பிரதமராக ஸ்டாலினை முன்மொழிய சான்ஸ்? பாஜகவில் 50% புதிய அமைச்சர்கள்.. மோடி தியானத்தின் முழு ரகசியம்!
சென்னை: 'இந்தியா' கூட்டணி சார்பாக மு.க.ஸ்டாலின் பிரதமராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடி 3 நாள் பயணமாகத் தமிழ்நாட்டிற்கு வருகிறார். இன்று மாலை முதல் அவர் குமரி முனையிலுள்ள விவேகானந்தர் பாறை மீது மொத்தம் 3 நாள்கள் தியானம் செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தப் பயணத்தை அனுமதிக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மோடியின் வருகையை எதிர்த்து #Go back modi போஸ்டர்கள் சென்னை முழுக்க ஒட்டப்பட்டுள்ளன.
இந்தப் பயணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அவர் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்பது உறுதி என்று பாஜகவினர் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
ஆனால், எதிர்க்கட்சியினர் பாஜக இந்த முறை 200 தொகுதிகளைத் தாண்டாது என்று ஒரு வாதத்தை முன்வைத்து வருகின்றன.
பிரதமர் மோடியின் வருகை குறித்து சில பிரத்தியேகமான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார் டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன்.
அவர், பிரதமருடன் கடந்த 30 ஆண்டுகளாகத் தனிச் செயலாளராக உள்ள அதிகாரிகள் உட்பட 4 பேர் வர உள்ளதாகவும், அவர்கள் இந்த 3 நாள்களில் புதிய ஆட்சியில் இடம்பெறப் போகும் மத்திய அமைச்சர்களின் பட்டியலைத் தயாரிக்க இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் பதவி ஏற்பு விழாவை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைப்பதா? ஜனாதிபதி மாளிகையில் நடத்துவதா? அல்லது வேறு இடத்தில் வைப்பதா? என்பது பற்றிய முடிவுகளைத் தமிழ்நாட்டிலிருந்துதான் கலந்தாலோசித்து எடுக்க உள்ளனர் என்றும் ராஜகோபாலன் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேசியுள்ளார்.
பிரதமர் மோடியின் வருகை குறித்து ராஜகோபாலன் பேசுகையில், "இந்தப் பயணத்தில் புதிய மந்திரி சபை பட்டியலைத் தயாரிக்க உள்ளார் பிரதமர். இந்த முறை 50% மந்திரிகள் புதிய முகங்களாக இருப்பார்கள்.
காரணம், ஏற்கெனவே பாஜக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் சிறிய அளவில் எதிர்ப்பு உருவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு அது ஏற்படுவது இயற்கைதான்.

ஆகவே, இந்த முறை புதிய முகங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் கொடுக்க உள்ளார். தமிழ்நாட்டிலிருந்து 4 பேருக்கு மத்திய மந்திரி வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளது. அதில் 3 பேர் பெண்களாக இருப்பார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.
அதேபோல் 2 ஆளுநர்கள் மந்திரியாக வாய்ப்பு உள்ளது. கேரள ஆளுநருக்குச் சட்ட அமைச்சர் பதவிக் கிடைக்கலாம் என்கிறார்கள்" என்று பேசியுள்ளார்.
அவரிடம் மோடியின் வருகைக்குத் தமிழ்நாட்டில் எதிர்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது. கோ பேக் மோடி கோஷம் எழுந்துள்ளது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "பிரதமர் மோடி இதுவரை இந்தியா முழுவதும் 6750 முறை பயணம் செய்துள்ளார். அதில் 60 முறை மேற்கு வங்கம் சென்றுள்ளார். 55 முறை அசாம் சென்றுள்ளார். அதே போல தமிழ்நாட்டிற்கு 55 முறை வருகை தந்துள்ளார்.
ஆகவே, இந்த எதிர்ப்பு எல்லாம் பெரிய விசயம் இல்லை. மோடியின் இலக்கு வருகின்ற 2026 தேர்தல்தான். தமிழ்நாட்டை அவர் டார்கெட் செய்துள்ளார். குறைந்தது 75 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைப்பதற்கான திட்டங்களை வகுத்து வருகிறார்.
ஒரு ஸ்கூப் செய்தி சொல்கிறேன். திமுகவில் 3 ஏக்நாத் ஷிண்டேகள் உள்ளனர். மொத்தம் 8 தலைவர்கள் மோடி பிரதமராகப் பதவி ஏற்ற 3 மாதத்தில் பாஜகவில் இணைவார்கள். அதிமுகவிலிருந்தும் இருந்தும் 3 தலைவர்கள் வர உள்ளனர்" என்றவர் டெல்லியில் நடைபெற உள்ள 'இந்தியா' கூட்டணி கூட்டம் பற்றி சில தகவல்களைப் பேசி உள்ளனர்.

அதில், "காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரதமராக மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமராகப் பதவியில் அமர்த்த ஒரு திட்டம் இருந்தது. ஆனால், கார்கேவுக்கு 83 வயதாகிவிட்டது. அவர் அந்தப் பதவி தனக்கு வேண்டாம் எனக் கூறிவிட்டார்.
மம்தா இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதாகக் கூறியுள்ளார். ராகுல் தனக்குப் பிரதமர் பதவி தேவையில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்.
ஆகவே, பிரதமராகும் வாய்ப்பு மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது. அவரை முன்மொழிவதற்கான வாய்ப்புகள் அதிகம் தெரிகிறது. ஆனால், இதற்கு எல்லாம் வாய்ப்பு இல்லை.
மீண்டும் மோடி பதவியேற்பது உறுதி. அவர் பதவிக்கு வந்துவிட்டால் திமுகவையும் மம்தாவையும் அரவிந்த் கெஜ்ரிவாலையும் ஒரு கை பார்த்து விடுவார்.
திமுக பழனியில் முருகனுக்கு மாநாடு நடத்த உள்ளது. அரோகரா அரோகரா என்று சொல்வதைப் போல திமுகவின் எதிர்காலம் ஸ்டாலினுடன் முடிந்துவிடும். அதை மோடி செய்துவிடுவார்" என்று பல விசயங்களைப் போட்டு உடைத்துள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications