கிராமப்புறங்களில் எம்ஜிஆர் பெயரை கூறி.. கமல் பிரச்சாரம் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?
சென்னை: கமல்ஹாசன் தனது பிரச்சாரங்களில், மக்கள் திலகம் எம்ஜிஆரின் பெயரை கூறுவதால் யாருக்கு லாபம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. சில கட்சிகள் ஏப்ரல் மாதமே தேர்தலை நடத்த கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளன. பொதுவாக எந்த ஒரு கட்சியும் ஒருவரை ஒருவர் குறை கூறி கொண்டே பிரச்சாரங்களை செய்வர்.
ஆனால் அதற்குள் தற்போது எம்ஜிஆரை உரிமை கொண்டாடுவது யார் என்பதிலான விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டன. எம்ஜிஆரின் வாரிசு தான்தான் என கமல்ஹாசன் கூறுகிறார்.

அரசியல் வாரிசு
ஆனால் அதிமுகவினரோ எம்ஜிஆரின் அரசியல் வாரிசு ஜெயலலிதாதான் , வேறு யாரும் இல்லை என கூறி வருகிறார்கள். குறிப்பாக எம்ஜிஆரின் வாரிசு கமல் என கூறுவதை கிராமப்புற எம்ஜிஆர் ரசிகர்கள் எப்படி ஏற்பார்கள், அது போல் எங்கோ ஒரு மூலையில் அரசியலில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் எம்ஜிஆரை குலச்சாமியாக கருதும் தொண்டர்கள் இதை ஏற்பார்களா.

இரட்டை இலை
இது மிகவும் முக்கியமானதாகும். பொதுவாக எந்த தேர்தலிலும் சின்னங்கள் மட்டுமே பேசும். அதனால்தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட போது அதை அத்தனை பாடுபட்டு திரும்ப பெற்றது அதிமுக. கிராமங்களில் கட்சியின் பெயரை சொல்லமாட்டார்கள். சூரியன் கட்சிக்காரங்க, இரட்டை இலை கட்சிக்காரங்க... என்றே சொல்வார்கள்.

வாக்காளர்கள்
தேர்தலில் வாக்காளர்களை காட்டிலும் அவர்கள் பெரிதும் அறிந்திருப்பது சின்னங்கள்தான். இவ்வளவு ஏன் ஜெயலலிதா 2011 ஆம் ஆண்டு தேர்தலிலும் 2016ஆம் ஆண்டு தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற்றார். இதற்கு காரணம் ஜெயலலிதாவும் அவரது இரட்டை இலை சின்னமும்தானே தவிர, நம் தொகுதிக்கு யார் எம்எல்ஏ, யார் எம்பி, யார் மேயர், யார் நகராட்சித் தலைவர், யார் ஊராட்சி தலைவர், யார் பஞ்சாயத்து தலைவர், யார் கவுன்சிலர் என்று கூட சிலருக்கு தெரியாது.

ஓட்டு போடுங்கள்
இந்த சூழலில் எம்ஜிஆர் பெயரை கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் பயன்படுத்தினால் கிராமப்புறங்களில் அவர்களுக்கு எப்படி ஓட்டு கிடைக்கும்? எம்ஜிஆரையும் இரட்டை இலையையும் பிரித்து பார்க்கத் தெரியாத மக்கள் முன்பு எம்ஜிஆர் பெயரை சொல்லிவிட்டு டார்ச்லைட் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என எப்படி கேட்க முடியும்?

இலவச விளம்பரம்
எனவே எம்ஜிஆர் எம்ஜிஆர் என சொல்வதால் மக்கள் இரட்டை இலையை மட்டுமே தங்கள் மனதில் பதித்துக் கொள்வார்கள். மேலும் தற்போதைய அரசியல் கட்சிகளுக்கு பல நடிகர், நடிகைகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அது போல் இரட்டை இலை கட்சிக்கு பிரச்சாரம் செய்ய வந்தவர் கமல் என கிராம மக்கள் கருதிவிட்டால் அதிமுகவுக்கு இலவசமாக பிரச்சாரம் செய்வது போல் ஆகிவிடும் என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாகும்.












Click it and Unblock the Notifications