தொடரும் ரெய்டு! சிக்கலில் மாஜி அமைச்சர்? நட்டாவை சீக்ரெட்டாக சந்தித்த விஜயபாஸ்கர்! பாஜகவில் ஐக்கியமா
சென்னை: சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வந்து இருந்த நிலையில், மாஜி அமைச்சர் ஒருவர் அவரை ரகசியமாகச் சந்தித்தாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கட்சியை வலுப்படுத்த பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அடுத்த தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்குகளைப் பெற்றே தீர வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம்.
இதற்காகக் கட்சியை அமைப்பு ரீதியாகவும் வலுப்படுத்தும் நடவடிக்கை ஒரு பக்கம் நடந்து வருகிறது. அதேபோல மக்களிடையே கட்சியை எடுத்துச் செல்லவும் பாஜக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஜேபி நட்டா
அதன் ஒரு பகுதியாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தென்மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் தமிழகத்திற்கு இரு நாட்கள் வந்த நட்டா, அடுத்து கேரளா சென்றுள்ளார். இரு நாட்கள் தமிழ்நாட்டில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மதுரை, காரைக்குடி பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். மேலும் பாஜக நிர்வாகிகளையும் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

மாஜி அமைச்சர்
பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களைக் கண்டு இளைஞர்கள், பெண்கள் எனப் பலரும் பாஜகவில் இணைய ஆர்வம் காட்டுவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இடையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி அவர் பேசிய பேச்சும் இணையத்தில் வேகமாகப் பரவியது. இந்தச் சூழலில் அவரை மாஜி அமைச்சர் ஒருவர் ரகசியமாகச் சந்தித்தாக தகவல் வெளியாகி உள்ளது.

ரகசிய மீட்டிங்
தமிழ்நாடு வந்திருந்த ஜே.பி.நட்டா கடந்த 22ஆம் தேதி அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்துள்ள முன்னாள் காரைக்குடி எம்எல்ஏ சோழன் சித.பழனிச்சாமி வீட்டில் மதிய உணவு சாப்பிட்டார். அப்போது தான் இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வைத்து நட்டாவை விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் சந்தித்து உள்ளார். உள்ளூர் நிர்வாகிகள் யாருக்கும் தெரியாமல் சி.விஜயபாஸ்கர் நட்டாவை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

ஃபோட்டோ
புதுக்கோட்டை அதிமுக நகரச் செயலாளர் பாஸ்கர் மட்டுமே சி.விஜயபாஸ்கருடன் சென்று இருக்கிறார். பாஜக தரப்பில் அண்ணாமலையும் மத்திய அமைச்சர் எல்.முருகனும் இருந்து உள்ளனர். அவர்கள் சுமார் 1 மணி நேரம் வரை தனியாக ஆலோசனை செய்ததாகக் கூறப்படுகிறது. ரகசியமாக நடந்த இந்தச் சந்திப்பின் ஃபோட்டோ இப்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. ஜே.பி. நட்டாவை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

என்ன காரணம்
விஜயபாஸ்கர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அரசு தூசி தட்டி எடுத்துள்ள நிலையில், நட்டாவை அவர் சந்தித்தது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக குட்கா வழக்கில் விஜயபாஸ்கர் மீது எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனச் சொல்லப்படும் நிலையில், நட்டாவை அவர் தனிமையில் சந்தித்து இருக்கிறார். அதேநேரம் விஜயபாஸ்கர் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் இது தொடர்பாகவே இருவரும் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி
அதேநேரம் மற்றொரு புறம் எடப்பாடி பழனிசாமி சொல்லியே நட்டாவை விஜயபாஸ்கர் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்று இருந்தார். அவர் பிரதமர் மோடியை சந்தித்திருக்கத் திட்டமிட்டிருந்ததாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், அமித் ஷாவை மட்டுமே அவர் சந்தித்தார். இதனிடையே அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நட்டாவை விஜயபாஸ்கர் சந்தித்து இருக்கக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

முக்கியம்
இருப்பினும், இந்தச் சந்திப்பு தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. அதிமுகவில் உட்கட்சி குழப்பம் தொடரும் நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications