செஞ்சி மஸ்தான் அமைச்சர் பதவி பறிப்பு.. உண்மையில் என்ன காரணம்! பின்னணியில் இவ்வளவு இருக்கா
சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இதில் கேபினட்டில் இருந்த 3 பேரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் விழுப்புரத்தைச் சேர்ந்த சிறுபான்மை துறை அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தான் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று நீண்ட நாட்களாகவே சொல்லப்பட்டு வந்தது. இருப்பினும், சில காரணங்களால் இது குறித்த அறிவிப்பு வெளியாவதில் தாமதமானது.

இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். மேலும், செந்தில் பாலாஜி உட்பட 4 பேர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். அதேநேரம் 3 பேரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. குறிப்பாகச் செஞ்சி மஸ்தான் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆதிக்கம்: சிறுபான்மை துறை அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவி பறிப்பிற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது கட்சி மற்றும் அரசு பதவிகளில் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் முழுக்க பல பதவிகள் செஞ்சி மஸ்தான் குடும்பத்தினருக்கே வழங்கப்பட்டு இருந்தது.
கடந்த ஆண்டு வரை செஞ்சி மஸ்தானின் சகோதரர் நசீர் செஞ்சி நகர திமுக செயலாளர் பதவியிலும், விழுப்புரம் வடக்கு மாவட்ட ஐடி அணி ஒருங்கிணைப்பாளராகச் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி மஸ்தானும் இருந்து வந்தனர். அதேபோல விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராகச் செஞ்சி மஸ்தானின் மருமகன் ரிஸ்வான் இருந்து வந்தார்.
பறிப்பு: திண்டிவனம் நகர்மன்ற தலைவராக நிர்மலா இருந்தாலும் முழு அதிகாரமும் ரிஸ்வானுக்கே இருப்பதாக அப்போதே புகார் எழுந்தது. இதைக் கண்டித்து திமுக கவுன்சிலர்களே 13 பேர் ராஜினாமா செய்தது பரபரப்பைக் கிளப்பியது. புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து கடந்தாண்டே இந்த மூன்று பேரின் பதவிகளும் வரிசையாகப் பறிக்கப்பட்டன.
மா.செ பதவி: இது தவிர மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம் செஞ்சி மஸ்தானுக்கு எதிராகத் திரும்பியது. அப்போதே செஞ்சி மஸ்தானின் அமைச்சர் பதவியும் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. இருப்பினும், லோக்சபா தேர்தல் வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்துவதாகப் புகார்கள் அதிகரித்த நிலையில், கடந்த ஜூன் மாதம் செஞ்சி மஸ்தான் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக டாக்டர் ப.சேகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
நீக்கம்: அப்போதே அமைச்சர் பதவி பறிப்பு குறித்த பேச்சும் எழுந்தது. இந்தச் சூழலில் தான் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு 3 மாதங்களில் அமைச்சரவையில் இருந்தும் செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்டுள்ளார். செஞ்சி மஸ்தான் மீது பல்வேறு புகார்கள் தலைமைக்குச் சென்ற நிலையில், அது தொடர்பாக ரிப்போர்ட்டையும் வாங்கிய பிறகே முதல்வர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம் செஞ்சி மஸ்தான் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் சிறுபான்மையினர் இல்லாத சூழல் ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டே மீண்டும் நாசருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நாசர் ஏற்கனவே 2021 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர். இந்தச் சூழலில் தான் மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications