ஓவர்.. அடுத்த ஒரு வாரத்திற்கு.. சென்னையில் வானிலையில் என்ன நடக்கும்? வல்லுனர்கள் கொடுத்த வார்னிங்!
சென்னை: சென்னையில் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் (chennairains.com) வானிலை அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையில் இந்த வருடத்தின் முதல் புயலாக மாண்டஸ் புயல் கடந்த வாரம் தமிழ்நாட்டை தாக்கியது. இதையடுத்து தமிழ்நாட்டில் படிப்படியாக மழை குறைய தொடங்கி உள்ளது. தற்போது வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது.
தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மற்றபடி தமிழ்நாடு முழுக்க பெரும்பாலும் வானிலை வறண்டு காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல்
இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தது. முதலில் இந்த புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவானது. அதன்பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்தது. பின்னர் வேகமாக வலுவடைந்து இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதையடுத்து மாண்டஸ் புயலாக உருவெடுத்த இது தீவிர புயலாக மாறி சென்னை அருகே வந்தது. ஆனால் சென்னையில் கரையை கடக்கும் போது அதிதீவிர புயலாக இல்லாமல் சாதாரணமாக புயலாக மாறியது. சென்னை அருகே மகாபலிபுரத்தில் இந்த மாண்டஸ் புயல் கரையை கடந்தது.
மழை
இந்த புயல் காரணமாக கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை தமிழ்நாட்டில் நல்ல கனமழை பெய்தது. இந்த புயல் பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி கரையைக் கடந்தது மற்றும் சிட்டியில் காற்றின் வேகம் மணிக்கு 70-75 கி.மீ அளவில் இருந்தது. மகாபலிபுரம்,கேளம்பாக்கம் பகுதிகளில் காற்றின் வேகம் மிக அதிகமாகவும், மணிக்கு 90 கி.மீ என்ற அளவிலும் இருந்தது. புயலின் மைய பகுதி காஞ்சிபுரம்-பனப்பாக்கம்-வெம்பாக்கம் பகுதியில் விழுந்தது. வெம்பாக்கம் பகுதியில் 250 mm மழை பெய்தது. பனப்பாக்கத்தில் 198 மி.மீ., காஞ்சிபுரத்தில் 185 மி.மீ. திருவள்ளூரில் ஆவடியில் 170 மி.மீ., சென்னையில் அயனாவரத்தில் 150 மி.மீ மழை பெய்தது.
மழை பெய்தது
கரையை கடந்த பின் இந்த புயல் வலிமை குறைந்து அரேபியன் கடலுக்கு சென்றது. ஆனால் அரேபியன் கடலுக்கு சென்ற பின்பும் தமிழ்நாட்டிற்கு இது கடந்த 2 நாட்களாக மழையை கொடுத்தது. புயல் காரணமாக தமிழ்நாடு நோக்கி வந்த மேகங்கள் மழையை கொடுத்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இதனால் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தது. அதேபோல் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் லேசான மழை ஆங்காங்கே பெய்தது. நேற்று மாலைக்கு பின் தமிழ்நாட்டில் படிப்படியாக மழை குறைந்தது.
சென்னை
இந்த நிலையில் சென்னையில் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் (chennairains.com) வானிலை அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது. அதில், இன்று முதல் தீபகற்ப இந்தியாவில் மழை பெய்வது வெகுவாகக் குறையும். மேற்கு உள் தமிழ்நாடு மாவட்டங்களில் மழை பெய்வது இப்போதே குறைய வாய்ப்பு இல்லை. மேற்கு தமிழ்நாட்டின் சில பகுதிகழில் இன்று ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் வாரம் முழுவதும் வறண்டு இருக்கும், என்று சென்னை ரெயின்ஸ் வானிலை மையம் கூறி உள்ளது. சென்னையில் வறண்ட காற்று காரணமாக வெயில் நிலவும். அதேபோல் தமிழ்நாட்டின் மற்ற கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் வானிலை வறண்டு காணப்படும்.