அரசு டாஸ்மாக் பாட்டில்களில் 10 ரூபாய் ஸ்டிக்கர் மாயம்? நகர்ப்புற கோவையில் மட்டும் ஏன்? பின்னணி என்ன?
சென்னை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளைச் சுற்றி ஒரு புதிய பேச்சு எழுந்துள்ளது. வரவிருக்கும் சட்டசபை தேர்தல் சூழ்நிலையில், சில கடைகளில் 'ரூ.10 ஸ்டிக்கர்' இல்லாமல் மதுபாட்டில்கள் விற்கப்படுவது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. நகர்ப்புற பகுதிகளில் இது அதிகமாகக் காணப்படுவதால், இது குறித்து பல தரப்பிலும் கேள்விகள் எழுகின்றன.
சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் நடந்து வரும் ஒரு மாற்றம் தற்போது அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

கடந்த சில நாட்களாக கோவையின் பெரும்பாலான நகர்ப்புற டாஸ்மாக் கடைகளில், மதுபாட்டில்களில் ஒட்டப்பட வேண்டிய ரூ.10 ஸ்டிக்கர் இல்லாமல் விற்பனை செய்யப்படுவது மக்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
அரசு டாஸ்மாக் 10 ரூபாய் பாட்டில்
மதுபாட்டில்களை காலி செய்த பிறகு, அவற்றை திரும்ப ஒப்படைத்துவிட்டு 10 ரூபாய் பெற்றுக்கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அதே 10 ரூபாய் ஸ்டிக்கர் தேர்தல் நேரத்தில் ஒரு முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
கோவை மாநகரின் முக்கிய பகுதிகளான ராமநாதபுரம், காந்திபுரம், புலியகுளம் மற்றும் ஒண்டிப்புதூர் போன்ற இடங்களில் உள்ள கடைகளில் ஸ்டிக்கர் இல்லாமல் மது விற்பனை செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஏற்கனவே மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாகக் குடிமகன்கள் மத்தியில் ஒரு கருத்து உள்ளது. அப்படி வசூலிக்கப்படும் தொகையைத் திரும்பப் பெற வேண்டும் என்றால், பாட்டிலில் க்யூ ஆர் கோடு மற்றும் கடை எண் அடங்கிய ஸ்டிக்கர் இருப்பது அவசியம்.
ஸ்டிக்கர் நடைமுறைகள்
ஆனால், கடைகளில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் விற்கப்படுவதால், பாட்டிலைத் திரும்பக் கொடுத்து பணத்தைப் பெற முடியாமல் சிலர் சிரமம் தெரிவிக்கிறார்களாம்.. இது சில இடங்களில் கடை ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதங்களுக்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது. சில இடங்களில் இந்த நிலை போலீசார் தலையிடும் அளவுக்கு சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தேர்தல் நேரத்தில் இத்தகைய அதிருப்திகள் உருவாகாமல் இருக்க, சில இடங்களில் ஸ்டிக்கர் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற பேச்சும் உள்ளது. ஆனால், இதுகுறித்தெல்லாம் எங்கேயுமே அதிகாரப்பூர்வமான தகவல்கள் வரவில்லை..
எனினும், இது குறித்து திமுக தரப்பில் உள்ள சிலரிடம் விசாரித்தபோது, தேர்தல் பிரசாரங்களில் இந்த விவகாரம் பேசப்படக்கூடும் என்பதால் அப்படியொரு காரணம் இருக்கலாம் என்கிறார்கள்.
கோவை புறநகர் பகுதி
இது ஒருபுறமிருக்க, புறநகர்ப் பகுதிகளில் உள்ள கடைகளில் இன்னும் இந்த ஸ்டிக்கர் நடைமுறை தொடர்வது குறிப்பிடத்தக்கது. மாநகரப் பகுதிகளில் மட்டும் ஏன் இந்த மாற்றம் என்ற கேள்விக்கு டாஸ்மாக் அதிகாரிகள் தெளிவான பதில் அளிக்காமல், சில கடைகளில் ஸ்டிக்கர் தட்டுப்பாடு இருக்கலாம் என்றும், மற்றபடி அனைத்து இடங்களிலும் முறைப்படி விற்பனை நடப்பதாகவும் சொல்கிறார்கள்..
கள நிலவரப்படி நகர்ப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைமுறையில் சிறிய வேறுபாடு இருப்பது தெரிகிறது. ஒரு 10 ரூபாய் ஸ்டிக்கர் விவகாரம், கோவையில் தேர்தல் சூழலில் கவனிக்கப்படும் ஒரு விஷயமாக மாறியுள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications