மே 3 பிளஸ் டூ பரீட்சை ஆரம்பிக்குது.. தேர்தல் ஏப்ரலில் இருக்குமா.. அப்ப ரிசல்ட் எப்ப வரும்?
சென்னை: மே 3 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்குவதாக அறிவித்துள்ள நிலையில் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வரும் மே மாதம் முடிவடைகிறது. புதிய சட்டசபை அமைப்பதற்கான தேர்தல் விரைவில் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்தலுக்கான அறிக்கை இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என சொல்லப்பட்டது.
இதற்காக கடந்த வாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 8 பேர் கொண்ட குழுவினருடன் தமிழகம் வந்திருந்து தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பிளஸ் 2 தேர்வு
பொதுவாக மார்ச் மாதத்தில் பிளஸ் 2 தேர்வு, பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கப்படும். இந்த முறை கொரோனாவால் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 9.10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

பள்ளிக் கல்வித் துறை
எனவே தேர்தலை பிளஸ் 2, 10 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்குவதற்கு முன்னர் அல்லது அந்த தேர்வுகள் முடிந்த பிறகு நடத்தலாம் என தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் வரும் மே 3ஆம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கப்படவுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

21ஆம் தேதி வரை தேர்வு
இந்த தேர்வுகள் மே 3 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் தமிழக சட்டசபை தேர்தல் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே மே 2 ஆம் தேதிக்குள் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு மே 21 ஆம் தேதிக்கு பிறகு முடிவுகளை அறிவிக்கப்படுமா என தெரியவில்லை.

மே 3 க்குள் முடிவுகள்
இல்லாவிட்டால் ஏப்ரல் மாதம் இறுதியில் தேர்தல் நடத்தப்பட்டு மே 3ஆம் தேதிக்குள் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என்ற ஒரு யோசனையும் உள்ளது. மே 21 ஆம் தேதிக்கு பிறகு 10ஆம் வகுப்பு தேர்வுகள் அறிவிக்கப்பட்டால் என்ன செய்வது என்பதால் மே 3ஆம் தேதிக்குள் தேர்தல், தேர்தல் முடிவுகள் அனைத்தும் முடிக்கப்படும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications