ஆர்எஸ்எஸ் பேரணி செல்வதில் என்ன தவறு? ‘எப்பவுமே அமைதியா தான் நடக்கும்’ - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!
சென்னை : காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் பேரணி சென்றால் என்ன தவறு என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் பேரணி செல்ல நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்துவதில் என்ன தவறு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்தி அன்று பேரணி செல்வதில் தவறு எதுவும் கிடையாது என்றும் காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்எஸ்எஸ் சகோதரர்களுக்கு மற்றவர்களைப் போல உரிமை உள்ளது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன் தந்தை குமரி அனந்தனுக்கு கிடைத்த கவுரவம்! புது வீடு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!
ஆர்.எஸ்.எஸ் பேரணி
தமிழ்நாடு முழுவதும் 51 இடங்களில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஆர்எஸ்எஸ் நிபந்தனைகளுடன் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
ஆளுநர் தமிழிசை
இந்நிலையில் இன்று சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாகவும் ஆர்.எஸ்.எஸ் பேரணி சர்ச்சை பற்றியும் பேசினார். அவர் பேசுகையில், "எந்த மாநிலமாக இருந்தாலும் அங்கு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெறக்கூடாது. இது பொதுமக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது. ஒரு மாநிலத்தில் சமய சார்பற்ற உணர்வு இருக்க வேண்டும். அது தவறும்போது பலரை கோபமுறச் செய்கிறது.
அனைவரும் சமம் தானே
எல்லா வகையிலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அமைதியோடு கூடிய பாதுகாப்பும் அன்பு உணர்வும் இருக்க வேண்டும். எவ்வளவு விமர்சனம் வந்தாலும் பரவாயில்லை. என்றைக்கும் மக்களுக்காக செயல்படுகிறேன். எல்லோரும் சமம் என்று சொல்லும்போது ஒரு இயக்கத்திற்கு மட்டும் எப்படி தடை சொல்ல முடியும்?
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு ஏன் தடை?
அமைதிப் பேரணியை எதற்கு தடை செய்ய வேண்டும்? ஆர்எஸ்எஸ் பேரணியை ஏன் தடை செய்ய வேண்டும்? ஆர்எஸ்எஸ் பேரணி எப்போதும் அமைதி ஊர்வலமாகவே இருந்தது. தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்தி அன்று பேரணி செய்வதில் என்ன தவறு? காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்எஸ்எஸ் சகோதரர்களுக்கு மற்றவர்களைப் போல உரிமை உள்ளது." எனத் தெரிவித்தார்.