திருமாவளவனுடன் ஒன்று சேர வாய்ப்பு உள்ளதா? திமுக ஆட்சிக்கு எத்தனை மதிப்பெண்.. கிருஷ்ணசாமி பேட்டி
சென்னை: சமூக நீதி பேசும் டாக்டர் கிருஷ்ணசாமி பாஜகவின் பக்கம் இருக்கிறார். ஆனால் திருமாவளவன் எதிர்பக்கம் நிற்கிறார்.. காலம் காலமாக இரண்டு பேரும் பிரிந்தே இருக்கிறீர்களே ஒன்று சேர வாய்ப்பு இல்லையா என்று நெறியாளர் கேட்டார். இதற்கு பதில் அளித்த கிருஷ்ணசாமி, கிருஷ்ணன் எப்போதுமே நியாயத்தின் பக்கமே நிற்பார். அர்ஜூனர் பக்கம் நிற்கிறேன் என்றார்.
இந்தியாவை மதத்தின் பெயரால் துண்டாடவே மணிப்பூர் வன்முறை சம்பவம் பெரிதுப்படுத்தப்படுவதாகவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்களை இப்போது பார்ப்போம்.
2019 முதல் 2024 வரையிலான பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சிக்கு ஒன்றில் இருந்து 10 மதிப்பெண் கொடுங்கள் என்றால் உங்கள் மதிப்பெண் என்ன என்று நெறியாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்த கிருஷ்ணசாமி, இந்தியாவினுடைய பெருமையை உலக அளவில் நிலைநாட்டுவதில் 10க்கு 10 மதிப்பெண் கொடுப்பேன். இந்தியாவினுடைய எல்லையை அதாவது இந்தியாவின் இறையான்மையை பாதுகாப்பதில் 10க்கு 10 மதிப்பெண் கொடுப்பேன். விலைவாசிகளை கட்டுப்படுத்துவதில் 10க்கு ஆறு மதிப்பெண் கொடுப்பேன்.. வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் 10க்கு ஐந்து மதிப்பெண் கொடுப்பேன். கொரோனாவில் அவர் செயல்பட்டவிதத்திற்கு 10க்கு 10 மதிப்பெண் கொடுப்பேன். பல விஷயங்களில் 10க்கு 10 கொடுப்பேன்.ஒன்றிரண்டில் குறைவாக இருக்கும் என்றார்.
திமுகவிற்கு எத்தனை மதிப்பெண் போடுவீர்கள் என்று நெறியாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்த கிருஷ்ணசாமி, தேவைப்படும் நேரத்தில் திமுக தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எல்லா கேள்விக்கு தப்பா எழுதிய திமுகவிற்கு எப்படி மார்க் போடுவது.. திமுக மக்கள் மத்தியில் வெகு தூரம் விலகி சென்றுவிட்டது. திமுக அரசுக்கு மார்க் போடும் அளவிற்கு இல்லை. இன்னும் கொஞ்சம் பார்க்கலாம். திமுக ஆட்சியில் ஊழல் அதிகமாக உள்ளது.
முதலமைச்சருக்கு தெரியாமல் ஊழல் எப்படி நடக்கும். ஊழலுக்கு துணை போகிறார். சரக்கு பாட்டிகள் முறையான வரி கட்டாமல் சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. சாக்குகளில், சந்துகளில், கடைகளில் வீடுகளில் மதுபாட்டில்கள் விற்கப்படுகிறது.இது எப்படி முதல்வருக்கு தெரியாமல் நடக்கும். தெரியவில்லை என்றால் ஆட்சியில் இருப்பதற்கு லாயக்கு இல்லை என்று தான் அர்த்தம். திமுகவில் ஒரு சில குடும்பத்தினர் கைகளில் தான் மொத்த அதிகாரமும், ஆட்சியும் இருக்கிறது. அவர்கள் தான் சம்பாதிக்கிறார்கள் என்று மக்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்துவிட்டது என்றார்.
தென்காசி தொகுதியில் 2024 தேர்தலில போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்க கண்டிப்பாக நான் போட்டியிடுவேன் என்றார். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் சென்ற முறை தோற்றேன்.எனவேநிச்சயம் இந்த முறை போட்டியிட்டு வெல்வேன் என்றார்.
மணிப்பூர் விவகாரம் இந்தியாவிற்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியது என்று சொல்கிறேன். உங்கள் பதில் என்ன என்று நெரியாளர் கேட்டார். அதற்கு பதில் அளித்த கிருஷ்ணசாமி, நிச்சயம் இந்த விவகாரம் கண்டனத்திற்கு உரியது. தண்டனைக்கு உரியது ஈனால் இந்தியாவை மதத்தின் பெயரால் துண்டாடவே மணிப்பூர் வன்முறை சம்பவம் பெரிதுப்படுத்தப்படுகிறது, இந்தியாவின் வளர்ச்சி பொறுக்காமல் காழ்புணர்ச்சியில் சிறு பிரச்சனை என்றாலும் அதை வெளிநாட்டு ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன என்றார்.
சமூக நீதி பேசும் டாக்டர் கிருஷ்ணசாமி பாஜகவின் பக்கம் இருக்கிறார். ஆனால் திருமாவளவன் எதிர்பக்கம் நிற்கிறார்.. காலம் காலமாக இரண்டு பேரும் பிரிந்தே இருக்கிறீர்களே ஒன்று சேர வாய்ப்பு இல்லையா, ஒரே அணியில் இருப்பது இல்லையே என்று நெறியாளர் கேட்டார். இதற்கு பதில் அளித்த கிருஷ்ணசாமி, கிருஷ்ணன் எப்போதுமே நியாயத்தின் பக்கமே நிற்பார். அர்ஜூனர் பக்கம் நிற்கிறேன் என்றார்.
அதிமுக குறித்த கேள்விக்கு, அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பதே என் விருப்பம். அவர்களை பற்றி கருத்துக்கூறுவது சரியல்ல என்றார். முழு பேட்டியை வீடியோவில் பாருங்கள்.












Click it and Unblock the Notifications