7 நாள்தான்.. அழுத்தம்.. முதல்வர் திரும்பி வந்ததும் டெல்லிக்கு பறந்த ஆளுநர் ரவி.. இப்படியொரு காரணமா?
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி திடீரென டெல்லிக்கு செல்வது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் இப்படி திடீரென டெல்லி செல்வது ஏன்? இதற்கு பின் என்ன பிளான் என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுகவிற்கும் ஆளுநர் தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு உச்சத்தில் இருக்கும் நிலையில்தான் இந்த பயணத்தை ஆளுநர் ரவி மேற்கொள்கிறார். அதிலும் ஆளுநர்களின் அதிகாரத்திற்கு எதிராக திமுக எம்பி வில்சன் கடந்த வாரம்தான் தனி நபர் மசோதா கொண்டு வந்தார்.
அதோடு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி, மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஆளுநர் ரவி டெல்லிக்கு பயணப்படுகிறார்.

முதல்வர் ஸ்டாலின் மோடி
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் 31ம் தேதிதான் பிரதமர் மோடியை சந்தித்தார். இதில் அவரிடம் நீட் தேர்வு விலக்கு உட்பட 14 கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் வைத்தார். அதோடு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். முக்கியமாக நீட் விலக்கு குறித்தும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். ஆளுநரிடம் நீட் மசோதா நிலுவையில் உள்ளது.

கோரிக்கை வைத்தார்
இரண்டாவது முறை மசோதாவை நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம். சட்டப்படி மசோதாவை அவர் ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதே சரியானதாக இருக்கும். ஆனால் அவர் மசோதாவை அனுப்பவில்லை. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி தரப்பிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

முன்பே தீர்மானிக்கப்பட்டது
அதோடு ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஏற்காமல் இருப்பதையும் ஸ்டாலின் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில்தான் ஆளுநர் ரவி டெல்லி செல்கிறார். இன்று அவர் டெல்லி சென்றாலும் கடந்த3ம் தேதியே இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 7ம் தேதி ஆளுநர் டெல்லி செல்கிறார் என்று அறிவிப்பு வெளியாகிவிட்டது.

பிப்ரவரி மாதம் ரத்து பிளான்
முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணத்திற்கும் இதற்கும் நேரடி தொடர்பு இல்லை என்றே கூறுகிறார்கள். ஏனென்றால் ஆளுநர் ரவி முன்பே டெல்லி செல்வதாக இருந்தது. அதாவது கடந்த பிப்ரவரி மாதமே அவர் டெல்லி செல்ல இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் பல்வேறு காரணங்களால் அவரின் டெல்லி பயணம் ரத்தானது. அப்போதே நீட் தொடர்பாக குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடன் ஆலோசனை செய்ய இருந்ததாகவும் கூறப்பட்டது.

தனிப்பட்ட விஷயம்
ஆனால் அந்த பயணம் நடக்கவில்லை. சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் அப்போது நீட் தொடர்பாக நடைபெற இருந்தது. இதனால் அந்த பயணம் ரத்தானதாக கூறப்பட்டது. இந்தநிலையில்தான் தற்போது நீட் விவகாரம் உச்சத்தில் இருக்கும் போது ஆளுநர் ரவி மீண்டும் டெல்லிக்கு செல்கிறார். பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அழுத்தம் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஒரு பக்கம் சொல்லப்படுகிறது. அதே சமயம் அவர் தனிப்பட்ட பர்சனல் விஷயங்களுக்காகவும் டெல்லி சென்றுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications