வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?.. வருத்தமான செய்தி சொன்ன வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் சென்னை வானிலை மையம் இதுகுறித்து கூறுகையில் ஒடிஸா அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது நிலவி வருகிறது.
இதைத் தொடர்ந்து வரும் 9-ஆம் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

ஆந்திரா
இது அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிஸா கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புகள் உள்ளன. இதனால் வரும் 11,12,13 ஆகிய தேதிகளில் ஆந்திரா, ஒடிஸா மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

103 டிகிரி ஃபாரன்ஹீட்
வடக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவினால் தமிழகத்தில் மழை குறைந்துவிடும். வழக்கமாக அக்டோபர் மாதத்தில் வெப்பமும் குறைவாகவே காணப்படும். ஆனால் மதுரை விமான நிலையத்தில் நேற்று 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

காற்று வீசுதல்
இதனால் தமிழகம் நோக்கி வடமேற்கு திசையில் இருந்து காற்று வீசுவது வலுவாக இருப்பதாலும் வடக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவது தாமதமாகும் என வானிலை மையம் இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.

தண்ணீர்
கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. எனவே இந்த ஆண்டு மழை பெய்தால் விவசாயம், தண்ணீர் விநியோகம் ஆகியவை பாதிக்காத வண்ணம் இருக்கும். கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டு கண்டலேறு வழியாக தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியுள்ளன. எனினும் வடகிழக்கு பருவமழை பெய்தால்தான் வரும் கோடையை தமிழக மக்கள் சமாளிக்க முடியும்.












Click it and Unblock the Notifications