தமிழ்நாட்டில் விரைவில் சென்னை-நெல்லை ‘வந்தே பாரத்’ ரயில்.. எப்படி இயக்கப்படும்? நேரம் எப்படி?
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை-நெல்லைக்கு 'வந்தே பாரத்' ரயில்- விரைவில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான பெட்டிகள் தயாராகி வருவதாகவும், பெட்டிகள் தயாரான உடன் நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.
வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே இயக்கப்படுகிறது.இந்த ரயிலில் வெறும் 5.50 மணி நேரத்தில் கோவைக்கு சென்றுவிட முடியும். கோவையில் இருந்து சென்னைக்கும் இதேநேரத்தில் சென்றுவிட முடியும். அதாவது ஒரே நாளில் கோவையில் இருந்து சென்னை புறப்பட்டு வந்து, வேலையை முடித்துவிட்டு மீண்டும் அதே ரயிலில் மாலையில் வீட்டுக்கு சென்றுவிட முடியும்.

தற்போதைய நிலையில் சென்னைக்கு இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. கோவைக்கு இயக்கப்படும் ரயில் தவிர, மைசூருக்கும் ஒரு வந்தே பாரத் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை நீண்ட நாட்களாகவே உள்ளது. தற்போதைய நிலையில் சென்னையில் இருந்து மதுரை வரை வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இந்த ரயில் திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரயில்களில் நின்று செல்லும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது
இந்நிலையில் தென் மாவட்ட பயணிகள் நலனை கருத்தில் கொண்டு நெல்லை வரை நீட்டிக்க பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், ரயில்வே பயணிகள் நல வாரிய உறுப்பினர் எம்.கே.ரவிச்சந்திரன் ஆகியோர் ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை வைத்தார்கள் இதையடுத்து அடுத்த வந்தே பாரத் ரெயிலை சென்னை முதல் நெல்லை வரை இயக்க திட்டமிட்டுள்ளனர்.
அதிவிரைவு ரயில்களின் வேகத்துக்கு இணையாகவே வந்தே பாரத் ரெயிலின் வேகமும் இருப்பதால் ரயில் பாதை பிரச்சினை இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். பெட்டி தயாரானதும் விரைவில் நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்றும் கூறினார்கள்.

வந்தே பாரத் ரயில் நெல்லை வர இயக்கப்பட்டால், அந்த ரயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த ரயில் மிகவும் லாபகரமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பயண நேரம் எந்த அளவிற்கு குறைவாக இருக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கிட்டத்தட்ட இதே அளவு தூரமுள்ள ஹைதராபாத் (செகந்திரபாத்)- திருப்பதி இடையே 8 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் செல்கிறது. அதேநேரத்திற்குள் வந்தே பாரத் ரயில் செல்லுமா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் போது தெரியும். தற்போது சென்னையில் இருந்து செல்ல எக்ஸ்பிரஸ் ரயில்களில் நெல்லைக்கு சுமார் 10 மணி நேரம் ஆகிறது.
இதனிடையே தென்மாவட்ட ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குறைக்கப்பட்ட பெட்டிகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications