மின் கட்டணம் மாதந்தோறும்.. மின்சார வாரியத்தின் மெகா பிளான்.. அமைச்சர் அறிவிப்பின் பின்னணி
பெரம்பலூர்: தமிழ்நாட்டில் தற்போது வீடுகளுக்கான மின் கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் கணக்கெடுக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் முன்பு, திமுக, மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் அதனை நான்கரை ஆண்டுகளாக கொண்டுவரப்படவில்லை.. இந்நிலையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கிடப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டால் ஏராளமான மக்கள் பயன்பெறுவார்கள். ஆனால் இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை. இதுபற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் இன்று வரை மின் கட்டணம் வசூலிப்பில் மாற்றம் வரவில்லை..

மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை கொண்டு வர வேண்டும் என்றால்,அதற்கு முன்பாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை நடத்த வேண்டியுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் கூறிவருகிறார்கள். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின், மின் பயன்பாட்டை தொலைவிலிருந்து துல்லியமாக கணக்கெடுக்க முடியும் என்பதால் மாதம் ஒரு மின் கட்டண நடைமுறையை கொண்டுவருவதில் தாமதம் ஏற்படுகிறதாம்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சில பகுதிகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன், 2025 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு வீடுகளுக்கு மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடும் நடைமுறையை சோதனை அடிப்படையில் தொடங்க அரசு திட்டமிட்டு வருகிறதாம்.
பெரம்பலூரில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுமக்கள் மின்சாரத்தை தங்களுடைய வீடுகளிலும், பொது இடங்களிலும் சிக்கனமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை கடும் நிதி நெருக்கடிக்கு இடையில் தான் செயல்பட்டு வருவதாக கவலையை வெளிப்படுத்திய அமைச்சர் சிவசங்கர், நிதி நிலைக்கு ஏற்ப மின்வாரியத்தில் சில புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். புதிய மின்மாற்றிகளை கொள்முதல் செய்வதற்கு தமிழக மின்வாரியத்திற்கான நிதியை பெறுவதற்கு மத்திய அரசினுடைய நிதி நிறுவனங்கள் நிதியை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
மத்திய அரசின் நிதியை பெறுவதில் தாமதம் இருந்தது என்றும் தற்போது அதற்கான நடைமுறைகள் எடுக்கப்பட்டு, பல்வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்பட்டு, புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
மின் கட்டணம் குறித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், அதேபோல் புதிய மின்மாற்றிகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் படிப்படியாக இந்த பிரச்சினைகள் சரிசெய்யப்படும் என்றும் ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு வருகிறபோது, தமிழகத்தில் மாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடுவதற்கு அது வசதியாக இருக்கும். ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டர் விடப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications