தமிழகம் முதலிடத்தில் இருப்பதால் வயிற்றெரிச்சல்! யுஜிசி விதிகள்: என்னவாகும் உயர்கல்வி நிலை? ஸ்டாலின்
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அந்த அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் மத்திய அரசு இப்படி செய்வதாக ட்வீட் பதிவிட்டுள்ளார்.
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன தேடுதல் குழு தொடர்பாக யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகளின் படி, "பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தேடுதல் குழு தலைவராக ஆளுநர் பரிந்துரைக்கும் நபரும், உறுப்பினர்களாக யுஜிசி பரிந்துரைக்கும் நபரும் இருப்பர் என்று புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது.

யுஜிசி வரைவு நெறிமுறை வெளியான போதே, சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தமிழ்நாடு எதிர்த்து போராடும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதை கண்டித்து திமுக சார்பில் போராட்டங்களும் நடந்தன. இந்த நிலையில், தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார்.
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அந்த அரசினர் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பாஜக மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பும் செய்தனர். அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் மு. அப்பாவு குரல் வாக்கெடுப்பின் மூலம் அரசினர் தனித் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினார்.
தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான் இது என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- கல்லூரிகள் இயங்குவது மாநில அரசின் இடத்தில்; பேராசிரியர்களுக்கு ஊதியம் தருவது மாநில அரசு; உதவித்தொகை - ஊக்கத்தொகை - கல்விக் கட்டணச் சலுகை என மாணவர்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்வது நாங்கள்!
இவ்வளவையும் நாங்கள் செய்ய, எம் பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருந்து நிர்வகிப்பதோ எங்கிருந்தோ வந்த ஆளுநர்! இதையெல்லாம் மிஞ்சும் கொடுமையாக, துணைவேந்தரையும் ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநரே நியமிக்கலாம் என்று #UGC தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை?
தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான் #UGC_Draft_Regulations! இதனை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழர்களின் ஒன்றுபட்ட குரலுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம்! வெல்வோம்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications