வேளச்சேரி -பரங்கிமலை பறக்கும் ரயில் பணி எப்போது முடியும்? மவுண்ட்-பூந்தமல்லி மெட்ரோ பணி விறுவிறு
சென்னை: சென்னை பரங்கிமலை- வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் பாதையை இப்போது போகும் வேகத்தில் செய்தால், அதற்குள் சென்னை மெட்ரோ நிறுவனம் மவுண்ட்-பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயிலையே இயக்கிவிடும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.
சென்னையின் புறநகர் பகுதியையும், சென்னையின் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள ஓஎம்ஆர் உள்ளிட்ட பகுதிகளையும் இணைக்கும் முக்கிய ரயில் பாதை என்றால் அது வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் தான். இந்த திட்டம் மட்டும் திட்டமிடப்பட்ட 2013ம்ஆண்டே முடிந்திருந்தால், சென்னையில் மிகப்பெரிய தொழிற்புரட்சியே நடந்திருக்கும். ஆனால் பணிகள் சில பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதம் ஆகியது

கடந்த ஆண்டு வேளச்சேரியில் இருந்து தாம்பரம் செல்ல பூங்கா அல்லது கோட்டை சென்று மாற வேண்டிய நிலை இருந்தது. ஆனால் கடற்கரை முதல் எழும்பூர் வரை நான்காவது வழித்தடம் அமைக்கப்படுவதால் கோட்டை மற்றும் கடற்கரைக்கு போக வேண்டிய வேளச்சேரி பறக்கும் ரயில் சிந்தாதிரிப்பேட்டையிலேயே நிற்கிறது. இந்த பணிகள் எத்தனை மாதங்களில் முடியும் என்பது தெரியவில்லை.. இது முடிந்தால் தான் சென்னை கடற்கரை வேளச்சேரி இடையே புறநகர் ரயில் சேவை இயல்பு நிலைக்குவரும்.
சென்னையை பொறுத்தவரை வேளச்சேரி, பெருங்குடி, தரமணி, சோழிங்கநல்லூர் சுற்றித்தான் சென்னையின் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் சென்னையின் ஓஎம்ஆர் பகுதிகள், ஈசிஆர் பகுதிகள், அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தைவெளி போன்ற சென்னையின் மையப்பகுதிகளுக்கு புறநகர் பகுதி மக்கள் செல்ல, பரங்கிமலை வேளச்சேரி ரயில் வழித்தடம் முக்கியமானதாக இருக்கிறது.
சென்னையில் பறக்கும் ரயில் பணிகள் தொடங்கப்பட்டு வேளச்சேரி வரை பணிகள் 2007ல் முடிந்துவிட்டது. அனால் வேளச்சேரியில் இந்த வழித்தடப் பணிகள் 495 கோடியில் 2008ம் ஆண்டு தொடங்கியது. 90 சதவீத பணிகள் வெறும் 3 ஆண்டுகளில் நடந்து முடிந்தது. ஆனால் ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதியில் வெறும் 500 மீட்டர் தூரத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பல ஆண்டுகளாக பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனிடையே உச்ச நீதிமன்றம் வரை வழக்கு போன பின்னரே பரங்கிமலை வேளச்சேரி ரயில் வழித்தட பணிக்கு விடிவு காலம் பிறந்தது.
ஆனால் தெற்கு ரயில்வே திட்டத்திற்கான மதிப்பீடு நீண்ட தாமதம் காரணமாக அதிகமானது. பணிகளை தொடர முடியாத நிலை இருப்பதாகவும் கூறியது. 495 கோடியாக இருந்த திட்டம் காலப்போக்கில் 730 கோடியாக உயர்ந்தது. அதன்பிறகு ஒருவழியாக ரயில்வே முழு தொகையையும் ஒதுக்கியது. தொடர்ந்து ஆதம்பாக்கம் பகுதியில் விறுவிறுப்பாக நடந்தன. அந்த பகுதியிலும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்தது.. தற்போது பரங்கிமலை ரயில் நிலையத்தில் ராட்சத இரும்பு பாலம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. 500 மீட்டர் தூரத்திற்கு ராட்ச கட்டர்கள் பொருத்தும் பணியும் முடிந்துவிட்டது..
ஆதம்பாக்கம் பரங்கிமலை இடையே மீதமுள்ள பணிகள் நடந்து வருகின்றன. தற்போதைய நிலையில் பணிகள் எப்போது முடியும் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.. தொடந்து தாமதம் ஆகிக்கொண்டே செல்கிறது. வேளச்சேரி பரங்கிமலை ரயில் வழித்தடம் பணிகள் முடிந்து ரயில்கள் ஓடுவதற்குள் சென்னை மெட்ரோ நிறுவனம் மௌண்ட்-பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயிலையே இயக்கி விடும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு பணிகள் வேளச்சேரி பரங்கிமலை வழித்தடத்தில் பணிகள் மெதுவாக நடப்பதாகவும், மெட்ரோ பணிகள் விறுவிறுப்பாக நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications