சென்னை முழுக்க புதிய சாலைகள்.. எப்போது தொடங்கப்படும்! ஆய்வுக்கு பின் மேயர் பிரியா பளீச்
சென்னை: பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கொரட்டூர் பகுதியில் ஆய்வு செய்த சென்னை மேயர் பிரியா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களிலும் வடிகால் பணிகள் முறையாக இல்லை. இதன் காரணமாகவே சிறிது மழை என்றாலே வெள்ள நீர் அதிகம் தேங்கிவிடும்.
மும்பை, பெங்களூர், சென்னை எனப் பல நகரங்களை நாம் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் ஏற்பட்ட வெள்ளத்தை நாம் மறந்திருக்க மாட்டோம்.

மழை
சென்னையிலும் கடந்த பல ஆண்டுகளாகவே இதே பிரச்சினை தான். சிறிய மழைக்கும் நகரின் முக்கிய சாலைகளிலும் கூட நீர் தேங்கும். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் பிரச்சினையை எதிர்கொண்டு வந்தனர். இதனால் மழை என்றால் உற்சாகப்படும் நிலை மாறி, அய்யோ மழையா என்று சென்னைவாசிகள் அதிர்ச்சியடையும் சூழல் உருவானது. சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் இதே கதை தான்.

நடவடிக்கை
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது இதை முக்கிய பிரச்சினையாக முன்வைத்தது. மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் மழைநீர் சாலைகளில் குளம் போலத் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியது. இருப்பினும், கடந்தாண்டு கிட்டதட்ட இதே நிலை தான் இருந்தது. ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் பருவமழை தொடங்கிவிட்டதால் போதிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை என திமுகவினர் கூறினர்.

வடிகால் பணிகள்
இந்த ஆண்டு நிலைமையைச் சரி செய்யும் வகையில் வடிகால் பணிகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டன. நகரில் பல இடங்களில் வடிகால் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கனமழை கொட்டி தீர்த்த போதிலும், பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கவில்லை என்றும் சில இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேங்கவில்லை
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மழை நீர் வடிகால் பணிகளே இதற்குக் காரணம் எனக் குறிப்பிட்டனர். இருப்பினும், இன்னும் கூட சில இடங்களில் வடிகால் பணிகள் நிறைவடையாததால் மழைநீர் தேங்கியுள்ளது. அதேபோல வடிகால் பணிகள் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு உள்ளனர். இதனால் சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு உள்ளது.

மேயர் பிரியா
இதற்கிடையே சென்னை மேயர் பிரியா அம்பத்தூர் அடுத்துள்ள கொரட்டூர் வீட்டு வசதி வாரியம் பகுதியில் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னையில் சில இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கியுள்ளது. அந்த பகுதிகளில் மழை நீர் முதலில் அகற்றப்படும். பின் தூய்மை பணியாளர்கள் மூலம் அந்த இடத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தூய்மை பணியாளர்கள்
அனைத்து இடங்களிலும் தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுகிறது. அதை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பருவமழை இப்போது தான் தொடங்கி உள்ளது. வரும் காலத்திலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம். மழைநீர் வடிகால் பணிகள் மூலம் நமக்கு நல்ல பயன் கிடைத்துள்ளது. இதனால் பல இடங்களில் நீர் தேங்கவில்லை.

அடுத்து சாலைகள் தான்
அதையும் தாண்டி சில இடங்களில் நீர் தேங்கினால்.. மோட்டார் மூலம் நீர் அகற்றவும் தயாராக உள்ளோம். மழைக் காலம் முடிந்த உடன் அடுத்தகட்டமாக நகரில் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மழைக் காலம் முடிந்ததும் சாலை அமைக்கும் பணிகளைத் தொடங்குவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications