மாணவனின் ஆர்வம்.. பிரியா முகத்தில் ஒரே சிரிப்பு.. உதயநிதி, அன்பில் மகேஷ் பூரிப்பு.. என்ன நடந்தது?
சென்னை: அமைச்சர்கள் வரிசையாக நின்றிருக்க மேயர் பிரியா மேடம் எங்கே சார் என்று அமைச்சர் உதயநிதியிடம் கேட்டான் ஒரு மாணவன். அப்போது அங்கிருந்த அமைச்சர்களோ.. இதோ வந்துட்டாங்க மேயர் பிரியா என்று உதயநிதி சொல்லவே, அதைக்கேட்டு முகம் முழுக்க சிரிப்பாக மாணவனிடம் பேசினார் பிரியா.
கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1 படித்த 4 லட்சத்து 89 ஆயிரத்து 600 மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான விழா சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு சார்பாக 5 லட்சம் மாணவ மாணவிகளுக்கு ரூ.234 கோடி மதிப்பீட்டில் இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. இதை இலவசமாக பார்க்காமல் கற்ற கல்விக்கு உரிமையாக பார்க்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். கல்வியை மட்டும் தான் யாராலும் எடுத்துகொள்ள முடியாது. ஒரு தாயாகவும் தந்தையாகவும் உங்களை பார்த்து கொள்ள தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். எனவே வேறு எங்கும் கவனம் செலுத்தாமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
இதனையடுத்து அமைச்சர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுக்க வரிசையான நின்றனர். அப்போது ஒரு மாணவன் அமைச்சர் உதயநிதியிடம், திரும்பி பிரியா மேடம் எங்கே சார் என்று கேட்டான். அதைக்கேட்ட உதயநிதி, சிரித்துக்கொண்டே மேயர் பிரியாவை பார்த்து இங்க வாங்க என்று அழைத்து இந்தா இருக்காங்க மேயர் பிரியா என்று சொன்னார். அப்போது அங்கு வந்த கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சிரிக்கவே, மேயர் பிரியாவிற்கு முகமெல்லாம் பூரிப்பாக இருந்தது. என்ன விசயம் என்று கேட்க அந்த மாணவன், தனது பகுதியில் இருந்த குறைகளை தெரிவிக்கவே, சீக்கிரம் கவனிக்கிறேன் என்று சொல்லி விட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications