்று இருப்பார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications