அழுகை -உருக்கம் -மன்றாடல்! திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல் விறு விறு! தர்ம சங்கடத்தில் ஸ்டாலின்!
சென்னை: திமுகவில் மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த வியாழக்கிழமை தொடங்கி நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்துள்ளது.
பெரும்பாலான மாவட்டங்களில் போட்டியின்றியும் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கட்டும் போட்டியும் நிலவுவதால் திமுக மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.
இதனிடையே எதிர்க்கட்சியாக இருந்த போது கட்சிக்காக கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்திருக்கிறேன், இந்த சூழலில் என்னை மாற்றுவது நியாயமா எனக் கேட்டு அழுகை -உருக்கம் என சிட்டிங் மாவட்டச் செயலாளர்கள் சிலர் தலைமையிடம் மன்றாடி வருகின்றனர்.
திருவிழா கோலம் பூண்ட அண்ணா அறிவாலயம்! களைகட்டும் திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல்!
மாவட்டச் செயலாளர்
திமுகவில் மாவட்டச் செயலாளர் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அதன் முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி என்பதால் மாவட்டச் செயலாளர் பதவிக்கு திமுகவில் எப்போதுமே கடும் போட்டி இருக்கும். திருவண்ணாமலை, விருதுநகர், திண்டுக்கல், கரூர், சென்னை, என சீனியர் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் மாவட்டங்களில் எந்த போட்டியும் இல்லை பிரச்சனையும் இல்லை.
போட்டி கடுமை
ஆனால் அதே வேளையில் தென்காசி, நெல்லை, தேனி, கோவை, தருமபுரி, மதுரை, கடலூர், ஆகிய மாவட்டங்களில் போட்டி சற்று கடுமையாக உள்ளது. நெல்லையில் ஆவுடையப்பனுக்கு எதிராக ஒரு டீம் கோதாவில் குதித்துள்ளது. தென்காசியில் சிவபத்மநாபனுக்கு எதிராக பலர் முட்டி மோதுகின்றனர். ஆனாலும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அரவணைப்பில் இருப்பதால் அந்த தைரியத்தில் வலம் வருகிறார் இவர்.
அழுகை -உருக்கம்
இதேபோல் தேனியில் வடக்கு மாவட்டச் செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணனுக்கு எதிராக கச்சை கட்டி நிற்கிறார் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார்.இதுமட்டுமல்லாமல் கிருஷ்ணகிரி கிழக்கு, கோவை, என 15 மாவட்டச் செயலாளர்கள் வரை மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது திமுக தலைமை. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த போது கட்சிக்காக கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்திருக்கிறோம், குறிப்பாக கொரோனா காலத்தில் செய்த நலத்திட்டங்கள் என பலவற்றை பட்டியலிட்டு கட்சித் தலைமையிடம் அழுகையுடனும், உருக்கத்துடனும் பலரும் மன்றாடி வருகின்றனர். இன்னும் ஒரு சிலரோ தங்கள் வயதை குறிப்பிட்டு இந்த ஒரு முறை வாய்ப்பு தர வேண்டும் என லாபி செய்கிறார்கள்.
தர்ம சங்கடம்
இதனால் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு தர்ம சங்கடமான சூழல் உருவாகியுள்ளது. ஆனாலும் தனது முடிவில் மாற்றம் செய்ய விரும்பாத அவர், ஒரு சிலருக்கு மட்டும் எச்சரிக்கை விடுத்து கால நீட்டிப்பு வழங்குவது பற்றி யோசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பதால் அது தொடர்பான எதிர்பார்ப்புகள் திமுக வட்டாரத்தில் அதிகரித்துள்ளன.