டெல்லி இருக்கட்டும்.. அண்ணாமலையின் பாத யாத்திரையில் நடந்த திடீர் மாற்றம்! இதை யாரும் கவனிக்கலயே
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாத யாத்திரை நடத்தி வரும் நிலையில், அதில் சைலெண்டாக பல மாற்றங்கள் நடந்துள்ளன. இது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழக அரசியல் களத்தில் கடந்த சில காலமாகவே பெரும் பரபரப்பு தொற்றுக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக அதிமுக- பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்ட பிறகு, விரைவில் புது மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தமிழக பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே அண்ணாமலை இப்போது திடீர் பயணமாக டெல்லிக்கும் சென்றுள்ளார்.
பாத யாத்திரை: இது ஒரு பக்கம் இருக்க அண்ணாமலையின் பாத யாத்திரையிலும் மாற்றங்கள் வந்துள்ளது. அதாவது அண்ணாமலையின் "என் மன், என் மக்கள்" என்ற பெயரில் யாத்திரை நடத்தி வருகிறது. இந்த யாத்திரையின் இரண்டாம் கட்டப் பயணம் இந்த வாரம் நிறைவடைந்தது. இதற்கிடையே மூன்றாவது கட்ட யாத்திரை வரும் அக்டோபர் 4 முதல் அக்டோபர் 31 வரை நடைபெறுகிறது. இதில் மேற்கு மற்றும் டெல்டா பகுதிகளில் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.
முதல் கட்ட நடைபயணத்துடன் ஒப்பிடுகையில் இரண்டாம் கட்டத்தில் ஆதரவு அதிகரித்துள்ளதாக பாஜக நிர்வாகிகள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த இதுவரை நடந்த யாத்திரையை பார்க்கும் போது, முதலில் திட்டமிடப்பட்ட பல விஷயங்கள் இப்போது யாத்திரையில் மிஸ் ஆகிறது.
திடீர் மாற்றங்கள்: அதாவது முக்கிய இடங்களில் "தாமரை மலரும் மாநாடு" என்ற பெயரில் 11 பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டது. முதல் இரண்டு கட்டங்களில் மதுரை, திருநெல்வேலி, தென்காசி, கோவை, நீலகிரி ஆகிய இடங்களில் இந்த பொது கூட்டத்திற்கு திட்டமிட்டனர். இதில் திருநெல்வேலியில் மட்டும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டார். அதை தவிர வேறு எந்த இடத்திலும் இந்த பொதுக்கூட்டம் நடைபெறவில்லை.
அதேபோல் இளைஞர்களை குறிவைத்து "நாளையத் தமிழகம்", மகளிருக்காக "சிங்கப்பெண்ணே" ஆகிய கூட்டங்களும் நடைபெற திட்டமிடபட்டிருந்தது. இருப்பினும், அவை எதுவும் நடக்கவில்லை. நாகர்கோவில், கோவை மதுரை மற்றும் சென்னையில் நான்கு வேலை வாய்ப்பு முகாம்களும் திட்டமிடப்பட்டன. இருப்பினும் முதல் இரண்டு கட்ட யாத்திரை முடிந்துள்ள நிலையில், எங்கும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படவில்லை.
என்ன காரணம்: இது குறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில், "இந்த கூட்டங்களை எல்லாம் நடத்த திட்டமிட்டது உண்மைதான். ஆனால், போதிய நேரம் இல்லை. குறுகிய காலத்தில் அதிகபட்ச மக்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. இந்த நேரமின்மை காரணமாகவே இந்த பொதுக் கூட்டங்களை கைவிட வேண்டி இருந்தது. நேரடியாக மக்களை சாலையில் சந்திக்க வேண்டும் என்பதே திட்டமாக இருக்கிறது.
அதற்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. மத்திய தலைமை அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம். எங்கள் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் நல்ல பலன் கிடைக்கிறது. பொது கூட்டங்களுக்கு பதிலாக இப்போது இளைஞர்கள், பெண்கள் நேரடியாக பாத யாத்திரையிலேயே கலந்து கொள்கிறார்கள்" என்று கூறுகிறார்கள்.
ஆதரவு அதிகமாம்: மேலும், இரண்டாம் கட்ட யாத்திரையில் மக்கள் வரவேற்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் பாஜகவினர், தொண்டர்களுக்கு அதிக சுமை இருக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த கூட்டங்களை ரத்து செய்ததாகவும் தெரிவிக்கிறார்கள். அதேநேமரம் வரும் காலத்தில் மிக பெரிய கூட்டங்கள் நிச்சயம் நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மூன்றாம் கட்ட பாத யாத்திரை தொடங்க சில நாட்கள் இருக்கும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இப்போது இரண்டு நாள் டெல்லி சென்றுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை தமிழகம் திரும்பும் நிலையில், அதன் பிறகு முக்கிய மாற்றங்கள் வரும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications