"பச்சைகொடி".. அவங்க 2 பேரும் சேரப்போறாங்களாமே.. "நெருங்கும் மேகங்கள்".. எடப்பாடி பழனிசாமி ப்ளான்?
சென்னை: விரைவில் அதிமுக மூத்த தலைவர் வைத்திலிங்கம் வீட்டில் விசேஷம் நடக்க போகிறது.. இந்த விசேஷத்தில் 3 முக்கிய தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்து கொள்ள போவதாக செய்திகள் கசிந்து வருகின்றன.
சசிகலாவை விரைவில் சந்திப்பேன் என்று ஓபிஎஸ் சொல்லி வருகிறாரே தவிர இதுவரை அப்படி ஒரு சந்திப்பை நடத்தவில்லை.. இதற்கு என்ன காரணம் என்று இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை..
ஆனால், சசிகலா தரப்பில்தான், இதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. சசிகலாவை பொறுத்தவரை, ஓபிஎஸ் மீதான நம்பிக்கையும், ஆதரவும் நிறையவே இருக்கிறது.. எப்போது வேண்டுமானாலும், தன்பக்கம் வந்துவிடக்கூடியவர் என்பதிலும் உறுதியாகவே உள்ளார். கடந்த 2 வருடங்களாகவே, சசிகலா விஷயத்தில் ஓபிஎஸ் காட்டும் ஆதரவு பேட்டிகளே அதற்கு சாட்சியாக விளங்கி கொண்டிருக்கிறது.

சசிகலா ப்ளான்:
எனினும், சசிகலாதான், ஓபிஎஸ்ஸை சந்திப்பதை தவிர்த்து வருகிறாராம்.. காரணம், அதிமுக என்ற கட்சி தன்கையில் வந்து சேரும் என்று இப்போது வரை உறுதியாக சசிகலா இருக்கிறார்.. ஒரு கட்சிக்கு பொதுச்செயலாளராக இருக்க வேண்டுமானால், "சாதி முத்திரை" படியாமல், அனைவருக்கும் பொதுவான ஒரு தலைவராக விளங்க வேண்டும் என்பதால், ஓபிஸ்ஸை சந்திப்பதில் தயக்கம் காட்டி வருகிறாராம் சசிகலா.. அதனால்தான், ஓபிஎஸ் நடத்திய திருச்சி மாநாட்டில்கூட அழைப்பு விடுத்தும் பங்கேற்கவில்லை என்றார்கள்..
அறிவிப்பு:
சமீபத்தில் டிடிவி தினகரனை சந்தித்தபிறகும்கூட, சசிகலாவை சந்திக்க போவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார். ஆனால், இப்போது வரை அது நடக்காத சூழலில் வைத்திலிங்கம் வீட்டில் விசேஷம் நடக்க போகிறது..
வைத்திலிங்கத்தை பொறுத்தவரை, ஓபிஎஸ் மீதான விசுவாசத்தை இப்போதுவரை காட்டி வருபவர்.. வைத்திலிங்கம் இல்லாவிட்டால், ஓபிஎஸ்ஸின் வியூகங்கள் இந்த அளவுக்கு வந்திருக்குமா? என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு வைத்திலிங்கம் ஓபிஎஸ்ஸூக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இத்தனைக்கும் வைத்திலிங்கத்தை தன்பக்கம் இழுக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பு முயன்று முயன்று தோற்று போனது.. அந்த அளவுக்கு ஓபிஎஸ் பக்கம் துணையாக நின்று வருகிறார்.. இவரது வீட்டில்தான், விசேஷம் நடக்க போகிறது.

திருமண வைபவம்:
தஞ்சாவூரில் தன்னுடைய மகனின் கல்யாணத்தை நடத்த போகிறார் வைத்திலிங்கம்,.. இந்த கல்யாணத்தில், 3 பேரையும் இணைக்க போகிறாராம் வைத்திலிங்கம். அதாவது, ஜூன் 7ம் தேதி மகன் சண்முக பிரபுவுக்கும், யாழினி என்பவருக்கும் திருமணம் நடக்க போகிறது.. இந்த விழாவுக்கு தலைமை தாங்க, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு வைத்திலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.
திருமண மேடையில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை ஒன்றாக மேடையேற்றவும் முடிவு செய்துள்ளாராம்.. எடப்பாடி பழனிசாமியுடன் அதிருப்திகள் அதிகமான நிலையில், கடந்த வருடமே வைத்திலிங்கம், சசிகலா பக்கம் தாவக்கூடும் என்று சொன்னார்கள்.. ஆனால், அது நடக்கவில்லை.. இதற்கு பிறகு, சில மாதங்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவில் வைத்திலிங்கம் -சசிகலா இருவருமே நேருக்கு நேர் சந்தித்து கொள்ளும் நிலைமை வந்தது.

தித்திப்பு செய்தி:
எதிர்பாராத சந்திப்பாக இது கருதப்பட்டாலும், சசிகலாவுக்கு வைத்திலிங்கம் "வணக்கம்" வைக்க, பதிலுக்கு சசிகலா, கையில் வைத்திருந்த சாக்லேட்டை தந்து வாழ்த்து சொல்லி இருந்தார்.. ஒரே சமுதாயம் என்பதையும் தாண்டி, தன்னை இந்த அளவுக்கு அரசியலில் உயர்த்தி விட்டதே சசிகலாதான் என்பதை வைத்திலிங்கம் மறக்கவில்லை.. எனினும், விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது..
பாஜக - அதிமுக கூட்டணியும் முடிவாகி உள்ளது.. ஒருபக்கம் எடப்பாடி, மறுபக்கம் திமுகவை சமாளிக்க ஓபிஎஸ் அணி தன்னை பலப்படுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. அதனால்தான், டிடிவி தினகரன் - சசிகலா - ஓபிஎஸ் 3 பேரையுமே ஒன்றிணைக்கும் முயற்சியை, வைத்திலிங்கம் எடுத்துள்ளதாக தெரிகிறது..
3 பேரும் சந்திப்பு:
கடந்த 2 வருட காலமாகவே, அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த சந்திப்பில், வைத்திலிங்கம் வீட்டு விசேஷத்தில் நடக்க போகிறதா? நீண்ட காலமாகவே, சசிகலா - தினகரன் இருவருமே, சரிசர பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கும் நிலையில், அதிருப்திகள் நீங்கி இருவரும் இணக்கமாவார்களா? வைத்திலிங்கம் இதை செய்து முடிப்பாரா? என்ற ஆர்வம் டெல்டாவில் பெருகி உள்ளது..
இதெல்லாம் பார்த்து எடப்பாடி தரப்புக்கும் லேசாக கலக்கம் சூழ்ந்துள்ளதாகவும் தெரிகிறது.. என்னதான் நடக்க போகிறது? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications