கலைஞர் நாணயம் எங்கே கிடைக்கும்? அதன் விலை என்ன? எப்போது வாங்கலாம்?
சென்னை: மத்திய அரசு யாருக்கு எல்லாம் இதற்கு முன்னால் நாணயம் வெளியிட்டுள்ளது? இதை வெளியிட வகுக்கப்பட்டுள்ள விதிமுறை என்ன? அதற்காக கோரிக்கையை வைக்க தகுதி என்ன? இப்போது வெளியிடப்பட்டுள்ள மு.கருணாநிதியின் 100 ரூபாய் நாணயம் எங்கே கிடைக்கும்? எப்போது கிடைக்கும்?
திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கிவைத்தார். அவரது நினைவாகக் கிண்டியில் கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையைத் தொடங்கி வைத்தார். அதைப்போன்று கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் கலைஞர் கோட்டம் ஒன்றைக் கட்டி திறந்துவைத்தார். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஒன்று திறக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நேற்று கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவின் அடையாளமாக 100 ரூபாய் நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட்டார். இந்த விழாவில் பங்கேற்றது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னையில் இன்று நடைபெற்ற பழம்பெரும் தலைவர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். அவரது நினைவு நாணயத்தை வெளியிட்டேன்.
நீதி, சமூக முன்னேற்றம் ஆகியவற்றுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அவரது வாழ்க்கைக்கு இது ஒரு புகழஞ்சலியாகும். இது நமது நன்றியுணர்வின் அடையாளமாகும். அவர் முன்வைத்த மதிப்புகளை நினைவூட்டும் செயல்பாடாகும். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், மாநில அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், 'கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வை எதிர்கால இந்தியாவை வழிநடத்தக் கூடியது' என்று கூறி இருந்தார். இந்த நாணய நிகழ்ச்சி குறித்து அறிவிப்பு வெளியானது முதல் திமுகவினர் இடையே அதை எங்கே வாங்கலாம்? அதன் விலை என்ன? ரூபாய் நாணயத்தைக் கடையில் அனைத்து நாணயத்தைப் போல புழங்க முடியுமா? அல்லது குறிப்பிட்ட அளவு நாணயம் மட்டும்தான் கிடைக்குமா? 100 ரூபாய் நாணயத்தின் விலை 5 ஆயிரம் ரூபாயா? எனப் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
விழாவில் கலந்து கொண்ட பலர் நாணயத்தைப் பெறுவதற்காகப் பல இடங்களில் விசாரித்து அலைந்ததையும் பார்க்க முடிந்தது. பலர் அதிக விலை கொடுத்து நாணயத்தை வாங்கவும் முன்வந்து ஆர்வம் தெரிவிப்பதைப் பார்க்க முடிந்தது. திமுக மசெக்கள் பலர் கிடைக்கும் நாணயத்தை எல்லாம் வாங்கும் முடிவை எடுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
முதலில் இந்த நாணயம் வெளியிடுவது பற்றி தெரிந்து கொள்வோம். இந்த நாணயத்தை மத்திய அரசு வெளியிடுவதற்கு விதிமுறைகள் என்ன? அதைப் பற்றி அறிந்து கொள்வோம். இந்த நினைவு நாணயம் வெளியிடுவது தொடர்பாக மத்திய அரசின் நிதி அமைச்சக பொருளாதார விவகாரங்கள் துறை & பணம் மற்றும் நாணயப் பிரிவு சார்பாகக் கடந்த 2019 மார்ச் 27 ஆம் தேதி ஆணை ஒன்றை மறுவரையறை செய்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையின் கீழாக மத்திய அரசு நாட்டில் சிறந்து விளங்கிய தலைவர்களின் நினைவாக இதைப்போன்ற நினைவு நாணயங்களை வெளியிட்டு வருகிறது. அதற்கான வரம்பு என்பது நாணயம் வெளியிடப்படும் நபர் நாட்டில் புகழ் மிக்கவராக இருக்க வேண்டும். அவர் கட்டாயம் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும். புலம்பெயர்ந்து சென்றவர் நாட்டின் புகழ் அல்லது முன்னேற்றத்திற்குக் குறிப்பிட்ட வகையில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும்.

தனி நபர் சார்ந்தோ அல்லது புகழ்மிக்க நிறுவனம் சார்ந்தோ அப்படி இல்லை எனில் சமூக முன்னேற்றம் சார்ந்தோ ஒருவர் பங்களிப்பு செய்துள்ளார் எனில் அதை கௌரவிக்கும் பொருட்டு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி அளிக்கும். அந்தப் புகழ்மிக்க மனிதரின் மறைவுக்குப் பின்னர் அவரது நூற்றாண்டு அல்லது பிறந்தநாள் நிகழ்வை ஒட்டி இந்த நாணயத்தை வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் எல்லைகளைக் கடந்து கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளின் முன்னேற்றத்திற்காக, அல்லது சேவைக்காக இந்த மாதிரியான நாணயத்தை வெளியிட மத்திய அரசு முன்வரும் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி பொருத்தமான நபர் என உணர்ந்தால் மத்திய அரசிடம் முறையிடலாம். அதற்காகக் கோரிக்கையை வைக்கலாம். அரசு அதைப் பரிசீலனை செய்து தகுதி உள்ள நபர் என முடிவு எடுக்கும் பட்சத்தில் இந்த நாணயம் வெளியிடப்படும்.
அப்படிப் பார்த்தால் காந்தி, நேரு, அபுல்கலாம் ஆசாத், ராஜேந்திர பிரசாத், இந்திரா காதி, அம்பேத்கர், ராஜீவ்காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், வாஜ்பாய், சர்தார் வல்லபாய் பட்டே,ல் எனப் பலருக்கும் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்.ஜி,ஆருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியாகி உள்ளது. ராஜகோபாலாச்சாரிக்கும் காமராஜருக்கும் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்களைத் தாண்டி விவேகானந்தர், அரவிந்தர், நிவேதிதா தேவி, அன்னை தெரசா எனப் பலருக்கு இந்த மாதிரி 100 மற்றும் 5,10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அறிவியல் துறையில் ஹோமி பாபாவுக்குக் கணித மேதை ராமாநுஜம், சர் சி வி ராமன் ஆகியோரின் புகழை மதித்து நாணயங்கள் வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
அரசுத் துறை சார்ந்து நாணயங்களை மத்திய அரசு இதற்கு முன் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றம் 60 ஆண்டுகளை நிறைவு செய்ததன் அடையாளமாக 60 ரூபாய் நாணயம் வெளியானது. இந்தியா சுதந்திரம் பெற்று பொன்விழா வந்தபோது அதை நினைவு கூறும் வகையில் 50 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. 125 ஆண்டுகளைக் காங்கிரஸ் கட்சி நிறைவு செய்தபோது 5 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் மு.கருணாநிதிக்கு இது நூற்றாண்டு என்பதால் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாணயமானது முன்பே குறிப்பிட்டதைப் போல நிதியமைச்சர்தான் முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவர். அவர் பிரதமரின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவை எடுப்பார். அதன்பின்னர் ரிசர்வ் வங்கி நாணயத்தை வெளியிடும். அதுவும் நினைவு போற்றும் வகையில் அந்த நபரின் பிறந்தநாள் அல்லது நூற்றாண்டு ஆண்டு நடைபெறும் அந்த வருடத்தில் மட்டுமே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வெளியிடப்படும். மீண்டும் இந்த நாணயம் கிடைக்காது. நாணயத்தின் மதிப்பு 100 அல்லது 5, 10 என இருந்தாலும் அதன் விலை கூடுதலாகவே இருக்கும். ஏனெனில் இதன் தயாரிப்பு செலவு அதிகம். அதனால் சந்தையில் நாணயத்தில் அச்சிடப்பட்டுள்ள தொகையைவிடப் பல மடங்கு இதன் விலை இருக்கும்.
சுருக்கமாக சொன்னால் வாஜ்பாய் அவருக்காக வெளியிடப்பட்ட 100 ரூபாய் நாணயத்தின் விலையானது 6 ஆயிரத்திற்கும் மேல் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதைப்போன்று கலைஞர் கருணாநிதியின் நாணயத்தின் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. அதை மத்திய நிதியமைச்சகம் இனிமேல் தான் அறிவிக்க உள்ளது.
சுருக்கமாக சொன்னால் வாஜ்பாய் அவருக்காக வெளியிடப்பட்ட 100 ரூபாய் நாணயத்தின் விலையானது 6 ஆயிரத்திற்கும் மேல் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதைப்போன்று கலைஞர் கருணாநிதியின் நாணயத்தின் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. அதை மத்திய நிதியமைச்சகம் இனிமேல் தான் அறிவிக்க உள்ளது. இந்த நாணயத்தை எங்கே, எப்போது, எப்படி வாங்கலாம் என்பது குறித்தும் விரைவில் நிதியமைச்சகம் தகவலை வெளியிடும். அதன்பின்னரே பணம் கொடுத்து வாங்க முடியும்












Click it and Unblock the Notifications