நிலவிலிருந்து சந்திரயான்-2 அனுப்பும், முதல் படம் எப்போது கிடைக்கும் தெரியுமா?
சென்னை: சந்திராயன்-2 நிலவில் தரையிறங்கியதும் எப்போது முதல் படம் எடுத்து அனுப்ப ஆரம்பிக்கும் என்ற தகவலை, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நிலவின் தெற்குப் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள 'சந்திரயான் - 2' விண்கலம் கடந்த மாதம் 20ம் தேதியன்று, நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைந்தது.
அதை தொடர்ந்து கடந்த 2ம் தேதியன்று, விண்கலத்தில் இருந்து லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டு, அதை நிலாவில் தரை இறக்கும் பணிகள் துவக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இன்று நள்ளிரவு சுமார் 1.52 மணி அளவில், நிலாவில் சந்திரயான் 2ன் லேண்டர் தரை இறங்க உள்ளது.
இதன்பிறகு லேண்டரில் இருந்து பிரக்ஞான் என்று பெயருள்ள ரோவர் அதாவது சக்கரங்களை கொண்ட ரோபோ வெளியே வரும். அது நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும். இந்த பணி அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கும் வாய்ப்பு உள்ளது.
காற்றே இல்லாத இடத்தில் களமிறங்கனும்.. சந்திரயான்-2 சாஃப்ட் லேண்டிங் ஏன் சவாலானது தெரியுமா?
சந்திரயான் 2ன் மென்மையான-தரையிறக்கம் இஸ்ரோவின் வலைத்தளம் உட்பட பல தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டிலில் நேரலை வெளியிடும். இஸ்ரோவைத் தவிர, தூர்தர்ஷன் (டி.டி) அதன் யூடியூப் சேனலில் சந்திரயான் 2 தரையிறங்குவதை நேரடியாக ஒளிபரப்ப உள்ளனர். நேஷனல் ஜியோகிராஃபிக் யூடியூப் சேனல் மற்றும் ஹாட்ஸ்டாரில் இந்தியாவில் நேரலை பார்க்க முடியும்.
இதுகுறித்து, இஸ்ரோ தலைவர், சிவன் கூறுகையில், சாஃப்ட் லேண்டிங் ஆன பிறகு, 1.52 மணிக்கு , நிலவின் மேற்புற புகைப்படங்கள் நமக்கு கிடைக்கும் என்றார்.