விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட சந்தன பேழையில் உள்ள வாசகம் என்ன தெரியுமா?
சென்னை: மறைந்த கேப்டன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சந்தன பேழையில் இருக்கும் வாசகங்கள் குறித்துப் பார்க்கலாம்.
ஒரு மாபெரும் சகாப்தம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவரது மறைவால் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

திரையிலும், அரசியலிலும் தனக்கென தனி முத்திரைப் பதித்த விஜயகாந்த், தமிழ் மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர்,
விஜயகாந்த்: கேப்டன் விஜயகாந்த் 1952ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் பிறந்தவர். இனிக்கும் இளமை, அகல் விளக்கு என அவர் ஆரம்பத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும், அவரது முதல் வெற்றி என்பது விஜய்யின் தந்தை எஸ்.ஏ,சந்திரசேகர் இயக்கத்தில் வந்தது. அவர்கள் கூட்டணியில் உருவான முதல் படமான சட்டம் ஒரு இருட்டறை மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு இருவரும் இணைந்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளனர்.
"அப்துல் காலம் விஜயகாந்ததிற்கு தந்த பெரும் பொறுப்பு!" யாருக்கும் தெரியாத ரகசியம்! நெகிழ்ச்சி சம்பவம்
விஜயகாந்த் திரைப்படங்களில் அவரது தனித்துவமான நடிப்பு மூலம் அனைவரையும் ஈர்த்தார். அவர் நடித்த ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தன. குறிப்பாக பின்னால் இருக்கும் நபரைக் காலை தூக்கி உதைப்பது அவருக்கே தனித்துவமானது. அவரது சண்டைக் காட்சிகளுக்கும் அவரது புள்ளி விவர வசனங்களுக்குமே இங்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
விஜயகாந்தின் உடல் வைக்கப்பட உள்ள சந்தன பேழை ..
— RAMESH-MURUGESAN (@rameshibn) December 29, 2023
cmbt pic.twitter.com/JKwEu9aIQS
அரசியல்: சினிமா மட்டுமின்றி அரசியலிலும் நுழைந்து வெற்றி பெற்றவர் விஜயகாந்த். கருணாநிதி, ஜெயலலிதா என இரு பெரும் ஆளுமைகள் இருந்த போதே துணிச்சலாக அரசியலுக்கு வந்தார். குறிப்பாக 2011ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பிற்கும் வந்திருந்தார். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைக் குறைத்துக் கொண்டார்.
அண்மையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நிமோனியா பாதிப்பால் நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்ட நிலையில், அங்கே கூட்டம் அதிகரித்ததால் சென்னை தீவுத்திடலுக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. ரஜினி, கமல் என திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் தொடங்கி கடைக்கோடியில் உள்ள ரசிகர்கள் வரை பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதி அஞ்சலி: அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதற்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனம் தயார் செய்யப்பட்ட நிலையில், அதில் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. விஜயகாந்த் இருக்கும் வாகனத்தில் அவரது மனைவி பிரேமலதா, அவரது மகன்கள் இருந்தனர்.
மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், வாகனம் மெல்ல தேமுதிக அலுவலகத்திற்குச் சென்றடைந்தது. விஜயகாந்த் உடல் இருக்கும் வாகனம் ஈவேரா சாலை வழியாக கோயம்பேடு அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இரு பக்கமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். அங்கே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சந்தனப் பேழையில் உள்ள வாசகம்: நல்லடக்கம் செய்யப்பட்ட சந்தனப் பேழையில் "புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. நிறுவனத் தலைவர் தேமுதிக என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.மேலும், விஜயகாந்த்தின் பிறப்பு, இறப்பு தேதிகளும் அந்த பேழையில் இடம்பெற்றுள்ளது.
50 கிலோ எடை கொண்ட சந்தனக் கட்டைகளில் அந்த பிரத்தியேக சந்தன பேழை தயாரிக்கப்பட்டு இருந்தது. விஜயகாந்த் என்ற சிங்கத்தின் கர்ஜனை இனி இல்லையென்றாலும், அவரது புகழ் என்றும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications