"ஓபனா சொல்லிடுங்க.. வேற ஏதாவது பிளான் இருக்கா?".. ஸ்டாலினிடம் டிடிவி தினகரன் முக்கிய கேள்வி
நகைக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிக்கும்படி டிடிவி தினகரன் கோரியுள்ளார்
சென்னை: இன்றைய தினம் பட்ஜெட் கூடும் பரபரப்பான சூழலில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய கோரிக்கை ஒன்றை திமுக அரசிடம் முன்வைத்துள்ளார்.
கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தன்னுடைய தேர்தல் அறிக்கையில் திமுக கூறியிருந்தது.
அதேபோல, திமுக ஆட்சி அமைந்ததுமே, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினும் அறிவித்திருந்தார்.

தள்ளுபடி
எனினும், சொன்னதைபோல, உடனடியாக நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்படவில்லை... மாறாக, கூட்டுறவு வங்கிகளில் முறைகேடாக பலர் பணம் பெற்றிருப்பது தெரியவந்தது... இதையடுத்து, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்பட்டது.. இன்னும் கடன் தள்ளுபடியாகாமல் பலர் காத்திருக்கின்றனர்.. எதிர்க்கட்சிகள் இது தொடர்பான விமர்சனங்களை கையில் எடுத்தது..

எடப்பாடி பழனிசாமி
செல்லுமிடமெல்லாம் திமுக அரசை விமர்சித்தது. அதிலும் நகர்ப்புற தேர்தலில் தன்னுடைய பிரசாரங்களில் இதை மறக்காமல் பதிவு செய்துகொண்டே இருந்தார் எடப்பாடி பழனிசாமி.. இந்நிலையில், இன்றைய தினம் பட்ஜெட் கூட்டம் கூட உள்ளது.. அநேகமாக நகைக்கடன் தள்ளுபடி குறித்து இந்த கூட்டத்தொடரிலே அறிவிக்கப்படும் என்றும் நம்பப்பட்டு வருகிறது.. இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.. அத்துடன் முக்கிய கோரிக்கையும் விடுத்துள்ளார்.. அவர் விடுத்துள்ள அறிக்கை இதுதான்:

தள்ளுபடி
''நகைக்கடன் தள்ளுபடியில் உண்மை நிலை என்ன என்பது குறித்து திமுக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 5 பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற கவர்ச்சியாக அறிவித்த திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதனைச் செயல்படுத்தாமல் புதுப்புது நிபந்தனைகளைப் போட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

துரோகம்
இதனால், 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி என்பதில் திமுக அரசு நம்பிக்கை துரோகத்தை அரங்கேற்ற திட்டமிட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, நகைக்கடன் தள்ளுபடியில் அரசின் நிலைபாடு என்ன என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். மேலும், தள்ளுபடி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போருக்கு 'நகையை மீட்காவிட்டால் ஏலம் விடப்படும்' என நோட்டீஸ் அனுப்புவதையும் உடனடியாக நிறுத்தவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications