அதிமுக 'பொ.செ' ஓபிஎஸ்.. ஆதித்த கரிகாலன் ஈபிஎஸ்.. அதே தப்பை பண்ணிட்டாரு.. அரசியல் விமர்சகர் கருத்து!
சென்னை : இன்றைய நிலையில் பொ.செ ஓ.பன்னீர்செல்வம், அதாவது பொதுச் செயலாளர் அல்ல.. பொன்னியின் செல்வன் ஓபிஎஸ், ஆதித்த கரிகாலன் ஈபிஎஸ் என அரசியல் விமர்சகர் தராசு ஷ்யாம் விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதித்துள்ளது.
இதனால் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கும் திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது அவசர அவசரமாக தேர்தல் நடத்தும் திட்டத்தில் ஈடுபட்டதே ஈபிஎஸ் செய்த தவறு என்றும், அதனால் தான் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் அரசியல் விமர்சகர், மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

பொதுக்குழு வழக்கில் அதிரடி உத்தரவு
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஓபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதிமுகவின் அனைத்து பதவிகளுக்கான நியமனங்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் மேற்கொள்ள முடியும் என்றும், அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதங்களை முன்வைத்தது.

தேர்தல் நடத்த தடை
ஓபிஎஸ் தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் மனு மீது பதிலளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டது. மேலும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதையடுத்து தேர்தலை நடத்த மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவாதம் அளித்துள்ளது. இதனால், ஈபிஎஸ்ஸின் பொதுச் செயலாளராகும் திட்டம் தடைபட்டுள்ளது.

பொ.செ பன்னீர்செல்வம்
இந்நிலையில், இந்த வழக்கின் உத்தரவு பற்றி தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அரசியல் விமர்சகர் தராசு ஷ்யாம், "இன்றைய தேதிக்கு அதிமுகவின் பொ.செ ஓ.பன்னீர்செல்வம், அதாவது பொதுச் செயலாளர் அல்ல.. பொன்னியின் செல்வனாகி விட்டார் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி ஆதித்த கரிகாலனாகிவிட்டார். காரணம், உச்ச நீதிமன்றத்தில் இன்றைய தேதிக்கு வழக்கு விசாரணை பட்டியலிடப்பட்டுவிட்ட பிறகு, அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த என்ன அவசரம் இருக்கிறது?

நீண்ட கால ப்ராசஸ்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தபிறகு அந்த முயற்சிகளை எடுத்திருக்கலாம். இப்போது தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், அதை விலக்க மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு அந்த வழக்கு விசாரணைக்கு வந்து, வாதங்கள் நடந்து, உத்தரவு கிடைக்க வேண்டும். இந்த சட்டப்பூர்வ நடவடிக்கை நீண்ட செயல்முறை. நீண்ட காலம் எடுக்கலாம்.

ஈபிஎஸ்ஸுக்கு பெரிய பின்னடைவு
இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு இது ஒரு பெரிய பின்னடைவு. ஓ.பன்னீர்செல்வத்துக்கு இந்த உத்தரவு பெரிய நிம்மதிப் பெருமூச்சைக் கொடுத்திருக்கும். காரணம், ஓபிஎஸ் தரப்பு மிகவும் பலவீனமாக இருந்தது. சிவசேனா வழக்கில் எது எப்படி இருந்தாலும், மக்களாட்சியைப் பொறுத்தவரை எண்ணிக்கை தானே முக்கியம் என நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்திருந்தார்.

ஆதித்த கரிகாலன் செய்த தவறு
அப்படி இருக்கும்போது, அதிக மெஜாரிட்டி கொண்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பது ஈபிஎஸ் டீம் செய்த தவறுகளால் தான். காரணம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறபோது தேர்தலை நடத்தத் திட்டமிட்டார். கல்கியின் 'பொன்னியின் செல்வன்' புதினத்தில் ஆதித்த கரிகாலன் என்ன தவறு செய்தாரோ அதே தவறை எடப்பாடி பழனிசாமியும் செய்திருக்கிறார்" என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications