ஓடும் ரயிலில் செல்போன் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்! என்ன செய்யக்கூடாது.. பலருக்கும் தெரியாத உண்மை
சென்னை: ரயில் பயணங்களின்போது கை தவறி செல்போன் வெளியே விழுந்துவிட்டது என்றால் நம்மில் பலருக்கும் என்ன செய்வதென்றே தெரியாது. ஆனால், இதுபோன்ற சூழல்களில் பதற வேண்டாம். சில எளிமையான நடவடிக்கைகளை எடுத்தாலே போதும் தொலைந்து போன செல்போன் உங்கள் கைகளுக்கு வந்துவிடும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ரயில் பயணத்தின்போது ஜன்னல் சீட்டில் பாட்டுக் கேட்டுக் கொண்டே போவது பலருக்கும் பிடிக்கும். அப்படி ஜாலியாக போகும்போது திடீரென செல்போன் வெளியே விழுந்தால் பதற வேண்டாம்.. இதுபோன்ற சூழல்களில் பயணிகள் அவசரப்படாமல், சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று ரயில்வே துறை அறிவுறுத்துகிறது. உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க்கை கொண்டுள்ள இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள், நீண்ட தூரப் பயணங்களில் அடிக்கடி ஏற்படவே செய்கிறது.

என்ன செய்யக்கூடாது!
பெரும்பாலான பயணிகள், ஓடும் ரயிலில் இருந்து தங்கள் செல்வோன் விழும்போது அவசரச் சங்கிலியை இழுக்க முற்படுகின்றனர். இருப்பினும், இந்தச் செயலைத் தவிர்க்குமாறு ரயில்வே அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர். விபத்துகள், தீ விபத்துகள் அல்லது மருத்துவ அவசரநிலைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளுக்கு மட்டுமே அவசரச் சங்கிலி பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்த அவசர சங்கிலியைத் தவறாகப் பயன்படுத்தினால் ₹5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும், இதனால் ரயிலின் பயண நேரத்திலும் தேவையற்ற தாமதங்கள் ஏற்படும். மேலும், இதுபோல எமர்ஜென்சி பிரேக்கை இழுப்பதன் மூலம் தொலைந்த போனை மீட்டெடுக்க முடியும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.
என்ன செய்ய வேண்டும்!
பொதுவாக செல்போன் கீழே விழும்போது, எங்கு அதைத் தொலைத்தோம் என்பதைத் துல்லியமாகக் குறித்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. ரயில்வே தண்டவாளங்களில் கம்பங்கள் மற்றும் கிலோமீட்டர் குறியீடுகள் இருக்கும். இந்தக் குறியீடுகள், தொலைந்த பொருளைக் கண்டறிய அதிகாரிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். எனவே, கம்பத்தின் நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது தொலைந்த பொருளை மீட்டெடுக்க பெரியளவில் உதவும்.!
எப்படி புகாரளிக்கலாம்
இந்த நம்பரை நோட் செய்த பிறகு, உடன் பணிப்போரின் செல்போன் மூலம் 24 மணி நேரமும் செயல்படும் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி எண் 182க்கு உடனடியாக அழைக்க வேண்டும். அவர்களிடம் ரயில் எண், பெட்டி எண், சம்பவம் நடந்த இடம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். உங்கள் புகார் பதிவு செய்யப்பட்ட உடன் அருகிலுள்ள ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் ரயில்வே போலீசாருக்கு இது குறித்து தகவல் அளிப்பார்கள். அந்த ரயில்வே போலீசார் நீங்கள் தொலைத்த இடத்தில் தேடுவார்கள்.
ரயில்வே போலீசாரை தொடர்பு கொள்ள முடியாவிட்டால், 1512 அல்லது ரயில்வே பயணிகள் உதவி எண் 138ஐ தொடர்பு கொள்ளலாம். அதிலும் மேலே கூறப்பட்ட தகவல்களைச் சொல்லிப் புகாரளிக்கலாம்.
திரும்பக் கிடைக்கும்
செல்போன் கிடைத்த பிறகு அதை வாங்க உரிமையாளர் அடையாளச் சான்றுடன் நேரில் செல்ல வேண்டும். அப்போது போலீசாரிடம் தொலைப்பேசி குறித்த சரியான தகவல்களையும் வழங்க வேண்டும். முறையான சரிபார்ப்புக்குப் பிறகு, செல்போன் உட்பட எந்தவொரு பொருளும் உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்.
சமீபத்திய ஆண்டுகளில் இதுபோல பல பொருட்களை மீட்டுக் கொடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். கடந்த ஜனவரி 2024 முதல் பிப்ரவரி 2025 வரையிலான காலகட்டத்தில் மட்டும் ₹84 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.. வடகிழக்கு எல்லை ரயில்வேயின் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட திட்டத்தில் பல ஆயிரம் கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளது.
ரொம்ப முக்கியம்
இத்தகைய சூழ்நிலைகளில் சரியான நேரத்தில் தகவல் அளிப்பதும், துல்லியமான தகவல்களை வழங்குவதும் மிக முக்கியம் என்று ரயில்வே வலியுறுத்துகிறது. எனவே, செல்போன் ஒருவேளை கைதவறி விழுந்துவிட்டது என்றால் பதற்றப்படாமல்.. தேவையான தகவல்களை நோட் செய்து புகார் அளியுங்கள். அது மட்டுமே நீங்கள் தொலைத்த பொருளைக் கண்டுபிடிக்க உதவும்!












Click it and Unblock the Notifications