அரசே சொல்லும், ஆனாலும் நம்மாதீங்க! ஆனந்த் சீனிவாசன் சொல்ல சொல்ல குலுங்கி சிரித்த "துணிவு" எச்.வினோத்
சென்னை: துணிவு திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ஹெச். வினோத் பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுடன் உரையாடலை நடத்தியிருந்தார். அதில் சீக்கிரம் பணக்காரர் ஆகலாம் என்று கூறி ஏமாற்றும் பல விஷயங்களை ஆனந்த் சீனிவாசன் விளக்க, அதை கைகளைக் கட்டி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் இயக்குநர் ஹெச். வினோத்.
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் துணிவு... வங்கிக் கொள்ளையை அடிப்படையில் இந்த படம் உருவாகியுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இந்தப் படத்தில் பொருளாதாரம் சார்ந்து பல விஷயங்களைப் பேசியுள்ளனர்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் இயக்குநர் வினோத்தை பாராட்டி இருந்தனர். இந்தச் சூழலில் பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், இயக்குநர் வினோத்திடம் தனது யூடியூப் சேனலில் நேர்காணல் எடுத்தார்.

குலுங்க சிரித்த ஹெச் வினோத்
இதில் ஹெச். வினோத் சுவாரசிய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். தான் வங்கியில் வைத்த 10 ஆயிரம் ரூபாயை எப்படி ஏமாந்தேன் என்பது குறித்தும் விளக்கமாகப் பேசியிருந்தார். மேலும், தமிழ்நாட்டில் மக்களிடையே பொருளாதார அறிவு குறைவாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம் இந்த நேர்காணலிலும் வழக்கம் போல ஆனந்த் சீனிவாசன் தான் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தார். பொதுமக்கள் சீக்கிரம் பணக்காரர் ஆகலாம் என்று கூறி ஏமாற்றும் பல விஷயங்களை அவர் விளக்கினார். அதைக் கேட்டுக் கேட்டு இயக்குநர் ஹெச். வினோத் குலுங்கக் குலுங்க சிரித்துக் கொண்டிருந்தார்.

துணிவு
இந்த வீடியோவில் முதலில் பேசிய ஆனந்த் சீனிவாசன், "அஜித் படம் துணிவு நேற்று வெளியாகி இருந்தது. அதைப் பார்த்த பலரும் இது நான் சொல்வதைப் போலவே இருந்ததாகச் சொன்னார்கள். பலரும் கூறிய நிலையில், நான் நேற்று துணிவு படத்தைப் பார்த்தேன். தமிழ் சினிமாவில் முதல்முறையாக மக்களுக்குத் தேவையான ஒன்றைச் சொல்லியுள்ளனர். 45 நிமிடத்தில் மக்களுக்கு என்ன தேவை.. ஒரு வங்கி என்ன செய்ய வேண்டும்.. அதன் வேலை என்ன! என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்லி இருந்தனர்.. இதைத்தான் நான் இத்தனை காலமாகச் சொல்லிக் கொண்டு இருந்தேன். மினிமம் பேலன்ஸ், மியூச்சல் பண்ட் குறித்து எளிமையாக விளக்கியுள்ளனர்.

தலையே சுற்றிவிடும்
வங்கியின் வேலை டெபாசிட் செய்து.. கடன் கொடுப்பது மட்டுமே அவர்களின் வேலை.. ஆனால், அதைத் தவிர அவர்கள் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்.. கிரெடிட் கார்டு, மினிமம் பேலன்ஸ், மியூச்சல் பண்ட் உள்ளிட்டவை குறித்து மக்களுக்கு எளிதாகப் புரியும்படி சூப்பராக விளக்கியுள்ளனர். உண்மையில் நடந்ததைச் சொன்னால் பெரும்பாலோனோருக்குத் தலை சுற்றிவிடும்... அதை அனைவருக்கும் புரியும்படி எளிதாக மாற்றிச் சொல்லியுள்ளனர். உண்மை நிகழ்வுகளைப் புரியும்படி எளிதாக மாற்றிச் சொல்லியுள்ளார். சினிமாகாரர்களுக்கு பொருளாதாரம், நிதி குறித்துத் தெரியாது என்பார்களே.. அதை வைத்து நீங்கள் படம் எடுத்தது எப்படி" என்று கேட்டார்.

சதுரங்க வேட்டை
அதற்குப் பதிலளித்த இயக்குநர் ஹெச்.வினோத், "எனது முதல் படத்தில் இருந்தே நிதி சார்ந்த விஷயங்கள் இருக்கும். எனது முதல் படக் கதையே பணம் ஏன் முக்கியம்? மக்கள் ஏன் அதற்காக இப்படி ஏமாறுகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துத் தான். மக்களிடையே சீக்கிரம் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பதால் தான்.. இப்படிச் சொல்வதை அவர்கள் உடனே நம்பிவிடுகிறார்கள்.. இந்த ஆசையைத் தூண்டி ஏமாற்றுபவரின் கதை தான் சதுரங்க வேட்டை.. இது வங்கி தொடர்பான கதை என்பதால்.. இதில் அதிகம் பேசியிருப்போம்.. இதில் எச்சரிக்கையாக இல்லை என்றால் நாம் காலியாகிவிடுவோம்.. எனது நண்பருக்கு நடந்த விஷயம் தான் இது.. அதை வைத்துத் தான் எழுதினேன்..

வங்கி திவால் ஆனால்
ஆனால், அஜித் போன்ற ஒரு பெரிய நடிகர் கதைக்குள் வந்தார்.. பெரிய நடிகர்கள் உண்மை கதைகளில் நடிக்கும் போது பல சிக்கல்கள் ஏற்படும்.. இதனால் உண்மை சம்பவங்களை ஓரமாக வைத்துவிட்டு இதை மாற்றி எழுதினேன்.. இந்த படம் பார்த்த பிறகு நிதி சார்ந்து எனது ஆர்வம் அதிகரித்துவிட்டது. இந்த கதை சமயத்தில் நிதி சார்ந்த மோசடிகள் குறித்துக் கேட்ட போது.. நடிகர் சுந்தர் சொன்ன விஷயங்களை சினிமாவை விடப் பயங்கரமாக இருந்தது. இதில் நடந்த பல விஷயங்கள் உண்மையானவை.. ஒரு வங்கி திவால் ஆனால்.. 5 லட்சம் வரை மட்டுமே மக்களுக்குக் கிடைக்கும். எனவே, நமது பணத்தையும் உழைப்பையும் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதாலேயே இந்த படத்தை எடுத்துள்ளேன். உண்மையில் பொருளாதாரம் ஈஸியான ஒன்று.. ஆனால், பொருளாதாரம் குறித்த தவறான பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள்.

கிரெடிட் கார்டு
அப்போது பேசிய ஆனந்த் சீனிவாசன், "இங்கு மக்கள் பணத்தை வைத்து பெரிய பதவிகளில் இருப்போர் பொறுப்பே இல்லாமல் அவர்கள் சொந்த லாபத்திற்காக விளையாடுகிறார்கள்.. இதனால் மக்களுக்குத் தான் மிகப் பெரிய இழப்பு ஏற்படுகிறது. உண்மையில் நடந்த பல விஷயங்களை மக்களுக்குப் புரியாது. அதை எளிமையாக மாற்றி மக்களுக்குப் புரியும்படி சொல்லியுள்ளதே படத்தின் வெற்றி" என்றார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய இயக்குநர் ஹெச். வினோத், "நான் லோன் வாங்க வேண்டாம்.. கிரெடிட் கார்டு வாங்க வேண்டாம் எனச் சொல்லவே இல்லை. கவனமாக இருங்கள் என்றே சொல்கிறேன். லோன், கிரெடிட் கார்டு உள்ளிட்டவை கத்தி போன்றவை.. அதை வைத்து என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்.. உங்களை நீங்களே குத்திக் கொள்ளக் கூடாது என்றே நாங்கள் சொல்கிறோம்... வங்கித் துறையில் இருப்பவர்களும் பொதுமக்களை இதில் சிக்க வைக்கப் பொறிவைத்துக் கொடுப்பதைப் போலத் தரக் கூடாது.. அனைத்தையும் விளக்கமாகச் சொல்லியே மக்களுக்குத் தர வேண்டும்.

வெளிப்படைத்தன்மை
வங்கித் துறையை வெளிப்படையான ஒன்றாக மாற்ற வேண்டும் என்பதை நாங்கள் சொல்ல வருகிறோம். மக்கள் பணத்தைப் புரிந்து கொண்டு, முதலீடு செய்வதைப் புரிந்து கொள்ள வேண்டும்.. இந்த விழிப்புணர்வு தான் பொதுமக்களுக்குத் தேவை.. தமிழ்நாட்டில் பொருளாதாரம் குறித்த விழிப்புணர்வு தேவை. எங்கிருந்தோ வந்தவர்கள் தமிழ்நாட்டில் வந்து வியாபாரம் செய்கிறார்கள். இதனால் நமது பணம் வெளிநாடுகளுக்குச் செல்கிறது. இன்சூர்ன்ஸ் போடுங்கள் என்று என்னிடம் டேன்ஸ் எல்லாம் கூட ஆடி காட்டியுள்ளனர்.. நான் இது குறித்துப் படித்த போது.. என்னிடம் வாங்கும் பணத்தில் 80% கமிஷனாக எடுத்துக் கொள்வார்கள் என்பது தெரிந்ததும் ஷாக் ஆகிவிட்டேன். மீதி 20% வைத்த என்ன முதலீடு செய்வார்கள்.. பணம் வந்தால் போதும் என்று பலரும் செயல்படுவதே இதற்குக் காரணமாகும்.

நானே ஏமாந்தேன்
நான் படத்தைத் தயாரிக்க ஒரு முறை புதிய வங்கிக் கணக்கு தொடங்கி 10 ஆயிரம் போட்டு வைத்தேன். சில காலம் அதைக் கவனிக்கவில்லை. பிறகு பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அதில் முதலில் எஸ்எம்எஸ் சார்ஜ் எனச் சொல்லிச் சிறு தொகையை எடுத்துள்ளனர். இதனால் 10 ஆயிரத்திற்குக் கீழ் பேலன்ஸ் போய்விட்டது. அதன் பிறகு மினிமம் பேலன்ஸ் இல்லை என்று தொடர்ந்து எடுத்து ஜீரோ ஆக்கிவிட்டார்கள். நமக்கே இப்படி நடக்கிறது என்றால்.. வங்கியை முழுமையாக நம்பும் மக்களின் நிலையை நினைத்துப் பாருங்கள்" என்றார். அப்போது குறுக்கிட்ட ஆனந்த் சீனிவாசன், "இதில் விஷயம் என்னவென்றால் பணம் இல்லை என்று விதிக்கப்படும் அபராதத்திற்கு 18% ஜிஎஸ்டி போடுகிறார்கள். மக்கள் பணத்தை வைத்துப் பெரு முதலீட்டாளர்கள் விளையாடுகிறார்கள்" என்றார்.

பொறுப்புடன் இருங்கள்
தொடர்ந்து பேசிய வினோத், "ஓரிரு மாதங்களில் உடனே பணக்காரர் ஆக முடியும் என யார் சொன்னாலும்.. அது நமது அரசாக இருந்தாலும் கூட நம்பக் கூடாது. எப்படிக் கொடுப்பீர்கள் எனக் கேட்க வேண்டும். அதிக லாபம் தருவீர்கள் என்று சொல்பவர்கள் குறித்து விரிவாக விசாரணை நடத்திய பின்னரே முடிவு எடுக்க வேண்டும். ஆனால், ஏமாற இவர்களே சென்று வரிசையில் நிற்கிறார்கள்.. கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தைச் செலவிடம் முன் உரிய ஆய்வு செய்யுங்கள்.. யார் சொல்வதையும் கேட்காதீர்கள். நீங்களே ஆய்வு செய்து முடிவு எடுங்கள்.. பண விஷயங்களில் மேஜிக்குகள் நம்பாதீர்கள்" என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications