மணலி மாத்தூரில் 3 சிறுமிகள் உள்பட 4 பேர் பலி சம்பவம்.. டவர் ஃபேனால் வந்த வினை.. நடந்தது என்ன?
சென்னை: சென்னை மணலியை அடுத்த மாத்தூரில் ஜொமாட்டோ ஊழியர் வீட்டில் டவர் ஃபேன் காயில் எரிந்து ஏற்பட்ட புகையின் காரணமாக 3 சிறுமிகள் உள்பட 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று நடந்த இந்த சம்பவத்திற்கு சிலிண்டர் வெடிப்பே காரணம் என்று சொல்லப்பட்டது. மேலும் கொசு வர்த்தி காயில் எரிந்து அதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் இறந்ததாக தகவல்கள் வந்தன.

சென்னை மணலி மாத்தூரை அடுத்த எம்எம்டிஏவை சேர்ந்தவர் உடையார். இவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்த ஆம்பூரை சேர்ந்தவர். இவர் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் மணலி மாத்தூர் வீட்டில் வசித்து வந்தார்.
இவர் ஜொமாட்டோவின் டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை மனைவி செல்வி உடனிருந்து கவனித்து வந்தார். இதனால் வீட்டில் இருந்த குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஊரில் இருந்து உடையாரின் தாய் சந்தான லட்சுமி வந்திருந்தார்.
நேற்று இரவு சந்தான லட்சுமியின் பேரக்குழந்தைகளான சந்தியா, பிரியா லட்சுமியுடன் விளையாட எதிர் வீட்டை சேர்ந்த உறவினரின் மகளான பவித்ரா வந்துள்ளார். இவர்கள் மூவரும் விளையாடிய பிறகு அந்த சிறுமியும் அவர்களுடனேயே தூங்கி கொண்டிருந்தார். அப்போது வெகுநேரமாக அந்த வீட்டில் இருந்து யாருமே வெளியே வரவில்லை. ஆனால் புகைச்சல் வந்து கொண்டே இருந்தது.
இதை அக்கம்பக்கத்தினர் கவனித்தனர். புகைச்சல் வாசனையும் வந்தது. உடனே போய் பார்த்த போது அங்கிருந்த மின்சாதனங்கள் எரிந்து கருகிய வாசனை வந்தது. படுக்கை அறைக்குள் சந்தான லட்சுமியும் 3 குழந்தைகளும் சடலமாக கிடந்தனர். உடனே எதிர்வீட்டில் இருந்த பவித்ராவின் தாயார் வந்து கதறி அழுதார். அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீஸார் வந்து சடலங்களை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மின்கசிவு காரணமாக டவர் ஃபேனில் இருந்த காயில் தீப்பிடித்துள்ளது. மேலும் ஒரே ஃபிளக் பாயிண்டில் மின்சார கொசு விரட்டியின் பிளக்கும் இணைக்கப்பட்டிருந்தது. அதனால் கொசு விரட்டியும் (லிக்விடேட்டர்) எரிந்து உருகியிருந்தது. அவர்கள் படுத்திருந்த அறையில் ஜன்னல்கள் ஏதும் இல்லை. இதனால் அங்கிருந்த அட்டை பெட்டி உள்ளிட்டவை எரிந்து புகை மண்டலமாகியதில் மூச்சுத்திணறி அவர்கள் உயிரிழந்துவிட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications