தூக்கி அடிக்கப்பட்ட 67 ஐஏஎஸ் அதிகாரிகள்! ஸ்டாலின் ஆக்சன்! அமைச்சர்களுக்கே தெரியாதா? என்ன சொல்றீங்க?
சென்னை: கடந்த இரண்டு வாரத்தில் 67 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். முதலில், 9 மாவட்ட ஆட்சியர் உட்பட 31 ஐ.ஏ.எஸ்.கள் மாற்றப்பட்டனர்.
அடுத்த வாரமே, 2 ஆட்சியர் உட்பட 36 ஐ.ஏ.எஸ்.கள் மாற்றப்பட்டனர். இந்த மாற்றம் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியபடி இருக்கிறது. குறிப்பிட்ட சிலருக்கு அவர்கள் விரும்பிய துறைகளுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்படுகிறது சர்ச்சையாகி வருகிறது.

மருத்துவத் துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு ஐஏஎஸ் காலநிலை மற்றும் வனத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிரண் குராலா ஐஏஎஸ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த நாராயண சர்மா செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர், திட்ட அலுவலராக ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த ரஞ்சித் சிங், தேனி மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளராக சத்யபிரதா சாகு நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், உயர்கல்வித் துறை செயலாளராக சமயமூர்த்தி, மாற்றுத்திறனாளிகளின் நலத் துறை செயலாளராக மதுமதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதலை தலைமைச் செயலாளராக சுப்ரியா சாஹு நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் மாற்றத்தால் வந்த விவாதம்:
குறிப்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தின் மனைவி சுப்ரியாசாகு, வனத்துறை செயலாளராக இருந்தார். அவரை இரண்டு மாதங்களுக்கு முன்பு சுகாதாரத்துறை செயலாளராக மாற்றியது அரசு. வனத்துறையின் செயலாளராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டார்.
ஆனால் தற்போது, இருவரையும் பரஸ்பரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, சுப்ரியா சாகுவை வனத்துறைக்கும், செந்தில்குமாரை சுகாதாரத்துறைக்கும் நியமித்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால், ஏற்கனவே சுகாதாரத்துறையின் செயலாளராக இருந்தவர் செந்தில்குமார். இவர்களை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டால், வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும்.
ஏற்கனவே அவர்கள் இருந்த துறைக்கே எதற்காக மாற்றப்பட வேண்டும் ? என்ற சர்ச்சையை கிளப்புகின்றனர். இதே போல ஒவ்வொரு மாற்றத்திலும் அதிகாரிகள் மத்தியில் குமுறல்கள் வெடித்தபடி இருக்கிறது. காரணம், "மாற்றப்பட வேண்டிய அதிகாரிகள் பலர் இருக்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் நங்கூரம் பாய்ச்சியபடி இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி உயரதிகாரிகள் யோசிப்பதே இல்லை.
அதே சமயம், மாற்றப்படும் அதிகாரிகளை குறைந்தபட்சம் 6 மாதங்கள் கூட அந்த துறையில் பணியாற்ற அனுமதிப்பதில்லை. அந்த வகையில், விருப்பு வெறுப்புகளுக்கேற்ப ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் இடமாற்றம் நிகழ்கிறது" என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள். மேலும், அமைச்சர்களின் விருப்பங்களுக்கேற்பவும் மாற்றங்கள் நடக்கின்றன. ஆனால், எல்லா அமைச்சர்களின் விருப்பங்களும் நிறைவேறுவதில்லையாம். "முதல்வருக்கும் உயரதிகாரிகள் சிலருக்கும் நெருக்கமான அமைச்சர்களின் விருப்பங்கள் நிறைவேறுகிறது. அதிகாரிகளிடம் லாபி இல்லாத அமைச்சர்களின் விருப்பம் புறக்கணிக்கப்படுகிறது. தவிர, தங்கள் துறையின் உயரதிகாரி மாற்றப்படுவது அமைச்சர்கள் சிலருக்கு தெரிவதுமில்லை; தெரியப்படுத்தபடுவதுமில்லை" என்று அமைச்சர்கள் வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.












Click it and Unblock the Notifications