அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தும் அதிகாரி பொய் சாட்சிக்காக தண்டிக்கப்படனும்.. செந்தில் பாலாஜி வாதம்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது உண்மை, இதை அமலாக்கத்துறையே சிறப்பு மருத்துவக்குழு மூலம் சோதிக்கட்டும், அப்படி கண்டுபிடிக்கப்பட்டால் அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தும் அதிகாரி பொய் சாட்சியத்திற்காக தண்டிக்கப்பட வேண்டும் என்று செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கப் பிரிவினரால், நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனது கணவரை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வில் முறையிட்டார்.
அப்போது அவர், நேற்று காலை 7 மணி முதல் அமலாக்கப்பிரிவினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியுள்ளனர் எனவும், விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில், சட்டவிரோதமாக காவலில் வைத்திருப்பதாக தெரிவித்தார்.
கைது செய்த போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய அவர், இந்த வழக்கை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு எண்ணிடப்பட்ட விஷயத்தை, நீதிமன்றத்தில் தெரிவித்தால், வழக்கு பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்து இருந்தனர். இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி சுந்தர், நீதிபதி சக்திவேல் ஆகிய இரு நீதிபதிகள்அமர்வு அமைக்கப்பட்டிருந்தது. அந்த அமர்வில் இருந்த நீதிபதி சக்திவேல் வழக்கில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து மீண்டும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வில் பட்டியலிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் எனில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறை முயற்சித்தது. அதன்படி சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியான அல்லி இன்று மாலை அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அவரின் அறையிலேயே இந்த வழக்கு விசாரணை நடந்தது. அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள், செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள் இதையடுத்து செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் அறைக்கு சென்று வாதம் வாதம் வைத்தனர்.
சிகிச்சை அறையிலேயே நடந்த விசாரணையில், செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை வாதம் வைத்தது. ஆனால் செந்தில் பாலாஜி சட்ட விதிகளுக்கு எதிராக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டாரா தெரியவில்லை. அதேபோல் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்றும் தெரியவில்லை என்று செந்தில் பாலாஜி வழக்கறிஞர் இளங்கோவன் வாதிட்டார்.
வாதங்களை கேட்ட பின், செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தார் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி. மருத்துவமனையிலேயே நடந்த விசாரணையில் அவருக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி கஸ்டடி எடுக்கப்பட்டு உள்ளதால் உடனே செந்தில் பாலாஜி தரப்பு சார்பாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே இந்த வழக்கில் வாதிட்ட அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜிக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்றனர். அதற்கான அவசியம் இல்லை என்று நாங்கள் கூறுகிறோம். செந்தில் பாலாஜி உடல்நிலையை கண்காணிக்க சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். செந்தில் பாலாஜியை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற கூடாது என்று கோரியது.
இந்த வழக்கில் வாதிட்ட செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், "அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 ரத்தநாளங்கலில் 70% அடைப்புகள் இருப்பதாக ஓமந்தூரார் மருத்துவமனை கூறியுள்ளது. இ.எஸ்.ஐ மருத்துவமனையும் கூறியுள்ளது. அமலக்கத்துரையின் சார்பாக சிறப்பு மருத்துவக் குழுவும் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசொதிக்கட்டும். அவரைப் பார்க்கட்டும். செந்தில் பாலாஜிக்கு அடைப்பு உண்மை என்று கண்டறியப்பட்டால், அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தும் அதிகாரி பொய் சாட்சியத்திற்காக தண்டிக்கப்பட வேண்டும்." என்று வாதிட்டார். வாதங்களை கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications