ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு ஆணிவேர் எது? பின்னணி என்ன? என்ன சொல்றீங்க.. காரணமே வேறயா?
சென்னை: பாமக இளைஞரணி தலைவர் நியமனத்தில் டாக்டர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று இந்த மோதலுக்கு சமாதானம் செய்யப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் இன்னும் புகைச்சல் அடங்கவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
மோதல் வெடித்த மறுநாள் தைலாபுரம் தோட்டத்தில் நடந்த பஞ்சாயத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டிருந்தாலும் அது அறிவிப்பாக வெளியாகவில்லை. அப்பா-மகனுக்கிடையே நடந்த மோதல் முடிவுக்கு வந்திருந்தாலும், இந்த மோதலுக்கான தொடக்கப் புள்ளி எது ? என்பதுதான் பாமக தொண்டர்களை இன்னமும் உறுத்திக்கொண்டே இருக்கிறது என்கிறார்கள்.

அதாவது, பாமகவுக்குள் அன்புமணியை டாக்டர் ராமதாஸ் கொண்டு வந்தபிறகு பாமக இளைஞரணி தலைவர், எம்.பி., மத்திய அமைச்சர், பாமக தலைவர் என அதிகாரமிக்க அனைத்து பொறுப்புகளும் அன்புமணிக்கு கிடைத்தது. அதிகாரமிக்க பொறுப்புகள் இருந்தும், அப்பா ராமதாஸ் எடுக்கும் முடிவுகள், கட்டளைகள் எதிலும் முரண்படாமலும், மோதல் போக்கு இல்லாமலும் அதனை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தியவர் அன்புமணி.
அப்படிப்பட்டவர், பாமக இளைஞர் அணி தலைவராக முகுந்தன் என்பவரை டாக்டர் ராமதாஸ் நியமித்ததை கடுமையாக எதிர்த்ததினால்தான் அப்பா-மகன் மோதல் பகிரங்கமாக வெடித்தது. அதுவும், அன்புமணியின் சொந்த அக்காள் மகன் தான் முகுந்தன். சொந்த அக்காள் மகனின் நியமனத்தை அப்பாவே அறிவிக்கிற போது முதன்முறையாக அப்பாவின் முடிவை எதிர்க்கிறார் என்றால், இதன் பின்னணியில் வேறு ஏதேனும் முக்கிய விசயம் இருக்கவே செய்கிறது.
பாமக மோதல் காரணம்;
இதுகுறித்து நம்மிடம் பேசிய பாமகவின் உள் வட்டாரங்களை அறிந்தவர்கள், ''பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனத்தை எதிர்ப்பதற்கு காரணமாக அன்புமணி சொல்வது, முகுந்தனுக்கு அரசியல் அனுபவம் இல்லை , கட்சியில் சேர்ந்து 4 மாசம்தான் ஆகுது, குடும்ப உறுப்பினர்களுக்கே மீண்டும் மீண்டும் பதவியா? அனுபவம் உள்ளவர்களுக்கு கொடுக்கலாமே என்பதுதான். இது ஒருபுறம் உண்மை என்றாலும், நிஜ பின்னணி ஒன்று இருக்கிறது. அதாவது, இளைஞரணி தலைவராக ஏ.கே. மூர்த்தியின் சிபாரிசுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த நபரை நியமிக்க விரும்பினார் அன்புமணி. இதனை தனது அப்பா ராமதாசிடம் அன்புமணி சொன்ன போது, அதனை ஏற்க மறுத்தார்.
இதனையடுத்து தனக்கு நம்பிக்கைக்குரிய ஒருவரை நியமிக்க விரும்பி மற்றொருவர் பெயரை அன்புமணி சொன்னபோது, அதையும் ஏற்க மறுத்தார் ராமதாஸ். அப்போதுதான், கட்சியின் தலைவராக நான் இருக்கிறேன் ; எனக்கு நம்பிக்கைக்குரிய ஒருவரை, கட்சியின் முக்கிய பொறுப்பில் நியமித்தால் தானே தேர்தல் பணிகளை சரியான வகையில் கொண்டு செல்ல முடியும்? கட்சியின் நலன் களுக்காக தலைவர் என்கிற முறையில் எனக்கு நம்பிக்கைக்கு உரிய ஒருவரை நியமிக்கக்கூட அதிகாரம் இல்லையா? என்று அன்புமணி சொன்னபோதும் ராமதாஸ் ஏற்கவில்லை.
இது அன்புமணியை ரொம்பவே பாதித்தது. அதன்பிறகு அவரிடம் வாக்குவாதம் செய்ய விரும்பாமல் கோபமாக கிளம்பிச் சென்றுவிட்டார் அன்புமணி. இந்த சம்பவம் தான் முதன் முறையாக அப்பாவிடம் முரண்பட்டார். தனது சொல்லை மீறுகிறார் என்கிற கோபம் ராமதாசுக்கு இருந்தது. அதே கோபம் அன்புமணிக்கும் இருந்தது'' என்று பொதுக்குழுவில் நடத்த மோதலுக்கான ஆணிவேரை சுட்டிக்காட்டுகி றார்கள் பாமகவினர்












Click it and Unblock the Notifications