அப்பாவு அறைக்கு போன வேலுமணி.. சபாநாயகர் கையில் லகான்! ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவா? பேட்டியில் சொன்னது என்ன?
சென்னை: அதிமுகவில் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி மாற்றப்பட்டுள்ள நிலையில், அதில் சபாநாயகர் அப்பாவுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் எதிர்பார்க்கப்பட்டபடியே எதிர்கட்சித் துணை தலைவர் மாற்றப்பட்டு உள்ளார். அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் கடந்த வாரம் நீக்கப்பட்டார். பொதுக்குழு கூட்டத்தில் அவரின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர், அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்கட்சித் துணை தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி நிலவியது. வேலுமணி, ஜெயக்குமார், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட பலரின் பெயர்கள் இதில் அடிபட்டது.

கடிதம்
இந்த நிலையில்தான் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டால், அதை ஏற்றுக்கொள்ள கூடாது என்று ஏற்கனவே ஓ பன்னீர்செல்வம் தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நீங்கள் இதில் எதுவும் முடிவு எடுக்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை வைத்தது. ஓ. பன்னீர்செல்வம் வழங்கிய கடிதம் பரிசீலனையில் உள்ளது என்று சபாநாயகரும் தெரிவித்துள்ளார்.

நியமனம்
இந்த நிலையில்தான் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கொறடா வேலுமணி சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதன்படி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்படுகிறார். ஆர்பி உதயகுமாரை துணை தலைவராக தேர்வு செய்கிறோம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு
இதனால் தற்போது முடிவு சபாநாயகர் அப்பாவு கைக்கு சென்றுள்ளது. எதிர்க்கட்சி துணை தலைவரை நீக்குவது என்றால் அதற்கு சபாநாயகர்தான் அனுமதி அளிக்க வேண்டும். அப்பாவு என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தை முதல்வர் ஸ்டாலின் "அதிமுக ஒருங்கிணைப்பாளர்" என்று அழைத்தார். இதனால் ஓ பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதை திமுக தரப்பு எப்படி பார்க்கும், இதில் என்ன முடிவு எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அப்பாவு பேட்டி
இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில், 30 நிமிடத்திற்கு முன்பாக எதிர்க்கட்சி கொறடா வேலுமணி என்னுடைய அறைக்கு வந்திருந்தார். சென்னையில் உள்ள என்னுடைய அலுவலக அறைக்கு அவர் வந்துள்ளார் . என்னை சந்திக்க நேரம் கேட்டு இருந்தார். நான் வேறு நிகழ்ச்சியில் இருந்ததால், அறையில் அப்போது உதவியாளர் மட்டுமே இருந்தார். அதனால் நான் முடித்துவிட்டு வந்ததும் பேசுகிறேன் என்று கூறி இருந்தேன். என் உதவியாளர் வேலுமணி கொடுத்த கடிதத்தை கையில் வைத்து இருந்தார்.

கடிதத்தில் என்ன இருக்கிறது?
அந்த கடிதத்தில் என்ன என்பதே தெரியவில்லை. நான் கடிதத்தை இன்னும் படிக்கவில்லை. அதற்குள் செய்தியாளர்கள் இது எதிர்க்கட்சி துணை தலைவர் பற்றியது என்று சொல்கிறார்கள். ஆனால் நான் கடிதத்தை படிக்க வேண்டும். சென்னை சென்ற பின் படித்து பார்க்கிறேன். அதன்பின்தான் அதில் முடிவு எடுக்க வேண்டும்.

அப்பாவு முடிவு
கடந்த வாரம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் துணை தலைவருமான இருந்த ஓ பன்னீர்செல்வம் என்னிடம் ஒரு கடிதம் கொடுத்தார். அது பரிசீலனையில் உள்ளது என்றார். அப்போது கேள்வி எழுப்பிய செய்தியாளர் நீங்கள் யாருக்கு ஆதரவாக முடிவு எடுப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த அப்பாவு.. இப்போது வேலுமணி கடிதம் கொடுத்துள்ளார். இரண்டையும் பரிசீலனை செய்வோம். ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்கிறேன். சட்டப்படி, நியாயப்படி, விதிப்படி நாங்கள் நடப்போம்.

யாருக்கு ஆதரவு?
ஜனநாயக முறைப்படி, ஒருதலைபட்சம் இல்லாமல்.. விதிப்படி நாங்கள் நடப்போம். தனிப்பட்ட முறைப்படி யார் மீதும் விருப்பு, வெறுப்பு இன்றி நடப்போம். அவங்க கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது. யாருக்கு எம்எல்ஏக்கள் அதிகம் உள்ளது என்று நான் சொல்ல முடியாது. கோர்ட் முடிவு எடுக்கட்டும். என்னை பொறுத்தவரை அவர்களின் எல்லா எம்எல்ஏக்களும் இரட்டை இலை சின்னத்தில் வென்று வந்தவர்கள்.

கடிதத்தில் என்ன இருக்கிறது
அவர்கள் ஏன் எதிர்கட்சித் துணை தலைவரை மாற்றுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். கடிதத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும். கோர்ட் வழக்கு நடக்கிறது. தேர்தல் ஆணையத்தில் புகார் உள்ளது. அந்த விசாரணை எல்லாம் நடக்கட்டும். நான் சட்டசபை விதிப்படி நடப்பேன். அதில் மாற்றங்கள் இருக்காது, என்று சபாநாயகர் அப்பாவு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications