தவெகவில் இணைந்தது ஏன்! திடீரென அறிக்கை வெளியிட்ட ஆதவ் அர்ஜுனா.. என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க
சென்னை: தமிழ்நாடு அரசியலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பைக் கிளப்பியவர் ஆதவ் அர்ஜுனா. விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா கடந்த சில காலம் அரசியலை விட்டு ஒதுங்கி அமைதியாக இருந்த சூழலில், திடீரென நேற்று விஜய்யின் தவெகவில் ஐக்கியமானார். இதற்கிடையே தவெகவில் இணைந்தது தொடர்பாக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
விசிகவில் இருந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் ஆதவ் அர்ஜுனா.. அங்கு அவருக்கு துணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. விசிகவில் இருந்த போது அவர் கூறிய பல கருத்துகள் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக இருந்தது.

ஆதவ் அர்ஜுனா:
குறிப்பாக அம்பேத்கர் குறித்த புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்ற ஆதவ் அர்ஜுனா, திமுகவை விமர்சிக்கும் வகையிலான கருத்துகளைக் கூறியிருந்தார். திமுக கூட்டணியில் விசிக இருந்த சூழலில், அவர் இதுபோல கருத்துகளைச் சொன்னது பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து விசிகவில் இருந்து அவரை தற்காலிகமாக நீக்கப்பட்டார். தொடர்ந்து சில நாட்களிலேயே விசிகவில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார்.
சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி அமைதியாக இருந்த ஆதவ் அர்ஜுனா, திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய்யை நேரில் சந்தித்தார். அவர் அப்போது தவெகவில் இணையலாம் எனச் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் தான் நேற்று விஜய் முன்னிலையில் அவர் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அவருக்குத் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
என்ன காரணம்:
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு ஆதவ் அர்ஜுனா முதல்முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மக்களுக்கான அரசியலை முன்வைத்து கரம் கோர்த்துள்ளதாகவும் மக்களுக்கான ஜனநாயகத்தை உருவாக்க போராட போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் உட்பட ஐந்து வரலாற்று நாயகர்களை கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள 'தமிழக வெற்றிக் கழகத்தில்' மக்களுக்கான அரசியலை முன்வைத்து நான் கரம் கோத்துள்ளேன். தலைவர், முக்கிய நிர்வாகிகள், கட்சித் தோழர்கள் மற்றும் மக்கள் சக்தியுடன் இணைந்து மக்களுக்கான சனநாயகத்தை உருவாக்குவோம்.
சமத்துவம், சமூக நீதி:
'எல்லோருக்கும் எல்லாம்' என்ற மானுட மாண்பு, 'நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்ற அரசியலமைப்பு நெறி, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உலக அறம் உள்ளிட்ட சமத்துவ, சமூக நீதி கொள்கைகளின் அடிப்படையில் என்றும் மக்களோடு பயணிப்பேன். மாபெரும் வரலாற்றுக் கடமைக்கான பயணத்தில் எனக்கு இந்த பொறுப்பு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவருக்கும், மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சித் தோழர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தவெகவில் இணைந்த உடனே ஆதவ் அர்ஜுனா நேற்று விசிக அலுவலகத்திற்கு வந்து திருமாவளவனைச் சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. விஜய் கட்சியில் இணைந்த உடன் திருமாவளவனை ஆதவ் அர்ஜுனா சந்தித்தது பேசுபொருள் ஆனது. இருவருமே இது அரசியல் தொடர்பான சந்திப்பு இல்லை எனக் கூறினாலும், இதன் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications