அன்புமணி அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கமளித்தால் என்னாகும்? குழப்பத்தில் ஜி.கே.மணி?
சென்னை: கட்சிக்கு விரோதமாக செயல்படுவதால் பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து உங்களை ஏன் நீக்கக் கூடாது என பாமக எம்எல்ஏ ஜி.கே.மணிக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அவர் தற்போது என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பாமக தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பென்னாகரம் தொகுதி பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி தொடர்ந்து கட்சி நலனுக்கும், கட்சி தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அவரது அண்மைக்கால செயல்பாடுகள் எல்லாம் எல்லை கடந்தவையாக இருப்பதால், அதற்காக அவர் மீது கட்சியின் அமைப்பு விதியின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து, பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு சென்னையில் கூடி விவாதித்தது.

அப்போது பாமக தலைவர் அன்புமணி மீது ஜி.கே. மணி பொய்யான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் கூறி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த டிச.6-ம் தேதி டெல்லி காவல் ஆணையரிடம் புகார் அளித்தது மற்றும் அன்புமணி மீது அவதூறு பரப்பும் வகையில் டிச.15-ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு நேர்காணல் அளித்தது ஆகிய இரு கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாமக அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் அவரை நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணிக்கு பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜி.கே.மணி அந்த நோட்டீஸுக்கு விளக்கம் அளித்தால் அன்புமணி ராமதாஸின் தலைமையை அவர் ஏற்பதாக அர்த்தமாகிவிடும். விளக்கம் அளிக்காமல் இருந்தால் கட்சியில் இருந்து நீக்கிவிடுவார்கள். இதனால் அவர் என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அன்புமணி ராமதாஸை, ராமதாஸ் தரப்பினர் தலைவர் இல்லை என கூறி வருகிறார்கள். இந்த நிலையில் அவர் அனுப்பிய நோட்டீஸை ஜி.கே.மணி ஒரு பொருட்டாக மதிக்க மாட்டாரா, இல்லை பதிலுக்கு அன்புமணியுடன் இருக்கும் திலகபாமா, வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்டோர் கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி அவர்களை கட்சியில் இருந்து ராமதாஸ் தரப்பு நீக்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தந்தை- மகனிடையே உள்ள மோதல் போக்கு விரைவில் சரியாகும் என சொல்லப்பட்ட நிலையில் கிட்டதட்ட பல மாதங்களுக்கு மேலாகியும் அவர்களுக்கிடையே எந்த ஒற்றுமையும் ஏற்படாத நிலை உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் இப்படி கட்சி பிரிந்து கிடப்பது கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications