"வலிமை" அடைந்த தாழ்வு மண்டலம்.. வானிலையில் நடந்த மாற்றம்! தமிழ்நாட்டில் இன்று எங்கு மழை பெய்யும்
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தாழ்வு பகுதியாக மாறி அதன்பின் தாழ்வு மண்டலமாக மாறி உள்ள நிலையில் இது கொஞ்சம் கொஞ்சமாக நகர தொடங்கி உள்ளது.
சென்னை: வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருகிறது. திரிகோணமலைக்கு 455 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் உருவான மாண்டஸ் புயல் கூட சென்னை மற்றும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளுக்குத்தான் அதிக மழையை கொடுத்தது. பெரிதாக மத்திய மாவட்டங்களுக்கு மழையை கொடுக்கவில்லை. கிழக்கு காற்று காரணமாகவே மத்திய தமிழ்நாடு மாவட்டங்களில் மழை பெய்து வந்தது.
மாண்டஸ் புயல் சென்ற பின் தமிழ்நாட்டில் மழை குறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை மாதமாக வறண்ட வானிலை நிலவி வருகிறது.
சென்னையில் சாரல் மழை.. ஜில்லான திங்கட்கிழமை..காலையில் சட்டென்று மாறிய வானிலை
தாழ்வு மண்டலம்
இந்தநிலையில்தான் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இந்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தாழ்வு பகுதியாக மாறி அதன்பின் தாழ்வு மண்டலமாக மாறி உள்ள நிலையில் இது கொஞ்சம் கொஞ்சமாக நகர தொடங்கி உள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகரும் என்று கூறப்பட்டு உள்ளது.
2 நாட்கள்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 2 நாட்களில் முழுமையாக நகர்ந்து இருக்கும். ஆனால் இதனால் பெரிய மழை இருக்காது. இன்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையில் இந்த தாழ்வு மண்டலம் நகரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து மேற்கு-தென்மேற்கு திசையில் நகர கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று வெதர்மேன் வெளியிட்டுள்ள கணிப்பில், MJO என்று அழைக்கப்படும் madden julian oscillation அலைவு காரணமாக இந்த அரிதான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக போவதாக தெரிவித்துள்ளார்.
மழை
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வங்காள விரிகுடாவில் உள்ளது. இதனால் ஈரப்பதமான காற்று சென்னைக்கு தள்ளப்படும். அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டிற்கு லேசான சின்ன மழை பெய்யும். தமிழ்நாட்டின் மொத்த கடலோர பகுதிகளுக்கும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை மழை பெய்யும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கையில் கரையை கடக்கலாம். அல்லது தெற்கு நோக்கி நகரலாம். டெல்டா மாவட்டங்களிலும் இதனால் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
எங்கு பெய்யும்
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது, என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலைக்கு பின் மழை பெய்யும்.